இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா நாடாக்கும் முயற்சியில் மயாங்க்!
சோலார் கொண்டு இயங்கும் தானியங்கி டாய்லெட்’களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிறுவி வருகிறது இவரின் தன்னார்வ நிறுவனம்.
பல ஆண்டுகளாகவே இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக உருவாக்கும் முயற்சியில் பல்வேறு தனிநபர்களும் அரசாங்கங்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2.3 பில்லியன் பேருக்கு அடிப்படை கழிப்பறை வசதிகள் கிடைப்பதில்லை என அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 600 மில்லியனாக உள்ளது.
2014-ம் ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கம் தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கியது முதல் கிராமப்புறம் மற்றும் மெட்ரோ நகரங்களில் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்கப்பெற்றன. எனினும் இந்தக் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
நாட்டில் மோசமாக உள்ள சுகாதாரப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில், செயல்படுகிறது கர்வ் டாய்லெட்ஸ் (GARV Toilets). ஃபரிதாபாத்தைச் சேர்ந்த இந்த சமூக நிறுவனம் ஐஓடி-சார்ந்த கழிப்பறைகளை உருவாக்குகிறது.
மயாங்க் மிதா, மேகா பட்னாகர் மிதா தம்பதியால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்ட கர்வ் டாய்லெட்ஸ் இந்தியாவில் 721 கழிப்பறைகளை உருவாக்கியுள்ளது. கானா, நைஜீரியா, பூடான், நேபால் உள்ளிட்ட நான்கு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐஓடி சார்ந்த இந்தப் பொதுக் கழிப்பறைகளில் சூரியசக்தி மின் தகடுகள், பேட்டரி பேக், தானியங்கி ஃப்ளஷ், தரையை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம், பயோடைஜெஸ்டர் தொட்டிகள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்த உகந்த வகையில் மேற்கத்திய பாணி மற்றும் இந்திய கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் எளிதாக நகர்த்தக்கூடிய வகையிலும் எளிதாக உடைக்கமுடியாத வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
“என்ஜிஓ, கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நடவடிக்கைக் குழு போன்ற வாடிக்கையாளர்கள் ஒன்றிரண்டு கழிப்பறைகள் கட்ட விரும்பினால் ஒட்டுமொத்த அமைப்பையும் இரண்டு மணி நேரங்களில் நிறுவமுடியும். அதுமட்டுமின்று வழக்கமான கழிப்பறைகள் போலல்லாமல் எங்களது கழிப்பறைகளுக்கு மின்சாரம் அவசியமில்லை. இது முழுமையாக புதுப்பிக்கத்தக்கது. நாங்கள் ஆண்டிற்கு 102.4 டன் சிஓ2 குறைய உதவுகிறோம்,” என்றார்.
மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் முடித்துள்ள மயாங்க் ஆனந்த் பகுதியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மெண்டில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்த போது சுகாதார பிரச்சனைகள் குறித்து அறிந்துகொண்டார்.
“என்னுடைய பணி வாழ்க்கையின் பெரும் பகுதியை உற்பத்தித் துறையில் செலவிட்டேன். ஏர்டெல் மற்றும் டெலினார் நிறுவனங்களுடன் பணியாற்றியபோது கழிப்பறை கேபினட் போன்ற அமைப்பு கொண்ட பிடிஎஸ் கேபினட் உள்ளிட்ட டெலிகாம் உபகரணங்கள் தொடர்பாக செயல்பட்டோம்,” என்றார் மயாங்க்.
இந்திய பொதுக் கழிப்பறைகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து நன்கறிந்த மயாங்க் டெலிகாம் உபகரணங்கள் கொண்டு உலோகங்களால் கட்டமைக்கப்பட்ட கழிப்பறை கேபினட்கள் உருவாக்குவது பற்றி சிந்தித்தார்.
எனவே மயாங்க் தனது மனைவியுடன் இணைந்து 2014-ம் ஆண்டு உலோகம் கொண்டு கட்டமைக்கப்படும் பொதுக் கழிப்பறைகளை கட்டும் திட்டத்தைத் தொடங்கினார். 2015-ம் ஆண்டு கர்வ் டாய்லெட்ஸ் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் முன்னரே தயாரிக்கப்பட்ட (pre-fabricated) கழிப்பறை அமைப்பை உருவாக்கினர். இந்நிறுவனத்தில் 10 லட்ச ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.
பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போன்றே இவர்களும் ஏராளமான சவால்களை சந்தித்துள்ளனர், முழுமையான அமைப்பிற்கான கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த சம்மதிக்கவைப்பது சவாலாக இருந்தது. முதல் இரண்டாண்டுகள் இவர்களுக்கு அரசாங்கத்தின் தரப்பிலோ என்ஜிஓ-க்களின் தரப்பிலோ எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.
“இந்த மாதிரியைப் பின்பற்றுவதால் கட்டுமானப் பணிகள் விரைவாக முடிவடையும் என்பதை எடுத்துரைத்து சம்மதிக்க வைக்க முயற்சி செய்தோம். இந்தக் கழிப்பறைகளை ஒரு மாதத்திற்கு 300 யூனிட் வரை தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கமுடியும். ஆனால் ஒப்பந்ததாரரை நியமிக்கும்போது கழிப்பறைகளைk கட்டி முடிக்க கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை ஆகும். நீண்டகால அடிப்படையில் ஸ்மார்ட் கழிப்பறைகளை அமைப்பதற்கான செலவினை செயல்பாட்டு செலவின் வாயிலாக ஈடுகட்ட முடியும். அதேசமயம் வழக்கமான கழிப்பறைகளுக்கான பராமரிப்புச் செலவு எந்த ஒரு சமயத்திலும் அதிகமாகவே இருக்கும்,” என்றார் மயாங்க்.
தங்களது தயாரிப்பு மற்றும் வடிவமைப்புடன் தொழில்நுட்பத்தை இணைப்பதில் இவர்கள் சிரமத்தை சந்தித்தனர். ஏனெனில் இவர்கள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய அமைப்பை உருவாக்கவே விரும்பினர்.
2017-ம் ஆண்டு இருவரும் நகராட்சியுடன் இணைந்து சோதனைத் திட்டத்தை முயற்சித்தனர். நகராட்சி தரப்பில் செயல்பாடுகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துசெல்லப்படாததால் இந்த முயற்சி வெற்றியடையவில்லை. இதனால் இந்தக் குழுவினர் தங்களது முயற்சியை கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தினர்.
சுகாதாரத்தை மேம்படுத்துதல்
அதே ஆண்டு பாட்னாவில் அரசுப் பள்ளியில் கழிப்பறைகளை அமைக்க அறக்கட்டளை ஒன்று இந்நிறுவனத்தை அணுகியது. இங்கு அடிப்படை கட்டமைப்பு ஐஓடி சார்ந்து அமைக்கப்படவில்லை. ஒட்டுமொத்த திட்டத்திற்கான நிதியையும் கோகோ கோலா வழங்கியது. இன்று பீஹாரிலும் டெல்லியிலும் 18,000-க்கும் அதிகமான மாணவர்கள் கர்வ் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
“மக்களிடையே சுகாதாரத்தை மேம்படுத்துவதே எங்களது நோக்கம். நாங்கள் பள்ளி வளாகத்திற்குச் சென்றபோது பாதுகாப்பான சுகாதார வசதிகள் ஏற்படுத்தியிருப்பதால் மாணவர்கள் ஆர்வமாக வகுப்பிற்கு வருவதாக பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யும் விகிதமும் பெருமளவு குறைந்தது,” என்றார்.
சிறியளவில் இவ்வாறு வெற்றியடைந்த பிறகு மயாங்க் மக்களிடயே நல்ல வரவேற்பைக் கண்டார். பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக முன்னரே தயாரிக்கப்பட்ட சுமார் 100 கழிப்பறைகளை நிறுவினார்.
2018-ம் ஆண்டு 700-க்கும் அதிகமான கழிப்பறைகளை நிறுவப்பட்டது. இதில் 358 கழிப்பறைகள் மின்னணு சாராத வகையில் அடிப்படை வடிவமைப்பில் கட்டப்பட்டது.
வடிவமைப்பு குறித்து மயாங்க் கூறும்போது,
“கழிப்பறைகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் நிறுவனத்திற்குள்ளாகவே மேற்கொள்ளப்படுகிறது. மின்னணுப் பொருட்கள் மட்டும் வெளியில் இருந்து வாங்கப்படுகிறது. மின்னணு சார்ந்த முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட கழிப்பறைகளை கட்டுவதற்கு 2.7 லட்ச ரூபாய் முதல் 4 லட்ச ரூபாய் வரை செலவாகும். மின்னணு சாராத எளிமையான கழிப்பறை அமைப்பிற்கான செலவு 1.8 லட்ச ரூபாய்,” என்றார்.
ஐஓடி-சார்ந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டதால் கழிப்பறையை ஃப்ளஷ் செய்வது, கைகள் கழுவுவது, அமைப்பை சேதப்படுத்துவது உள்ளிட்ட பயனரின் நடத்தை ஆய்வு செய்யப்பட்டு மயாங்க் குழு சேவைகளை மேம்படுத்தியது.
“இந்த அமைப்பானது கழிப்பறை செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அதுதொடர்பான புகைப்படங்களை அனுப்புவதால் குழுவினர் பிரச்சனைகளை சீரமைக்க உதவுகிறது,” என்றார்.
இயற்கை வளங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரை இந்தக் கழிப்பறைகளுக்கு இரண்டு லிட்டருக்கும் குறைவான தண்ணீரே தேவைப்படும். வழக்கமான கழிப்பறைகளுக்கு ஐந்து முதல் ஆறு லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஏனெனில் ஒட்டுமொத்த அமைப்பும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்டதால் கழிப்பறையின் வெளிப்பரப்புகளை சுத்தப்படுத்த ரசாயனங்கள் ஏதும் தேவைப்படாது.
தற்போது இந்நிறுவனம் ஃபரிதாபாத் அருகே உள்ள ஒரு குடிசைப்பகுதியில் பணியாற்றி வருகிறது. இங்கு நான்கு பேர் அடங்கிய குடும்பம் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு மாதத்திற்கு 250-300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். மயாங்க் குழுவினர் இந்த குடிசைவாசிகளின் சுகாதாரம் தொடர்பான நடத்தையை கண்காணிக்கின்றனர். இது சுகாதார தீர்வுகளை ஊக்குவிப்பதால் கர்வ் டாய்லெட்ஸ் உடன் இணைந்துள்ள என்ஜிஓ-க்களுக்கு இது முக்கியமானதாகும்.
நெதர்லாந்து அரசாங்கத்துடனும் இக்குழுவினர் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்த அரசாங்கம் கானாவில் மயாங்கின் திட்டத்திற்கு ஆதரவளித்தது. இங்கு கர்வ் டாய்லெட்ஸ் சோதனை முயற்சியை மேற்கொண்டு உள்ளூர் மக்கள் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை கவனிக்க இரண்டு கழிப்பறைகள் கட்டியது.
“நைஜீரியா மற்றும் பூடான் அரசாங்கத்துடனும் பணியாற்றியுள்ளோம். சமீபத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கர்வ் கழிப்பறைகள் உருவாக்க உத்திரப்பிரதேச அரசாங்கத்திடம் இருந்து ஆர்டர் கிடைத்துள்ளது,” என்றார் மயாங்க் .
ஆதரவு, குழு மற்றும் வருங்காலத் திட்டம்
கர்வ் டாய்லெட்ஸ் அதன் முதல் விதை முதலீட்டையும் வழிகாட்டலையும் INVENT மூலம் பெற்றது. அதே ஆண்டு இக்குழுவின் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மானியம் கிடைத்தது.
தற்போது கர்வ் டாய்லெட் மயாங்க், மேகா, நேஹா உட்பட ஆறு உறுப்பினர்கள் அடங்கிய முக்கிய குழுவுடன் செயல்பட்டு வருகிறது. மற்ற குழுவில் 27 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் சிலரை பணியிமர்த்துகிறது. சிலரை வேலை வாய்ப்பு தொடர்புடைய இணையதளங்கள் மூலம் பணியிலமர்த்துகிறது. நீண்டகால அடிப்படையில் பராமரிப்பிற்கான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. இதில் கழிப்பறைகளை நிறுவுவதுடன் அவற்றை பராமரித்து வருவாய் ஈட்டுகிறது.
“டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இங்கு கழிப்பறைகளை நிறுவ உள்ளோம். பின்னர் இவை மெட்ரோ கார்டுகளுடன் இணைக்கப்படும். இதனால் பயனர்கள் இந்தக் கழிப்பறைகளைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்,” என்றார்.
கழிப்பறைகளின் வெளிப்புற சுவரை விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருவாய் ஈட்டப்படும்.
சந்தா அடிப்படையிலான மாதிரியை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் பயனர்கள் கழிப்பறை வசதியைப் பயன்படுத்திக்கொள்ள பிளான்களை வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி கழிப்பறைகளுக்கு வெளியில் குடிநீர் ஏடிஎம் அமைக்கவும் கர்வ் டாய்லெட்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: கிருஷ்ணா ரெட்டி | தமிழில்: ஸ்ரீவித்யா