'வெற்றிகரமாக தோல்வி அடைந்த 'CSK'- IPL 2019 கோப்பையை 4வது முறை வென்ற மும்பை இந்தியன்ஸ்!
நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஒன்று கூடி தொலைக்காட்சி முன் மூழ்கிக் கொண்டிருந்தனர். இரண்டு மாதங்களாக நடந்து வந்த Vivo IPL2019-ன் இறுதிச்சுற்று நேற்று ஹைதராபாத் மைதானத்தில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய இறுதிச்சுற்று நகத்தொடு சேர்த்து விரலையும் கடிக்கும் அளவுக்கு விறுவிறுப்பாகச் சென்றது. ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் CSK-வை வென்று 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியும் மும்பை அணியும் தலா 3 கோப்பைகளை வைத்திருந்தது. இதனால் 4வது கோப்பையை பெற்று, அதிக ஐபிஎல் கோப்பைகளை எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த சீசனில் MI மற்றும் CSK மோதிய மூன்று முறையும் மும்பையே வெற்றிப்பெற்றது, இதனால் 4வது வெற்றியாவது சென்னைக்கு கிடைக்குமா என்ற ஆர்வம் எழுந்தது.
இதற்கு முன் நடந்த இறுதிச்சுற்றுகளை விட இந்த இறுதிச்சுற்று இறுதிவரை போட்டியை கணிக்க விடாமல் நகர்த்திச் சென்றது. கடைசி ஓவரின் கடைசி பால் என்ற நிலையில் கூட ஆட்டம் இரு அணிக்கும் சாதகமாகவே இருந்தது. இது குறித்து பிரசன்டேசனில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி,
“இன்றைய ஆட்டம் வேடிக்கையாக இருந்தது, ஆட்டம் முழுவதும் கோப்பை இரு அணிகளுக்கும் மாறி மாறி சாதகமாக இருந்தது,” என்றார்.
முதலில் பேட் செய்த மும்பை அணி 150 ரன்கள் என்ற இலக்கை சென்னைக்கு நிர்ணயித்தது அதற்கு பின் ஆடிய சென்னை அணி நிதானமாக துவங்கினாலும் சில விக்கெட்களை இழந்தது. அதன் பின் சென்னை அணிக்காக வாட்சன் நின்று ஆடி ஆட்டத்தை சென்னைக்கு சாதகமாக கொண்டு வந்தார்.
ஆனால் மறுப்பக்கம் பூம்ரா தனது அசாத்திய பந்து வீச்சால் மீண்டும் ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பினார். 80 ரன்கள் எடுத்து வாட்சன் அவுட்டாக சென்னை திணறியது, கடைசி ஓவரில் 1 பாலுக்கு இரண்டு ரன்கள் எடுத்தால் சென்னை வெற்றி என்ற நிலையில் மலிங்கா போட்ட பந்து விக்கெட்டாக மாற மும்பை இந்தியன்ஸ் கப்பை அடித்தது.
சர்ச்சைகள்:
மும்பை வெற்றிபெற்றாலும் எல்லா போட்டிகளையும் போல் இதிலும் சில சர்ச்சைகள் எழுந்தது. 3 விக்கெட் இழப்புக்கு பிறகு சென்னைக்கு பேட்டிங் செய்ய தோனி களம் இறங்கினார். 8 பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்த தோனி, 2வது ரன் எடுக்க ஓடியபோது ரன் அவுட் செய்யப்பட்டார்.
நடுவர்களால் விக்கெட்டை கணிக்க முடியாததால் 3 வதுஅம்பயர்க்கு சென்று பல நிமிடங்கள் ஆய்வு செய்தபிறகு அவுட் வழங்கப்பட்டது. ஆனால் தோனி கிரீசை கடந்துவிட்டார் தவறான முடிவு என ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். இது நேற்று சமூக வலைதளத்தில் டாக் ஆகவும் மீமாகவும் வலம் வந்தது. ஒரு பக்கம் அவுட் என்றும் பலர் மறுத்து வருகின்றனர்.
ஆட்டத்திற்கு பின் பேசிய சச்சினும் தோனியின் விக்கெட் தங்கள் மும்பை அணிக்கு வலு சேர்த்ததாகவே தெரிவித்தார். இந்த முடிவு தவறில்லை என நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
விருதுகள்:
மும்பை இந்தியன்சுக்காக அபாரமாக பந்து வீசிய ஜப்ரித் பும்ராவிர்க்கு ’ஆட்ட நாயகன்’ விருது சென்றது. இந்த சீசனில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிக்காட்டி ஏராளமான ரசிகர்களை சம்பாதித்துள்ளார் பும்ரா.
இந்த சீசனில் அதிக விக்கெட்களை எடுத்த சென்னை அணியின் சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு ’பர்பிள் கேப்பும், 10 லட்சம் காசோலையும்’ கிடைத்தது. வெறும் 12 ஆட்டங்கள் மட்டுமே ஆடிய ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னருக்கு இந்த சீசனில் அதிக ரன்களை குவித்ததால் ’ஆரஞ்சு கேப்’ வழங்கப்பட்டது.
6 முறை ’ஃபேர் ப்ளே விருது’ பெற்ற சென்னை அணி இந்த முறை 6வது இடத்தில் இருந்தது, முதல் இடத்தில் இருந்த ’சன் ரைசர்ஸ் ஹைதராபாத்’ இந்த விருதை தட்டிச் சென்றது.
இந்த சீசனில் அதிரடி ஆட்டத்தை காட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அன்றே ரஸ்ஸல் ’மோஸ்ட் வால்யுபில் ஆட்டக்காரர்’ மற்றும் ’ஹாரியர் சூப்பர் ஸ்ட்ரைக்கர்’ விருதைப்பெற்று ஹாரியர் சொகுசு கார் மற்றும் 20 லட்ச காசோலையை பெற்றார்.
இந்திய இளம் ஆட்டக்காரர்களான ராகுல் சஹார் இந்த சீசனின் ’கேம் சேன்ஜர்’ விருதையும்; சுப்மன் கில் ’எம்ர்ஜிங் ஆட்டக்காரர்’ விருதையும் பெற்றனர்.
இதுவரை 5 முறை இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017 இல் கோப்பையை வென்றிருந்தனர். இப்போது 2019 கோப்பையை வென்று அதிக கோப்பைகளை வைத்திருக்கும் அணியாக பெருமையுடன் நிற்கின்றனர். சென்னை வீழ்ந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
இத்துடன் இந்த ஐபிஎல் விழா முடிவடைய அடுத்து மே 30 அன்று துவங்கும் உலக கோப்பைக்கு ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. இந்த ஐபிஎல் சிறந்த ஆட்டத்தை வெளிக்காட்டிய இந்திய வீரர்கள் உலகக் கோப்பையிலும் கலக்குவார்களா என பொறுத்து இருந்து பார்ப்போம்.