விண்ணில் பாய்ந்த SSLV ராக்கெட்: பள்ளி மாணவிகள் உருவாக்கிய ‘AzaadiSat' தோல்வியில் முடிந்ததா?
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 750 பள்ளி மாணவிகளால் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 750 பள்ளி மாணவிகளால் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகள் உருவாக்கிய சிறிய ராக்கெட்:
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி உள்ளிட்ட ராக்கெட்டுகளைத் தொடர்ந்து சிறிய விண் ஏவுதல் வாகனமாக உருவாக்கபட்ட எஸ்எஸ்எல்வி- டி1 (SSLV-D1) ராக்கெட் ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 9.18 மணி அளவில் விண்ணில் செலுத்தபட்டுள்ளது.
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை குறிக்கும் விதமாக, 75 கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து பெண் குழந்தைகள் குழுவால் 75 சிறிய மென்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தியாவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்களை விட மிகவும், குறைவான எடையைக் கொண்டது. 320 டன் எடையுள்ள பிஎஸ்எல்வி ராக்கெட், 16000 கிலோ எடையுள்ள செயற்கைகோள்களையும், 415 டன் எடையுள்ள ஜிஎஸ்எல்வி ராக்கெட் 5000 கிலோ எடை வரையிலான செயற்கைக் கோள்களையும் சுமந்து செல்லக்கூடியது நிலையில், 120 டன் எடையுள்ள SSLV-D1 ராக்கெட் 500 கிலோ வரையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் மிகச்சிறிய ஏவுகணை வாகனமான எஸ்எஸ்எல்வி டி-1 ஆனது, 8 கிலோ எடையுள்ள மைக்ரோசாட்லைட் ‘Azadi sat' 'ஆசாதி-சாட்' மற்றும் EOS 2 என்ற இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகியவற்றை சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்துள்ளது.
குறிப்பாக ஆசாதி-சாட் செயற்கை கோள் தயாரிப்பு திட்டத்தில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இத்திட்டத்திற்காக மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்துடன் சென்னை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பும் உதவியுள்ளது. அதேபோல் ’அசாதி சாட்’ செயற்கைகோள் தயாரிப்பு பணியில், தெலங்கானாவைச் சேர்ந்த 3 அரசுப் பள்ளி மாணவிகளின் குழுவும் பங்கேற்றுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விஞ்ஞானிகள் சிறிய அளவிலான செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை தயாரிக்க முயன்று வரும் நிலையில், 750 பள்ளி மாணவிகளால் உருவாக்கப்பட்டுள்ள எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட்டானது, 34 மீட்டர் உயரம், இரண்டு மீட்டர் விட்டம் மட்டுமே கொண்டதாக சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இரண்டு மைக்ரோ சாட்டிலைட்களை தாங்கிய படி சிறிய ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி டி-1 விண்ணில் சீறிப் பாய்ந்ததை, 750 பள்ளி மாணவிகளும் கண்டு ரசித்தனர்.
SSLV D-1 ராக்கெட் சிக்னல் துண்டிப்பு:
இன்று காலை சரியாக 9.18 மணி அளவில் சிறிய ரக ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி மூலம் விண்ணில் ஏவப்பட்ட இரண்டு மைக்ரோ சாட்டிலைட்களும் சுற்றுவட்டப்பாதையை அடைய விலை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்ட 13வது நிமிடத்தில் இருந்தே சிக்கனல் கிடைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், சுற்றுவட்டப்பாதைக்குச் செல்லும் முன்னரே செயற்கைக்கோள்கள் ராக்கெட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஸ்ரீமதி கேசன் கூறுகையில்,
“எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான அனைத்து செயல்முறைகளும் வெற்றிகரமாக நடந்தது. ஆனால், ராக்கெட்டை விட்டு செயற்கைகோள்கள் பிரிந்து செல்வதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த கட்டத்தில் சிக்னல் கிடைக்கவில்லை என்றும் சுற்றுவட்டபாதைக்கு முன்னதாகவே பிரிந்த ’AZAADISAT’ மைக்ரோ சாட்டிலைட்டின் நிலை என்ன என்பது தொடர்பாக இரவு தான் தெரிய வரும்,” எனத் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானிகள் திட்டப்படி, விண்ணில் ஏவப்பட்ட 12 நிமிடத்திற்கு பிறகு, SSLV-D1 முதலில் EOS-2 செயற்கைக்கோளையும், அதன் சில நிமிடங்களில் AZAADISAT செயற்கைகோளும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் செயற்கை கோள்களுடனான சிக்னல் துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கூறிகையில்,
“எஸ்.எஸ்.எல்.வி-டி1 ராக்கெட்டை ஏவும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது. ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் எதிர்பார்த்தபடியே செயல்பட்டன. ராக்கெட்டின் முந்தைய கட்டத்தில் சில தரவு (Data loss) இழப்பு உள்ளது. செயற்கைகோள்களின் நிலையை பற்றி கண்டறிய முதற்கட்ட தகவல்களை சேகரித்து வருகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோள்களின் தற்போதைய நிலவரம் என்ன?
SSLV இன் இந்த நிலைக்குக் காரணம் வெலாசிட்டி டிரிம்மிங் மாட்யூல் (VTM) எனப்படும் அமைப்பில் தோன்றிய பிரச்சனையாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு 20 முதல் 653 விநாடிக்குள் அது செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால் 0.1 விநாடிகளிலேயே அமைப்பு செயலிழந்து ராக்கெட்டிற்கு தேவையான வேகத்தை கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட வேண்டிய இரண்டு மைக்ரோ சாட்டிலைட்டுகளும் ராக்கெட்டை விட்டு பிரிந்து, நீள் வட்டப்பாதையில் நுழைந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
VTM இன் தோல்வியின் காரணமாக, செயற்கைக்கோள்களை செலுத்திய பிறகு சுற்றுப்பாதையில் இருக்க வேண்டிய ராக்கெட்டின் பகுதி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று வானியலாளர் மற்றும் விண்வெளிப் பயண கண்காணிப்பாளரான ஜொனாதன் மெக்டோவல் தெரிவித்துள்ளார்.