RISAT-2BR1 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!
பிஎஸ்எல்வி செலுத்துவாகனம் 50-வது பயணத்தை வெற்றிகரமாக நடத்தி, ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியுள்ளது என்று இஸ்ரோ.
பிஎஸ்எல்வி செலுத்துவாகனம் 50-வது பயணத்தை வெற்றிகரமாக நடத்தி, ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் திரு. கே.சிவன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி – சி48 மூலம் ரிசாட் – 2பிஆர்1 செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டபின், இதனைத் தெரிவித்த அவர், இந்த செயற்கைக்கோள், 576 கிலோமீட்டர் தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 26 ஆண்டுகளாக பிஎஸ்எல்வி செலுத்து வாகனப் பணிகளில் ஈடுபட்ட டாக்டர் ஸ்ரீநிவாசன், ஜி மாதவன் நாயர் உள்ளிட்ட இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளையும், தற்போது இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் இளம் விஞ்ஞானிகளையும் அவர் பாராட்டினார்.
பிஎஸ்எல்வி செலுத்துவாகனம் தொடக்கத்தில் 1.9 டன் எடையுள்ள செயற்கைக் கோளினை கொண்டு செல்லும் திறன்கொண்டதாக இருந்தது. ஆனால், இது படிப்படியாக அதிகரித்து தற்போது 52.7 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏந்திச்செல்லும் திறனைப் பெற்றுள்ளது. இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளை அவர் பாராட்டினார்.
இந்த செலுத்துவாகனம் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்களில் 30 சதவீதம் இந்தியாவுக்கானவை என்றும் 70 சதவீதம் வெளிநாடுகளுக்குரியவை என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 75-வது முறையாக செயற்கைக்கோள் செலுத்தப்படுவது மேலும் ஒரு மைல்கல்லாகும் என்று திரு கே சிவன் குறிப்பிட்டார்.
தற்போது அனுப்பப்பட்டுள்ள ரிசாட் - 2பிஆர்1 செயற்கைக்கோள் நவீனமானது என்று கூறிய அவர், மேலும் பல பெரும் பணிகளை செய்ய வேண்டியுள்ளது என்றார்.
பிஎஸ்எல்வி 50 என்ற தொகுப்பு நூலை வெளியிட்ட திரு.சிவன், இந்த செலுத்து வாகனம் பற்றிய முழு விவரங்களும் இதில் இடம்பெற்றிருப்பதாகக் கூறினார். மேலும், இதன் மூலம் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைக்கோள்கள் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் செயற்கைக்கோள்கள் பற்றிய விவரங்களும் இதில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி– சி48 மூலம் ரிசாட்– 2பிஆர்1 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இத்துடன் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான ஒன்பது செயற்கைக் கோள்களும் செலுத்தப்பட்டன.
ரிசாட் செயற்கைக்கோள் ராடார் மூலம் புவிப்பரப்பை கண்காணித்துத் தகவல்களை அனுப்புவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ வடிவமைத்து தயாரித்ததாகும். வேளாண்மை, வனவளர்ப்பு ஆகியவற்றுக்கு பயனுள்ள தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற முடியும் என்பதோடு, பேரிடர் நிர்வாகத்திற்கும் உதவிகரமாக இருக்கும்.
628 கிலோகிராம் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், 576 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புவிவட்டப் பாதையில் செலுத்தப்படுகிறது.
இந்த செயற்கைக்கோளை தாங்கிச் சென்றுள்ள பிஎஸ்எல்வி, 50-வது செலுத்து வாகனம் என்பதும், சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 75-வது முறையாக செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மட்டும் இஸ்ரோ 6 செயற்கைக் கோள்களை செலுத்தியுள்ளது.