சீன அரசின் பகையை சம்பாதித்த ஜாக் மா: 20,550 கோடி ரூபாய் அபராதம் பெற்ற அலிபாபா!
அலிபாபா குழுமத்துக்கு சீன அரசு கொடுத்த அதிர்ச்சி!
கடந்த அக்டோபர் 24ம் தேதி சீன வங்கியாளர்கள் கலந்துகொண்ட பொதுச்சபையில் பங்கேற்ற உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா,
"சீன நிதித்துறை காலத்துக்கேற்ப புதுமைகளை புகுத்தவில்லை. வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் போதுமான நிறுவனங்கள் இல்லை,” என்று அரசின் வங்கித்துறை குறித்து கடுமையான விமர்சனத்தை பொதுவெளியில் முன்வைத்தார்.
அப்போது சீன அரசுக்கும், ஜாக் மாவுக்குமான பிரச்னை ஆரம்பமானது. பொதுவாக ஜாக்மாவை பொறுத்தவரை விமர்சனங்களை முன்வைக்கத் தயங்காதவர். ஆனால் அவர் இதற்கான எதிர்வினைகள் குறித்து அப்போது பயப்படவில்லை. இந்த பேச்சுக்கு பிறகு சீன அரசு ஜாக்மாவுக்கு செக் வைக்க ஆரம்பித்தது.
அதன்படி, அலிபாபா நிறுவனத்தின் மோனோபொலி கொள்கையை நொறுக்கியது. Monopoly கொள்கை என்பது, அலிபாபா நிறுவனத்துக்கு பொருள்கள் விற்கும் ஒரு நிறுவனம் அதேபொருளை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்க முடியாது. வேறு நிறுவனங்களில் விற்பனை செய்யும் பொருளையும் அலிபாபாவில் விற்க முடியாது. இது தான் இக்கொள்கை.
நீண்ட காலமாக இருக்கும் இந்த கொள்கை அரசின் விதிமுறைக்கு எதிராக இருக்கிறது என்று கூறி அலிபாபா நிறுவனத்துக்கு அரசு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதனால், 9 சதவிகித அளவுக்கு அலிபாபா நிறுவன பங்குகள் சரிந்தன. இந்த Monopoly கொள்கை மூலமாக ஜாக் மாவின் அலிபாபா குழுமம் ஆன்லைன் சந்தை விதிமுறைகள மீறியதோடு மேலாதிக்க சந்தை நிலையை முறை தவறி பயன்படுத்தியுள்ளதாக சீன அரசு குற்றம் சாட்டி இருந்தது.
இதன் விசாரணை முடிவில், தற்போது அலிபாபா குழுமத்துக்கு சீன அரசு அபராதம் விதித்துள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான கடந்த 2019 ஆம் ஆண்டில் அலிபாபா குழுமம் ஈட்டிய வருமானத்தில் 4 சதவீதத்தை அதவாது 18 பில்லியன் யுவான் (2 பில்லியன் டாலர்கள்), இந்திய மதிப்பில் சுமார் 20,550 கோடி ரூபாய் அபராதமாக விதித்து அதிரடி காட்டியுள்ளது.
முன்னதாக இந்த விவகாரத்தில் அரசுக்கும் நிறுவனத்துக்கும் எழுந்த மோதல் காரணமாக கடந்த நவம்பர் மாதத்துக்கு பிறகு ஜாக் மா வெளியே தலைகாட்டவில்லை. 2 மாதங்களாக ஜாக்மா வெளியே எங்கேயும் வரவில்லை. அலிபாபா நிறுவனத்தின் பொறுப்புகளைக் கவனிக்க வேறொரு அதிகாரியை நியமித்துவிட்டு, வெளியே வருவதை நிறுத்திக்கொண்டார். இது சர்ச்சையாக வெடிக்க, அதன்பின்னரே அலிபாபா வெளியே தலைகாட்டினார்.
தொகுப்பு: மலையரசு