ரீடிவீட் செய்த ஃபாலோயர்களுக்கு ரூ.64.36 கோடி பரிசு தந்த ஜப்பான் தொழிலதிபர்!
வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் போன பிரபல ஜப்பான் தொழிலதிபர் யூசகு, இந்த பரிசை வழங்க என்னக் காரணம் என்று சொல்லியுள்ளார் தெரியுமா?
இந்த உலகத்தில் மனிதர்களாகட்டும், விலங்குகள் அல்லது பறவைகள் ஆகட்டும், எல்லோருக்குமே பரிசுகள் என்பது எப்போதுமே பிடித்தமான ஒன்று தான். சிலருக்கு வாங்குவது பிடிக்குமென்றால், சிலருக்குக் கொடுப்பது பிடிக்கும். தனக்கு பிரியமானவர்களுக்கு அல்லது மறக்க முடியாத உதவி செய்தவர்களுக்கு கைமாறு என பரிசுகள் தந்து அசத்தும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். இது ஒரு வகை என்றால் தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்கள் மகிழ்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது மற்றொரு வகை.
இதில் இரண்டாவது வகையைத் தேர்ந்தெடுத்து இன்று சமூகவலைதளங்களில் ஹீரோவாகி இருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த யூசகு மேசவா என்ற தொழிலதிபர். பிரபல பேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோடவுனின் சி.இ.ஓ. தான் இந்த யூசகு. இவரது பெயர் இப்படிச் செய்திகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல.
இவர் சமீபத்தில் நிலாவுக்கு வான்வழி ட்ரிப் கூட்டிக்கொண்டு போவதற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பல கோடிகளைக் கொடுத்து முன்பதிவு செய்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். அதோடு, பல வரலாற்று சிறப்பிமிக்க பொருட்கள் மற்றும் கலைநயப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவது, ஸ்போர்ட்ஸ் ரக கார்களை கோடிக்கணக்கில் வாங்கிச் சேர்ப்பது போன்றவை இவரது பொழுதுபோக்கு.
மேலும் பணம் குறித்த முக்கியத்துவத்தையும், அது தனி மனிதனின் வாழ்வில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் தெரிந்து கொள்ள தனக்கே உரித்தான பாணியை கையாண்டு ஆச்சரியப்படுத்துவார். இதனாலேயே இவரது பெயர் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.
புத்தாண்டு அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் யூசகு. அதாவது தனது டிவீட்டை ரீடிவீட் செய்பவர்களில் ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மொத்தமாக 9 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என அவர் அறிவித்தார். இந்திய மதிப்பில் மொத்த பரிசுத் தொகை ரூ. 64.36 கோடிக்கு மேல். அதாவது தலா ரூ. 6.5 லட்சம் ஆகும்.
இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 1000 பேரும் 7ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று அந்த ட்வீட்டிலும் யூசகு தெரிவித்திருந்தார். மாபெரும் கோடீஸ்வரரான யூசகுவை டிவிட்டரில் 6.8 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கிறார்கள். எனவே, அவரின் இந்த டிவீட்டை சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரீடிவீட் செய்தனர். அதன் தொடர்ச்சியாக வெற்றியாளர்கள் ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பரிசுத் தொகையை யூசகு பகிர்ந்தளித்துள்ளார்.
தனது ஜோஜோடவுன் ஆன்லைன் பேஷன் நிறுவனத்தை சமீபத்தில் சாஃப்ட் பேங்க் குரூப் கார்ப்பரேஷனுக்கு விற்பனை செய்தார் யூசகு. அதன் மூலம் அவருக்கு 900 மில்லியன் டாலர் பணம் கிடைத்தது. அதாவது இந்திய மதிப்பில் 6 ஆயிரத்து 409 கோடியே 17லட்சத்தை அவர் பெற்றார். அந்தப் பணத்தில் இருந்து தான், ஆயிரம் பேருக்கு கிட்டத்தட்ட ரூ. 64.36 கோடியை அவர் பரிசாக அளித்திருக்கிறார்.
தனது மகிழ்ச்சியைக் கொண்டாட அவர் இந்த பரிசை அளிக்கவில்லை. பிறகெதற்கு இவ்வளவு பெரிய தொகையை அவர் பரிசாக அளித்தார் என குழப்பமாக இருக்கிறதா? அதற்கான காரணத்தையும் அவர் யூடியூப் மூலம் விளக்கமாகக் கூறியிருக்கிறார்.
அதாவது,
‘பணம் எப்படி மனிதர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காகத் தான் இவ்வளவு பெரிய தொகையை அவர் பரிசாக அளித்திருக்கிறாராம். தற்போது அவர் தேர்ந்தெடுத்து பரிசுப் பணம் அளித்துள்ள நபர்கள் மூலம் அவர்கள் எந்தளவிற்கு மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளத் தான் இந்த முயற்சியாம். இந்த பணத்தின் தாக்கம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்’ என்றும் யூசகு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
யூசகுவின் இந்த செயல் கிட்டத்தட்ட சர்வதேச அடிப்படை வருமானம் (Universal Basic Income - BI) என்ற கருத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளுள் ஒன்று தான்.
இது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஆண்ட்ரூ யாங் என்பவரது ஐடியா ஆகும். அதிபர் தேர்தலுக்காக ஆண்ட்ரூ இந்த வாக்குறுதியை முன்வைத்துள்ளார். அதாவது, ‘தான் அமெரிக்க அதிபராக தேர்வானால், மாதந்தோறும் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ஆயிரம் டாலர் வழங்கப்படும்’ என அவர் அறிவித்திருக்கிறார்.
லாப நோக்கற்ற வேலைவாய்ப்பு உருவாக்கும் வென்ச்சர் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்தை உருவாக்கியவர் ஆண்ட்ரூ யாங் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.