12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழகத்தில் 7 இடங்களில் கால்பதிக்கும் மாஃபா நிறுவனம்!
தமிழகத்தில் புதிதாக 7 இடங்களில் ‘மாஃபா’ நிறுவனம் அமைத்துள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் திறன் மேம்பாட்டு மையம் மூலமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தர உள்ளதாக அதன் நிறுவனர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
Induja Raghunathan
Thursday December 09, 2021 , 2 min Read
தமிழகத்தில் புதிதாக 7 இடங்களில் ‘மாஃபா’ நிறுவனம் அமைத்துள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் திறன் மேம்பாட்டு மையம் மூலமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
பிசினஸ் மேன் டூ அரசியல்:
அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் பாண்டியராஜன். அரசியலில் மட்டுமல்ல தொழிலும் கில்லியாக செயல்பட்டவர். பாண்டியராஜன் 1992ஆம் ஆண்டு ‘Mafoi’ என்ற பெயரில், மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கினார். மனைவி லதாவுடன் இணைந்து 60 ஆயிரம் என்ற சிறிய முதலீட்டில் பாண்டியராஜன் தொடங்கிய அந்த நிறுவனம், 1000 கோடி என்ற இலக்கை 2010ம் ஆண்டே எட்டியது. பிறகு 2015ஆம் ஆண்டு CIEL என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
2016ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் தலைவராக இருந்தார். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பின்னர், மீண்டும் தொழிலில் கவனம் செலுத்த முடிவெடுத்த பாண்டியராஜன், கடந்த ஜூலை மாதம் CIEL நிறுவனத்தின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாஃபா நிறுவனத்தின் அசுர வளர்ச்சி:
இந்தியாவின் மிகப்பெரிய மனிதவளச் சேவை நிறுவனமாக வளர்ந்துள்ளது மாஃபா நிறுவனம். உலகம் முழுவதும் 14 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 41 இடங்களில் 54 அலுவலகங்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
30 வருட அனுபவத்துடன், இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு CIEL மூலம் ஆள் சேர்ப்பு சேவைகள் மற்றும் மனிதவள மேம்பாடு சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
CIEL நிறுவனம் 2,300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்துள்ளது. 55,000 க்கும் மேற்பட்ட நிபுணர்களை வைத்துள்ளது, மேலும், குறுகிய காலத்தில் ஏற்கனவே 17,000 பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. உற்பத்தி, ஆற்றல், உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங், நிதிச் சேவைகள், நுகர்வோர் பொருட்கள், பார்மா மற்றும் சேவைகள் துறைகளுக்கான திறமையான நபர்களை கண்டறிந்து, அவர்களை சரியான இடத்தில் பணியமர்த்தும் வேலையை CIEL நிறுவனம் செய்து வருகிறது.
7 மாவட்டங்களில் புதிய மையங்கள் தொடக்கம்:
‘மாஃபா’ திறன் மேம்பாட்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் அந்நிறுவனத்தின் கிளை திறக்கப்பட்டுள்ளது.
இதற்காக சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய மாஃபா மற்றும் CIEL HR Services நிறுவனத்தின் தலைவரான பாண்டியராஜன்,
“2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் மொத்தம் 242 மையங்களைத் திறக்க உள்ளோம், அவை அந்தந்த அரசுத் துறைகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களுடன் இணைந்து நாட்டிலுள்ள 748 மாவட்டங்களில் நல்ல முன்னேற்றத்தை உருவாக்கும்,” எனக்கூறினார்.
“இன்று தொழில்நுட்பம் மிக வேகமாக மாறி வருகிறது, ஒவ்வொருவரும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். தற்போதைய தொற்றுநோய் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது, எனவே பல நிறுவனங்கள் நகரங்களுடன் தொடர்புடைய ஆபத்தைக் குறைக்க கிராமப்புற விரிவாக்கத்தை பரிசீலித்து வருகின்றன.
30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புத் துறையில் செயல்பட்டு வருவதால், நாங்கள் பொருத்தமானதைச் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம், என Ma Foi குழுமம் மற்றும் CIEL HR Services இணை நிறுவனர் லதா ராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிதியுடன் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள ‘மாஃபா திறன் மேம்பாட்டு மையம்’ அடுத்த ஆண்டு இறுதிக்குள் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் மாஃபா பாண்டியராஜன் உறுதியளித்துள்ளார்.