‘இணைப்பிரியா சிறுத்தை ஜோடி’ - 6 நாள் காத்திருந்து மிதுன் எடுத்த வைல்ட் போட்டோ!
‘ஜங்கில் புக்’ திரைப்படத்தில் வரும் கறுஞ்சிறுத்தை ‘பகீரா’ போலவே இருக்கும் இந்த சிறுத்தை ஜோடியுடன் வலம்வந்த போட்டோக்கள் பலரை கவர்ந்திழுத்தது.
இதோ மேலே உள்ள இந்த போட்டோ தான் சில வாரங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பலரால் பகிரப்பட்டது. ‘ஜங்கில் புக்’ திரைப்படத்தில் வரும் கருஞ்சிறுத்தை ‘பகீரா’ போலவே இருக்கும் இந்த சிறுத்தை பலரை கவர்ந்திழுத்தது. அதே புகைப்படத்தில் கருஞ்சிறுத்தை உடன் ஜோடியாக மற்றொரு சிறுத்தை இருப்பதும் இந்த போட்டோவின் ஹைலைட்.
கேமரா லென்சை நோக்கும் அந்த இரு சிறுத்தைகளைப் படம் பிடித்தது யார்? இவை இரண்டும் ஜோடி சிறுத்தைகளா? என்று பலரும் தேடத் தொடங்கினர்.
இந்த ஜோடி சிறுத்தையை நேரடியாக கபினி காடுகளில் படம் பிடித்தவர் மிதுன் எச் என்ற போட்டோகிராபர். தனது இன்ஸ்டாகிராமில் தான் எடுத்த போட்டோக்களை பதிவிட்டு,
‘சாயா’ என்ற கருஞ்சிறுத்தை, ‘கிளியோபாட்ரா’ என்ற பெண் சிறுத்தை; ‘இணைப்பிரியா ஜோடி’ (Eternal Couple), என தலைப்பிட்டிருந்தார் மிதுன்.
இந்த சிறுத்தைகள் 4 ஆண்டுகளாக ஜோடியாக வலம் வருகின்றன. ஒவ்வொரு முறை இந்த ஜோடியை பார்க்கும்போதும் கண்களுக்கு விருந்தாகும்...
இந்த காதல் ஜோடி வலம் வரும்போது கபினி காடுகள் உயிர் பெறுகின்றன. இணை பிரியாமல் சுற்றித் திரியும் இந்த ஜோடியை வழி நடத்துவது பெண் சிறுத்தை கிளியோ. கிளியோபாட்ரா முன்னால் நடக்க, பின்னால் தொடர்கிறது சாயா.
தன் புகைப்பட அனுபவங்களைப் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் இடம் பகிர்ந்த 31 வயது மிதுன்,
“நான் இந்த புகைப்படத்தை எடுக்க 6 நாட்கள் ஒரே இடத்தில் காத்திருந்தேன். நான் இருந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சாயா மற்றும் கிளியோ சிறுத்தை ஜோடி புதர்களுக்குப்பின்னால் கொஞ்சி விளையாடும் சப்தங்களைக் கேட்டவாறே காத்திருந்தேன். ஆனால் என்னால் சிறுத்தைகளை காணமுடியாமல் இருந்தது,” என்றார்.
காட்டில் புகைப்படம் எடுக்க, மிருகங்களை காத்திருந்து அதன் வழிதடத்தை அறிந்து அங்கே பொறுமையாக பல நாட்கள் இருந்தால் மட்டுமே சரியான தருணத்தில் புகைப்படம் எடுக்கமுடியும் என்று அறிந்திருந்தார் மிதுன்.
12 ஆண்டுகள் வைல்ட்லைஃப் போட்டோகிராபியில் அனுபவம் கொண்ட அவர், கபினி காடுகளில் சுற்றித்திரிந்த இந்த சிறுத்தை ஜோடியின் வழித்தடத்தை அறிந்து, அவை வேட்டையாடும் விதத்தை புரிந்து கொண்டு, 6 நாட்கள் அதன் வழியில் காத்திருந்ததன் பலனாக இந்த அற்புதமாக போட்டோக்களை அவரால் எடுக்க முடிந்துள்ளது.
“என் காத்திருப்புக்கு பலன் கிட்டியது. இது போன்ற ஒரு பொன்னான வாய்ப்புக்காக 6 வருடங்கள் கூட நான் காத்திருப்பேன்,” என்கிறார் மிதுன்.
நேட் ஜியோ வைல்ட் டிவிக்காக சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகளை படம் பிடித்து தருபவர் மிதுன். ‘The Real Black Panther’ என்ற தலைப்பில் தற்போது அவர் பணியாற்றி வருகிறார். அந்த சமயத்தில் எடுத்த இந்த புகைப்படங்களே தற்போது வைரலாகி உள்ளது.
“இந்த போட்டோக்கள் வைரலாவதில் மகிழ்ச்சி, ஆனால் அதை எடுத்த என் பெயருடன் மக்கள் வெளியிட்டால் அது சரியான அணுகுமுறை,” என்றார்.
பெங்களுருவைச் சேர்ந்த மிதுன், சிறுத்தை ஜோடி பற்றி மேலும் விவரிக்கையில், சாயா என்ற கருஞ்சிறுத்தை 2016ல் கிளியோ என்ற சிறுத்தையுடன் முதன்முதலில் இணைந்தது. அப்போது முதல் அந்த ஜோடியை தான் பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த வைரல் போட்டோ பற்றி விளக்கிய மிதுன்,
“அந்த புகைப்படத்தின் சிறப்பே, அவை இரண்டும் நேருக்கு நேர் என் கேமரா லென்சை பார்த்தபோது க்ளிக் செய்யப்பட்டது தான். பலமுறை இந்த ஜோடியை நான் போட்டோ எடுத்திருந்தாலும், இரண்டு சிறுத்தைகளும் ஒரே சமயத்தில் என்னை நோக்கி பார்த்த தருணம் ஒரு அற்புதமான புகைப்படத்துக்கு வழி செய்தது,” என்றார்.
கடந்த சில மாதங்களாகவே பகிரா போல் இருக்கும் கருஞ்சிறுத்தை சாயா மக்களை வெகுவாக கவர்ந்தது. காட்டுக்குள் பணிபுரிவது ஒரு சிறந்த அனுபவம். ஒவ்வொரு நாளும் அதில் கிடைக்கும் இன்ப அதிர்ச்சிகள் வாழ்வில் மறக்கமுடியாததாக அமையும் அதுவே இந்த துறையில் தனக்கு ஆர்வத்தை அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறார் மிதுன்.
கட்டுரை உதவி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், படங்கள்: முதுன் எச் இன்ஸ்டா பக்கம்