ஸ்ரீ முக்த்சர் சாஹிப் முதல் டோக்கியோ வரை: கமல்ப்ரீத் என்னும் சாதனைப் பெண்ணின் கதை!
1.3 பில்லியன் இந்தியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள கமல்ப்ரீத்!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கனவை மேலும் பிரகாசமாக்கி இருக்கிறார் வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கவுர். 25 வயதான இவர், நேற்றுமுன்தினம் நடந்த தனது மூன்றாவது போட்டியில் 64 மீ தூரம் எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். வட்டு எறிதலில் இந்திய அளவில் பல்வேறு சாதனைகளை முறியடித்த கமல்ப்ரீத்துக்கு இது தான் முதல் ஒலிம்பிக்.
இன்று நடக்கவிருக்கும் போட்டியில் நிச்சயம் இவர் பதக்கம் வெல்வார் என்கிறார்கள் இவரை அறிந்தவர்கள். ஏனென்றால், இந்த ஆண்டு இந்திய அளவில் நடந்த போட்டிகளில் இரண்டு முறை 65 மீட்டர் தூரம் வட்டெறிந்து சாதனை படைத்த கமல்ப்ரீத் உலகின் சிறந்த வட்டு எறிபவர்களில் ஒருவராக உருமாறினார்.
பஞ்சாப்பின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டம் முதல் டோக்கியோ ஒலிம்பிக் வரை, கமல்ப்ரீத்தின் கதை உத்வேகம் தரக் கூடிய ஒன்று. கஷ்டங்களும், விடாமுயற்சியும் ஒருங்கே அமைந்த அவரின் வாழ்க்கையை இங்கே பார்ப்போம்.
கமல்ப்ரீத் படிப்பில் அவ்வளவு சுட்டி ஒன்றும் கிடையாது. ஆனால் விளையாட்டில் கில்லி. பள்ளிப் பருவத்திலேயே அவர் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்தத் தொடங்கினார்.
பெரும்பான்மையான இந்தியக் குழந்தைகளைப் போலவே, கமல்பிரீத்த்தும் ஒரு கிரிக்கெட் வீரராக மாற விரும்பியிருக்கிறார். ஆனால் பயிற்சியாளர் ஷாட்-புட் விளையாட்டை அவருக்கு பரிந்துரைத்து விளையாட வைத்துள்ளார். பின்னர் இவரின் உயரம், உடல்வாகு, ஆக்ரோஷமான விளையாட்டு பாணி ஆகியவை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரின் கண்ணில் பட அவரின் ஆலோசனையின் பேரில் பாதை மாறி இருக்கிறார்.
உடற்கல்வி ஆசிரியரால் வட்டு எறிதல் விளையாட்டுக்கு மாறினாலும், இதில் தனது வழக்கமான தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்த 10ம் வகுப்பு படிக்கும்போதே மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார் கமல்ப்ரீத். அது தான் அவர் பங்கேற்ற முதல் பெரிய போட்டி. இதில் பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர் பெரிதாக சோர்ந்துபோகவில்லை. மீண்டும் பயிற்சியைத் தொடங்கினார். விடா முயற்சியுடன் போராட ஆரம்பித்தார். அதன்பயனாக அடுத்த சில ஆண்டுகளிலேயே வட்டு எறிதலில் தனித்துவமாக உருவானார்.
2013ல் பெங்களூரில் நடந்த ஜூனியர் நேஷனல்ஸில் வெண்கலம், 2017 உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் ஆறாவது இடம், 2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது இடம் என்று கமல்பிரீத் அடுத்தடுத்த ஆண்டுகளில் சர்வதேச களங்களில் ஜொலிக்க ஆரம்பித்தார்.
இப்படி பல சாதனைகள் செய்தாலும், ஒரு தொழில்முறை விளையாட்டு வீரராக மாற அவர் நிறைய தடைகளை எதிர்கொண்டார். அதில் அவரின் கிராமத்தில் இருக்கும் பழக்கம் ஒன்று அவரை அச்சுறுத்தியது. அது,
பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பது. இதில் இருந்து தப்பிப்பதற்காகவே விளையாட்டையும், படிப்பையும் விடாமல் தொடர்ந்துள்ளார் கமல்பிரீத்.
இவரின் குடும்பம் பஞ்சாப்பின் பிரதான தொழிலான விவசாயத்தையே செய்துவருகிறது. விவசாயப் பின்னணியில் இருந்து வந்தாலும், கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி படிப்பையும், விளையாட்டையும் தொடர்ந்துள்ளார். கமல்பிரீத் படிப்பதிலோ, விளையாடுவதிலோ அவரின் தாய்க்கு பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால், தந்தை குல்தீப்பின் ஆதரவுடன் சரியில்லாத ஹாஸ்டல் உணவு முதல் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் அவரை அனைத்தையும் போராடி பெற்றார். எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகப் போராடி எல்லா தடைகளையும் தாண்டினார்.
ஆரம்பத்தில் ஸ்பான்சர்கள் யாரும் கமல்பிரீத்தை ஆதரிக்க முன்வரவில்லை. இதையடுத்து, தந்தை குல்தீப்,
தன்னிடம் இருந்த நிலத்தை ரூ.1 லட்சத்துக்கு விற்று கமல்பிரீத்தை தனியார் மையத்தில் பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். சாதாரண கேன்வாஸ் ஷூவை அணிந்து பயிற்சி மேற்கொண்ட கமல்பிரீத், தனது விடா முயற்சி மற்றும் கடின உழைப்பால் இப்போது இந்தியாவே பெருமைப்படும் ஒரு நிலைக்கு உயர்ந்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கம் முதலே கமல்பிரீத்துக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தடகள கூட்டமைப்பு கோப்பையில் 63.5 மீ தூரம் வட்டு எறிந்து ஒலிம்பிக்கிற்கு தகுதியானார். 65.06 மீட்டர் தூரம் வீசி தேசிய அளவு ரெக்கார்டு அடித்தார். 65 மீ இலக்கை எட்டிய ஒரே இந்திய வீராங்கனை, அதுவும் இரண்டு முறை எடுத்தவர் என்றால் கமல்பிரீத் மட்டுமே. தடகள கூட்டமைப்பு கோப்பைக்குப் பிறகு, இந்திய கிராண்ட் பிரிக்ஸ்- IV இல் தனது சொந்த சாதனையாக இருந்த 65.06 மீட்டரை முந்தி 66.59 மீ தூரம் வரை எறிந்து சாதனையை படைத்தார்.
இவ்வளவு சிறப்பாக திறனை வெளிப்படுத்திய அவர்மீது சக போட்டியாளர்கள் சந்தேகங்கள் எழுப்பினர். குறுகிய காலத்தில் அவரின் ஆட்டத்திறன் பெரிய அளவு முன்னேற்றம் கொண்டுள்ளதால், ஒரு கட்டத்தில் மூத்த விளையாட்டு வீரர்கள் ஹைபராண்ட்ரோஜனிசம் என்ற பரிசோதனையை கேட்கக் கூடச் சென்றனர். கமல்பிரீத், நிச்சயமாக, குற்றச்சாட்டுகளை மறுத்தார். இது போன்ற தடைகளை மீறி வந்து தான் தற்போது இந்தியாவுக்கான பதக்கக் கனவை நிறைவேற்ற இருக்கிறார்.
இன்று அவர் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள இருக்கும் நால்வருமே சிறந்தவர்கள். அதிலும் வலேரி ஆல்மேன் என்ற அமெரிக்க வீராங்கனை இந்த ஆண்டு மட்டும் எட்டுமுறை 65 மீ இலக்கை எட்டியிருக்கிறார். கியூப யாமி பெரெஸ் 6 முறை இந்த இலக்கை எட்டியிருக்கிறார். ஆல்மேனுடன் சேர்ந்து, குரோஷியாவின் பெர்கோவிக் தனிப்பட்ட முறையில் 70 மீ தூரத்தை கடந்திருக்கிறார்.
எனவே, இறுதிப்போட்டி கமல்பிரீத்துக்கு ஒன்றும் சாதாரணமாக அமைந்துவிட முடியாது. என்றாலும் 1.3 பில்லியன் இந்தியர்களின் நம்பிக்கையை கமல்பிரீத் சுமக்கிறார். கடந்த காலங்களில் அவர் எல்லா தடைகளையும் தாண்டியே இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அதிகமாகவே இருக்கிறது.