தொட்டுவிடும் தூரத்தில் மகள்; கொஞ்ச முடியாது பரிதவித்த தாய்: தியாகத்தை பாராட்டிய கர்நாடக முதல்வர்!
கொரோனா வார்டில் சிகிச்சையளிக்கும் ஓர் செவிலியரான தாய்க்கும், அவரது 3 வயதான குழந்தைக்கும் இடையே நடைபெற்ற ஓர் பாசப் போராட்டம் இது.
கொரோனாவுக்கு எதிரான போரில் இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதாரப் பணியாளர்களும் பங்கேற்று உலகைக் காக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். இதில் பல செவிலியர்களும், மருத்துவர்களும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.
தற்போது கொரோனா தனது கோர முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிலும் காட்டத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கொரோனா தொற்று நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் காக்கும் பணியில் ஏராளமான மருத்துவர்களும். செவிலியர்களும் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் பணிச்சுமை காரணமாகவும், நோய்த் தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாகவும் வாரக்கணக்கில் தங்கள் வீடுகளுக்குக்கூடச் செல்லாமல் தங்களது உறவுகளையும், உயிரினும் மேலான குழந்தைச் செல்வங்களையும் கூட பார்க்காமல் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து தங்களது பணிகளை கண்ணும்கருத்துமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வடக்கு கர்நாடகத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சையளிக்கும் ஓர் செவிலியரான தாய்க்கும், அவரது 3 வயதான குழந்தைக்கும் இடையே நடைபெற்ற ஓர் பாசப் போராட்டம் குறித்த வீடியோ, காண்போரின் கண்களை கலங்கச் செய்வதாக உள்ளது.
கர்நாடகாவில் உள்ள பெலகாவி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் செவிலியராகப் பணிபுரிபவர் சுகந்தா கோரிகோப்பா. இவர் கடந்த 15 நாள்களாக தனது வீட்டுக்குச் செல்லாமல், மருத்துவமனையிலேயே தங்கி பணிபுரிந்து வந்தார். இவரது 3 வயது குழந்தை ஐஸ்வர்யாவை இவரது கணவர் வீட்டில் பராமரித்து வந்தார்.
இருந்தபோதிலும் பச்சிளம் குழந்தையான ஜஸ்வர்யா, தந்தையிடம் அம்மாவை கேட்டு அடம்பிடிப்பதும், சாலையில் போவோர் வருவோரிடம் எல்லாம் “எங்க அம்மாவ பார்த்தீங்களா, எங்க அம்மா எங்க?” எனக் கேட்டு, தனது தாயாரைக் காணாமல் பரிதவித்து வந்துள்ளார்.
நாட்கள் செல்லச்செல்ல, ஓர்கட்டத்தில் அம்மாவைப் பார்க்காமல் ஐஸ்வர்யா மிகவும் ஏக்கமடைந்து, சாப்பிடக்கூட மறுத்து மிகவும் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, வேறு வழியின்றி அவரது தந்தை குழந்தையை அழைத்துக் கொண்டு, முகக்கவசம் அணிந்து, சுகந்தா பணிபுரியும் மருத்துவமனை வளாகத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு வந்த சுகந்தா தான் பெற்றெடுத்த குழந்தை கதறி அழும்போதும், கைகளில் வாரியெடுத்து கொஞ்ச முடியாமல் பாதுகாப்பான தூரத்தில் நிற்க, குழந்தையோ விடாமல் "மம்மி வா, வந்து, என்னைத் தூக்கு எனக் கதறி அழ!". இதைப் பார்த்து சுகந்தாவும் அழ... இக்காட்சியை மருத்துவமனை வளாகத்தில் பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் நெஞ்சமும் கசிந்துருகி விட்டன.
இந்நிலையில் இதை செல்போனில் படம் பிடித்தவர்கள் இணையதளத்தில் விட, இக்காட்சி வைரலாகியது. இதனைப் பார்த்தவர்கள் செவிலியரின் கடமை உணர்ச்சியைப் பாராட்டினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அந்த செவிலியரை புதன்கிழமை தொலைபேசியில் அழைத்து, அவரின் தியாகத்தைப் பாராட்டினார். மேலும்,
"உங்கள் குடும்பம், பிள்ளைகளைக் கூட பார்க்காமல் நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பதை நான் அறிவேன். உங்களின் கஷ்டம் தெளிவாகத் தெரிகிறது. தயவு செய்து நாட்டுக்காக இந்தத் துன்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அனைவரின் நலனுக்காகவே நாம் இவ்வளவு பாடுபடுகிறோம். நமது நாட்டுக்காகப் பாடுபடும் உங்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்," என்றார்.
எடியூரப்பா, சுனந்தாவிடம் தொலைபேசி முலம் பேசிய பதிவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், எடியூரப்பா செவிலியருக்கு எழுதிய கடிதத்தில், கோவிட் -19 பரவுவதைத் தடுக்க கடினமாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவையையும் முதல்வர் எடியூரப்பா நினைவு கூர்ந்தார்.
மேலும், தொலைபேசி உரையாடலின்போது சுகந்தா தெரிவித்த மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களின் தேவைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்த எடியூரப்பா, இதுகுறித்த ஆராய்ந்து தீர்வளிப்பதாக உறுதியளித்தார். மேலும், இப்பிரச்னைகளை முன்னுரிமை அளித்து தீரத்து வைப்பதாகவும், கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்தவுடன் தனிப்பட்ட முறையில் அனைவரின் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி - Thenewsminute.com