ஐடி பணியை விட்டு தற்சார்பு தொழில் புரிவோர்களுக்கு மார்க்கெட்டிங் செய்யும் கீர்த்தனா!
கலப்படங்களை காதலித்து இயற்கையை பாழாக்கும் பொருள்களை பயன்படுத்த பழக்கப்பட்டுள்ள மக்களை இயற்கையுடன் இணைந்துவாழச் செய்வது அத்தனை எளிதல்ல. அதனாலே, சுற்றுச்சூழலின் பாதுகாப்பாளனாயிருந்து பூமியை பாதிக்காத பொருள்களை தயாரித்து தற்சார்பு வணிகம் செய்வோருக்கு அங்கீகாரம் கிடைக்கக் காலம் பிடிக்கிறது. அப்படி, தற்சார்பு வணிகம் புரிவோருக்கு ஆதரவாக இருந்து, அவர்களது தொழில் வளர்ச்சியடையவும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத நன்மை பயக்கும் பொருள்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் அவர்களின் சமூக வலைதளங்களை வடிவமைத்தும், நிர்வகித்தும் வருகிறார் கீர்த்தனா.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தனா, பொறியியல் பட்டதாரி. 8 ஆண்டுகள் மென்பொருள் துறையில் இருந்த அவர், தற்சார்பு வாழ்வு மீது கொண்ட நாட்டத்தாலும், திருமணத்துக்குப் பின் குழந்தைகளை கவனித்துகொள்ள வேண்டும் என்ற தாய்மை உணர்வாலும், தான் பேரார்வதுடனும் பெருங்காதலுடனும் செய்துவந்த ஐடி பணியினை உதறித் தள்ளியவர்.
ஆம், பலருக்கும் ஐடி பணி சலிப்பை அள்ளித்தரக்கூடியதான அனுபவங்களையே தந்தநிலையில், கீர்த்தனா அதை விரும்பிச் செய்தவர். ஆனால், திருமணத்துக்கு பின் குடும்பம், குழந்தை என ஆக, விரும்பி செய்த வேலையே வெறுப்பாய் மாறியுள்ளது. அப்போது வேறு வழியின்றி பணியை உதறிவிட்டு, தாய்மை கால மகிழ்வுகளை அனுபவித்திருக்கிறார். ஆனாலும், தொழில் வாழ்க்கையில் உச்சத்தினை அடைந்துவிட மாட்டோமா என்கிற தாகத்தால் சுயத்தொழில் தொடங்க தீர்மானித்துள்ளார்.
அக்காலங்களில், ஈக்கோ ப்ரெண்ட்லி அதாவது இயற்கையிலான பொருட்களின் பொருள்காட்சிகள், நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் நடந்தால் தவறாமல் விஜயம் செய்துள்ளார். தவிர, அவருடைய கணவரும் குக்கூ காட்டுப்பள்ளி சிவராஜும் நண்பராக இருந்ததில், தற்சார்பு வாழ்வியலை முன்னெடுத்து வருபவர்களின் அறிமுகங்கள் கீர்த்தனாவுக்கு கிடைத்துள்ளது.
தொடக்கமாய் மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்காத பொருள்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். பின்னே, தற்சார்பு வணிகம் செய்வோரது கதைகளை கேட்டறிந்தவர், அவர்களுக்கு உதவும் விதமாகவும், சூழலுக்கும் பாதிப்பற்ற, மக்களுக்கு பயன் என்ற மூன்று நன்நோக்கங்களை கொண்டவர்களது வணிகத்துக்கு ‘டெஃபிட்டீ’ Tefiti எனும் நிறுவனம் தொடங்கி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார்.
“மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மை அளிக்கும் வேலையை செய்யக்கூடியவர்களுக்கு எதாவது ஒருவிதத்தில் நம் பங்கு இருக்கவேண்டும் என்ற யோசித்தபோது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் பண்ணலாம்னு தீர்மானித்தேன். ஏன்னா.. பெருவாரியான மக்கள் ஸ்மார்ட்போன் பயனர்கள் தான். ஒரு பொருளை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான சரியான தளம் அது தான். இப்போது சரியான தருணமும்கூட. எந்த ஒரு பொருள் வாங்க நினைச்சாலும், இப்போலாம் அக்கம் பக்கத்தாரிடமோ, பக்கத்து கடைகளிலோ விசாரிப்பது இல்லை. உடனே கூகுளில் தான் தேடுகிறோம். சோ, சாதாரணமாய் ஒரு பொருள் வாடிக்கையாளரை சென்றடைய வேண்டும் என்றாலே டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரதானமானது,” என்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஈக்கோ ப்ரெண்ட்லி பொருள்களை மட்டும் பயன்படுத்தி வருகிறார். அடுத்த கட்டமாய், வேலைக்குச் சென்று உச்சம் அடைய வேண்டும் என்ற கனவோடு காத்திருப்போரை ஒன்று திரட்டி, குழுவாக வேலை செய்ய திட்டம் தீட்டிருக்கிறார்.