இரண்டு பழமரங்களை நட்டால் தான் இந்த ஊரில் வீடு, கட்டிடங்கள் பதிவு செய்யப்படும்!
கேரளாவின் திருச்சூர் பகுதியில் உள்ள கொடுங்கலூர் நகராட்சி ஒவ்வொரு புதிய வீடு மற்றும் கட்டிடத்தைக் கட்டும்போதும் குறைந்தபட்சம் இரண்டு பழ மரங்கள் நடப்படவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது..
சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடானது இயற்கை வளங்களை சற்றும் இரக்கமின்றி சுயநலத்திற்காக சுரண்டி வருகிறோம் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. இத்தனை ஆண்டுகளில் வளர்ச்சி என்கிற பெயரில் அரசாங்கமும் தனியார் ஏஜென்சிகளும் எண்ணற்ற மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளன. இதன் விளைவுதான் உலக வெப்பமயமாதலும் பருவநிலை மாற்றமும்.
பருநிலைமாற்றம் குறித்தும் அது தொடர்பான ஆபத்துகள் குறித்தும் விழிப்புணர்வு அதிகமாகியிருப்பதால் நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சிகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தகைய முயற்சி ஒன்று கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இங்கு கட்டப்படும் ஒவ்வொரு புதிய கட்டிடம் அல்லது வீட்டிலும் ஒரு வார காலத்திற்குள் குறைந்தபட்சம் இரண்டு பழ மரங்கள் நடப்படவேண்டும் என்று இந்த மாவட்டத்தில் தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.
கொடுங்கலூர் நகராட்சித் தலைவர் கேஆர் ஜெயித்ரன் இந்த முயற்சி குறித்து என்டிடிவி உடனான உரையாடலில் கூறும்போது,
“இந்தத் திட்டம் 2 கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். முதலில் கட்டுமானத்திற்கு அனுமதி கோரி தனிநபர் ஒருவர் உள்ளூர் அமைப்பைத் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் வீட்டின் வரைபடத்தைக் கொண்டு வரவேண்டும். அதில் மரம் நடுவதெற்கென பிரத்யேகமாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும். இரண்டாவதாக வீட்டின் கட்டுமானம் முடிந்த பிறகு வீட்டு எண் ஒதுக்கப்படுவதற்கு முன்பு எங்களது நகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்வார்கள். ஒதுக்கப்பட்ட இடத்தில் இரண்டு பழ மரங்கள் நடப்பட்டிருந்தால் மட்டுமே வீட்டு எண்ணை ஒதுக்குவோம். இல்லையெனில் எண் ஒதுக்கப்படாது,” என்றார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தீர்மானம் மாவட்ட அளவில் எடுக்கப்பட்டுள்ள போதும் மாநில அளவில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்த சட்டத்தின்படி 1,500-க்கும் அதிகமான சதுர அடி கொண்ட கட்டிடங்களோ அல்லது எட்டு செண்டுக்கும் அதிகமாக கட்டப்படும் கட்டிடங்களோ குறைந்தபட்சம் இரண்டு மரங்கள் நடவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிறிய பகுதிகளில் கட்டப்படும் வீடுகளிலும் மரக்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகளில் நகராட்சி பொதுமக்களுக்கு வழிகாட்டும். மேலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்காக நகராட்சியின் உதவியுடன் 1,140 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளுக்குக் கட்டணம் ஏதுமின்றி மரக்கன்றுகள் வழங்கப்படும்.
இந்தப் புதிய சட்டத்தை தனிநபர் யாரேனும் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் பட்சத்தில் அதைக் கையாள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெயித்ரன் ’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் கூறும்போது,
”உள்ளூர் அமைப்பானது கேரள நகராட்சி கட்டிட விதிகளின்படியே அனுமதி வழங்கமுடியும். எனவே எங்களது புதிய விதிமுறை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படலாம் என்கிற தயக்கம் எங்களுக்கு உள்ளது. இதற்குத் தீர்வுகாண நாங்கள் ஏற்கெனவே மாநில அரசாங்கத்தை அணுகியுள்ளோம். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க தற்போதுள்ள சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA