2019ல் ஸ்டார்ட் அப்கள் கவனிக்க வேண்டிய முக்கிய போக்குகள்...
தொழில்நுட்பம், நிதி, மருத்துவ நலம், ரிடைல் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆகிய துறைகளில் 2018 மிகப்பெரிய மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் கண்ட ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டுக்கான பத்து முக்கிய போக்குகளைப் பார்க்கலாம்.
மார்க்கெட்டிங், வர்த்தகம்
1. மார்க்கெட்டிங் மேலும் தனிப்பட்ட தன்மை பெறும்
வர்த்தகம் வாடிக்கையாளர்களை மையம் கொண்டதாக மாறி வருவதால், வாடிக்கையாளர்களை ஈர்த்து அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான புதிய வழிகளை மார்க்கெட்டிங் துறையினர் யோசிக்க வேண்டும். பல்வேறு இலக்கு குழுக்களுக்கு ஏற்ப விளம்பரப் பிரச்சாரங்களை வடிவமைக்க வேண்டும். இதை தனிப்பட்ட அளவிலும் மேற்கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை உண்டாக்க, தனிப்பட்ட அனுபவங்களை வழங்குவது எப்படி என கண்டறிய வேண்டும். சமூக ஊடக செல்வாக்கு பெற்றவர்கள் மூலமான மார்க்கெட்டிங் மேலும் பிரபலமாகும். வாடிக்கையாளர் விமர்சனம், சான்றிதழ்களும் கோலோச்சும்.
2. ஆன்லைன், ஆப்லைன் கைகுலுக்கும்.
2018 ல் இகாமர்ஸ் நிறுவனங்கள், சிறிய அளவில் சில்லறை விற்பனை மையங்கள் அமைப்பதை பார்த்தோம். இந்த ஆண்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பரவலான ஆப்லைன் அனுபவத்தை அளிக்கலாம். வாடிக்கையாளர்கள் விற்பனை நிலையங்களுக்கு சென்று பார்த்து, பேசி பின்னர் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யலாம். ஆக, கடைகள் ஆன்லைனுக்கு இன்னும் நெருங்கி வரும்.
3. வர்த்தகக் கூட்டுறவு
வர்த்தக உலகில், கூட்டு முயற்சி இன்னும் பரவலாகும். உதாரணமாக, வங்கிகள், நிதி நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. வங்கிகளும், காப்பீடு நிறுவனங்களும் தங்கள் அமைப்புகளுக்குள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அனுமதிக்கத்துவங்கியுள்ளன. இனி என்ன ஆகும் என்றால் போட்டியாளர்கள் கூட்டுறவு ஏற்படுத்திக்கொண்டு பரஸ்பர நலனுக்காக செயல்படுவார்கள்.
உங்களைச்சுற்றி, இணைந்து செயல்படக்கூடிய வர்த்தகங்களுக்கு, பொதுவான சந்தைக்கு, பொதுவான வாடிக்கையாளர்களுக்கு வலை வீசுங்கள். பரஸ்பர நலனுக்காக இணைந்து செயல்பட வாய்ப்பிருக்கிறதா? என ஆய்வு செய்யுங்கள். லாஜிஸ்டிக்சில் நீங்கள் வலுவாக இல்லை எனில், அதை பலமாக கொண்டவர்களுடன் இணைந்து செயல்படலாம்.
கடன், பண பரிவர்த்தனை
4. இணைய கடன் மேலும் எளிதாகும்
தொழில்முனைவோர்கள் கடன் பெற வங்கிகளை அணுகத் தயங்குகின்றனர். இதற்கான நடைமுறை சிக்கலானது என்பதே காரணம். சிறு தொழில்களுக்கு கடன் கிடைப்பதும் சவாலானது. 2017 க்கு பிறகு புதிய அலையென பி2பி கடன் (P2P lending) சேவைகள் அறிமுகமாயின. இந்த இணையதளங்களில் அதிக சிக்கல் இல்லாமல், சில நாட்களில் கடன் பெறலாம். சில மணி நேரங்களில் கூட பெறலாம். இந்த கடன் சேவைகள் இந்த ஆண்டு மேலும் எளிதாகும். செல்போன்களில் கூட இந்த சேவைகளை எளிதாக பயன்படுத்தும் நிலை வரும். மேலும் கடன் தொகை மற்றும் திரும்பி செலுத்தும் கால அளவும் கூட, பயனாளிகளுக்கு ஏற்ப தனிப்பட்ட தன்மை கொண்டதாக மாறலாம்.
5. வங்கிகளும் இணைய கடன் வழங்கும்
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் வெற்றியை பார்த்து, வழக்கமான வங்கிகளும் இணைய கடன் பிரிவில் ஆர்வம் செலுத்தும் நிலை வரும். தொழில்நுட்பப் புதுமை தீர்வுகளை வழங்குவதற்காக அவை, நிதி நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும். வங்கிகள் துவக்கத்தில், மாற்று கடன் நிறுவனங்களின் இணைய கடன் மேடைகளில் முதலீடு செய்து அவற்றின் வாடிக்கையாளர்களை அணுகின. ஆனால் இந்த ஆண்டு, வங்கிகள் நுட்பமான அனலிட்க்சை பயன்படுத்துவதில் இணைய கடன் நிறுவனங்களை போலவே செயல்படும். இதனால், வர்த்தக உரிமையாளர்களுக்கு கடனுக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்.
6. பர்வர்த்தனை சேவைகளின் வளர்ச்சி
வங்கிக் கணக்கு வாயிலாக பரிவர்த்தனைகளை பின் தொடர்வது என்பது வர்த்தர்களுக்கு எளிதானதாக இல்லை. இந்த சூழலில் தான் புதிய வகை நிறுவனங்கள் வந்தன. இவை பரிவர்த்தனைகளை தொடர்வதை எளிதாக்கியுள்ளன. இமெயில் அல்லது வாட்ஸ் அப் மூலம் பரிவர்த்தனைக்கான இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் வசதியையும் அவை அளிக்கின்றன. கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங் ஒருங்கிணைப்பையும் அவை அளிக்கின்றன. பரிவர்த்தனை நிறுவனங்கள், வர்த்தகர்களுக்கு அனைத்துவிதமான சேவைகளையும் ஓரிடத்தில் வழங்கும்.
ஊழியர்கள்
7. ஊழியர்கள் அலுவலகச் சூழலுக்கு வெளியே பணியாற்றுவார்கள்
மோசமான சாலைகள், நீண்ட தொலைவு பயணம் ஆகியவை செயல் திறனுக்கு உகந்தவை அல்ல. எனவே தான் ஊழியர்கள் வீட்டில் இருந்து அல்லது கோ ஒர்கிங் பணியிடங்களில் இருந்து செயல்பட விரும்புகின்றனர். நிறுவனங்களும் இதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் தங்கள் கொள்கைகளை மாற்றி அமைத்து வருகின்றன. இது நிறுவனங்கள், ஊழியர்கள் இருதரப்புக்கும் பலன் அளிப்பதாக இருக்கிறது. நிறுவனங்கள், வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த துவங்குவதைப் பார்க்கலாம்.
8. ஊழியர் நலனில் கவனம்
நல்ல திறமையை கண்டறிவது சிக்கலாக இருக்கிறது. நல்ல திறமையாளர்கள் வெளியேறாமல் தடுப்பதும் சவாலாக இருக்கிறது. எனவே தான் நிறுவனங்கள், வளைந்து கொடுக்கும் தன்மை கொள்ளத்துவங்கியுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் கல்வி செலவையும் ஏற்கின்றன. நிறுவனங்களே பயிற்சி திட்டங்களையும் நடத்துகின்றன. ஊழியர்களின் பணி இலக்கை நிறைவேற்றித்தருவதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இந்த போக்கு இன்னும் தீவிரமாகும்.
தொழில்நுட்பம்
9. குரல் தேடல் இன்னும் பிரபலமாகும்
பிபிசி செய்தி அறிக்கை ஒன்று, இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் மட்டும் தான், ஆங்கிலத்தில் எழுதவும், படிக்கவும், பேசவும் தெரிந்தவர்கள் என தெரிவிக்கிறது. இதன் பொருள் எஞ்சிய 90 சதவீதம் பேர் இணையத்தை தவறவிடுகின்றனர். எனவே தான் வாய்ஸ் சர்ச் எனப்படும் குரல் வழி தேடலுக்கு அதிக தேவை இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு கொண்ட குரல் வழி உதவியாளர் சேவை மொபைல்போன்களில் பரவலாகும். வர்த்தக இணையதளங்கள், அரட்டை மென்பொருள் மூலம் இவற்றை வழங்க விரும்புகின்றன. இ-காமர்ஸ் தளங்கள் தாய்மொழியில் பேசி பொருட்களை தேட முடிந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப்பாருங்கள். இந்த வகை சேவைகள் ஆங்கிலம் பேச முடியாதவர்களையும் இ-காமர்ஸ் போன்றவற்றை பயன்படுத்த வழி செய்யும்.
10. அனல்டிக்ஸ், அல்கோரிதம்
வாடிக்கையாளர்கள் பற்றி மேலும் அறிவதில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. அவர்கள் ஆன்லைன் பழக்கங்களை, முன்னுரிமை அறிவதிலும் கவனம் செலுத்துகின்றன. இவற்றுக்கு பதிலாக அனல்டிக்ஸ் அமையும். இதற்குத் தேவையான அல்கோரிதம்கள் உருவாக்கப்படும்.
ஆங்கில கட்டுரையாளர்: சம்பத் ஸ்வைன் ( இன்ஸ்டாமோஜோ நிறுவனர்) | தமிழில்; சைபர்சிம்மன்