கால்பந்து உலகின் அரசன்; கோல்களின் காதலன் - மறைந்தார் மரடோனா!
கால்பந்து உலகின் தனிப்பெரும் ஆளுமை டியாகோ மரடோனா. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். 'மரோடானா’ என்று கத்தி ஆர்பரித்த கூட்டத்தை இன்று சோகத்தை ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார். ஆம் கால்பந்து உலகின் ஜாம்பவான் டியாகோ மரடோனா காலமானார். அவருக்கு வயது 60.
அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனோ ஏர்ஸ் அருகே உள்ள வில்லா ஃபியோரிடா சிற்றூரில பிறந்தார் மரடோனா. எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர், தனது இளமை காலத்தை வறுமையில் கழித்தார். அவருக்கு 3 வயது இருக்கும்போது, மரடோனா வீட்டுக்குச் சென்ற உறவினர் ஒருவர் அவருக்கு கால்பந்து பரிசாகக் கொடுத்தார். எதார்த்தமாக கொடுத்தது பின்னாளில் மரடோனாவின் கனவாக மாறிவிட்டது.
கால்பந்தாட்டம் மீது பிறந்த காதலால், தனது எட்டாவது வயதில் அர்ஜெண்டினா ஜூனியர்ஸ் கால்பந்தாட்ட குழுவில் இடம்பெற்று விளையாடினார். 1986ல் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதற்கான மிக முக்கியக் காரணம் மரடோனா.
தன் தாய்நாடான அர்ஜென்டினாவின் கேப்டனாக இருந்து மிகச்சிறப்பாக அணியை வழிநடத்த, அதுவரை கால்பந்து உலகம் பார்க்காதவகையில் கோல்கள் அடித்து அணியை சாம்பியனாக்கினார் மரடோனா.
இந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரானக் காலிறுதிப் போட்டியில் மரடோனா அடித்த கோல் இன்றுவரை கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்அணியினரிடம் பந்து சிக்காத வகையில், லாவகமாக பந்தை தட்டிச்சென்று கோல் அடிப்பதில் திறமை மிக்கவர் மரடோனா. கால்பந்து லீக் போட்டிகளிலும் அவர் தலைமையேற்று விளையாடிய நப்போலி அணிக்காக பல்வேறு கோப்பைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.
ஒருபுறம் கால்பந்து போட்டிகளில் அவர் கோலோச்சினாலும், மறுபுறமும் சர்ச்சைகளால் சூழப்பட்டார். 1991 காலகட்டத்தில் கொக்கெய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாகி கால்பந்து கரியரைத் தொலைத்தார் மரடோனா.
1994 உலகக்கோப்பைக்காக அமெரிக்காவில் போயிறங்கிய அர்ஜென்டினா அணியில் மரடோனா, போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட, உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த உலகக்கோப்பை தொடர்தான் மரடோனா அர்ஜென்டினாவுக்காக கடைசியாக விளையாடிய தொடர்.
இந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்து உயர்ந்த கவுரவத்தை வழங்கியது பிஃபா அமைப்பு. குறிபிட்ட பிராந்தியம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மரடோனாவுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். கேரளாவில் மரோடோனா பேன்ஸ் கிளப்களே உண்டு.
நவம்பர் 3ம் தேதி மூளையில் ரத்தக் கசிவு கண்டறியப்பட்டு மரடோனாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சூழலில்தான் தற்போது மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார் கால்பந்து ஜாம்பவான்.
டியாகோ மரடோனா மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அர்ஜென்டினா அரசு தெரிவித்துள்ளது.
போய் வாருங்கள் மரடோனா!