ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் கேகேஆர் நிறுவனம் ரூ.5,550 கோடி முதலீடு!
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் தனியார் பங்கு முதலீடு நிறுவனமான சில்வர் லேக் முதலீடு செய்துள்ள நிலையில், கேகேஆர் நிறுவனம் தற்போது ரூ.5,550 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது.
தனியார் பங்கு முதலீடு நிறுவனமான கேகேஆர் நிறுவனம், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் 1.28 சதவீத பங்குகளுக்கு ஈடாக, ரூ.5,550 கோடி முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டின் படி, ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4.21 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்டிரீசின் ஜியோ சேவைகளில், ரூ.11,367 கோடி அளவுக்கு கேகேஆர் ஏற்கனவே முதலீடு செய்வதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது ரிலையன்ஸ் ரீடைலில் முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தனியார் பங்கு முதலீடு நிறுவனமான சில்வர் லேக் சார்பில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் 2.32 சதவீத பங்குகளுக்கு 1.75 சதவீத பங்குகளுக்கு ஈடாக ரூ.7,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போதைய முதலீடு அமைகிறது.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் அண்மையில், பிக்பஜார் உள்ளிட்ட சில்லறை வர்த்தக பிராண்ட்களை கொண்ட பியூச்சர் குழுமத்தை கையகப்படுத்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் இ-காமர்ஸ் துறையில் ஜியோ மார்ட் மூலம் தனது நுழைவை ரிலையன்ஸ் ரீடைல் அறிவித்தது.
ஜியோ சேவைகள் மேடை இதுவரை, 13 பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து, ரூ.1,18,318 கோடி முதலீடு ஈர்த்துள்ளது. இவற்றுக்கு ஈடாக 25.24 சதவீத பங்குகளை கொடுத்துள்ளது.
கேகேஆர் முதலீடு பற்றி கருத்து தெரிவித்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி,
“தொழில்துறையின் முன்னணி பிரான்சைஸ்களுக்கு மதிப்பு மிக்க பங்குதாரராக கேகேஆர் விளங்குவதோடு, இந்தியாவிலும் ஈடுபாடு கொண்டுள்ளது. கேகேஆரின் சர்வதேச மேடை, டிஜிட்டல் சேவை மற்றும் ரீடைல் துறையில் செயல் அனுபவத்துடன் சேர்ந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.
கேகேஆர் இணை நிறுவனர் மற்றும் இணை இ.இ.ஓ ஹென்ரி கார்விஸ், அனைத்து வகை வணிகர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் திறன் கொண்டுள்ள மற்றும் இந்திய நுகர்வோரின் ரீடைல் அனுபவத்தை மாற்றும் வாய்ப்புள்ள ரிலையன்ஸ் ரீடைலில் முதலீடு செய்வதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் உடனான உறவை மேலும் ஆழமாக்கிக் கொள்கிறோம்,” என தெரிவித்துள்ளார்.
தமிழில்- சைபர்சிம்மன்