இளைஞர்களின் ‘இன்ஸ்பிரேஷன்’; வீரப்பனின் சிம்ம சொப்பனம்: தமிழக புதிய டிஜிபி சைலேந்திரபாபு!
தமிழ்நாட்டின் 30வது காவல்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் உற்சாக நாயகன் சைலேந்திர பாபுவின் உத்வேகப் பயணம் ஒரு பார்வை.
வாய்மை, நேர்மை, கடமை இவற்றிற்கான அடையாள மனிதர்களாகத் திகழ்பவர்களில் வாழும் உதாரணம் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.
தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியின் குழித்துறையில் 1962ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தவர். பள்ளிப்படிப்பை அரசுப்பள்ளியில் பயின்றவர், மருத்துவம் படிக்க விரும்பிய நிலையில் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போக மதுரையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலைப் பயின்றார்.
கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள் தொகை கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் "Missing Children" ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் மனிதவள வணிக நிர்வாக படிப்பில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
பட்டங்கள் பல பெற்ற திறனாளர் மட்டுமல்ல, 1987ம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார் சைலேந்திர பாபு. 1989ல் கோபிசெட்டிபாளையத்தில் ஏ.எஸ்.பி. ஆக தமிழக காவல்துறை பணியில் இணைந்தார். பின்னர் 1992-ல் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் விவசாய கூலிகளாக ஊடுருவி இருந்த நக்சலைட்டுகளில் நாகராஜன் என்ற நக்சலைட்டை பிடிக்கத் தனி ஒருவராகச் சென்று சுட்டுக்கொன்ற சம்பவம் தான் அவரது முதல் என்கவுண்டர்.
காவல் பணியில் மட்டுமல்ல மக்கள் உயிரைக் காக்கும் பணி என்றால் உயிரை துச்சம் என நினைத்து மீட்புப் பணியில் இறங்கி விடுவார். 1997ல் சிவகங்கை ஏரியாவில் மழை, வெள்ளம் கரைபுரண்டு ஒடிக்கொண்டிருந்தது. பயணிகள் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக நீர் நிறைந்த கண்மாய் அருகே போகும்போது சாலை உடைந்து மூழ்கியது. அப்போது வேறு பணி தொடர்பாக அந்த வழியில் பயணித்துக்கொண்டிருந்த சைலேந்திரபாபு,
பஸ் மூழ்குவதை கவனித்து, உடனே கண்மாய் உள்ளே பாய்ந்து, பஸ்ஸின் ஜன்னல்களை உடைத்து 16 பேரை உயிருடன் காப்பாற்றினார். சைலேந்திரபாபுவின் வீர தீரச் செயலை பாராட்டி பாரத பிரதமர் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
கோபிச்செட்டிபாளையம், சேலம் மற்றும் திண்டுக்கல்லில் ஏடிஎஸ்பியாகவும், செங்கல்பட்டு, சிவகங்கை, கூடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
சந்தனக்கடத்தல் வீரப்பனின் சிம்ம சொப்பனம்
சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்க தீவிரமாகச் செயல்பட்டவர் சைலேந்திரபாபு. 1990களில் ஈரோடு மாவட்ட கிராமங்கள் சிலவற்றில் தேர்தல் நடத்த வீரப்பன் தரப்பு தடை ஏற்படுத்தி மரங்களை வெட்டிப்போட, சாலைப் போக்குவரத்தைச் சரி செய்ய, தானே அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்று வீரப்பன் தரப்பிற்கு ஷாக் கொடுத்தவர் பாபு.
வீரப்பனை பிடிக்க அவரது மனைவியின் ஊரில் தங்கி வியூகம் வகுத்தவர், 2000ம் ஆண்டில் வீரப்பனை பிடிப்பதற்காக மீண்டும் அனுப்பப்பட்டார். வனத்தில் இருந்தவர்களை சைலேந்திரபாபு குழு சுற்றி வளைத்த போது இரவு நேரத்தை பயன்படுத்தி அப்போது வீரப்பன் தப்பிச் சென்றார்.
காவல்துறையில் படிப்படியான பதவி உயர்வுகளைப் பெற்றவர் சென்னை அடையாரில் துணை ஆணையராகவும், விழுப்புரம் சரக டிஐஜியாகவும் பணியாற்றி இருக்கிறார். சென்னையில் இணை ஆணையர், கரூர் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாகப் பணியாற்றுவதற்கு முன்பு காவல்துறை துணைத் தலைவர் ஆக திருச்சியிலும் பின் சென்னை வடக்கு மண்டலத்தின் காவல்துறை துணைத் தலைவர் ஆக பணியாற்றுவதற்கு முன்பு காவல்துறை தலைவராக (IG) கோவையிலும் பணியாற்றினார்.
கோவை காவல் ஆணையராக 2010-11 ஆண்டுகளில் பணியாற்றிய போது, ஓட்டுனரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி மற்றும் அவனது சகோதரன் கொலை என உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளியான மோகனகிருஷ்ணன் பிடிபட்ட பின்னர் நீதிமன்றம் செல்லும் போது தப்பிக்க முயன்றதால் என்கவுன்டரில் அதிரடியாக சுட்டுக் கொன்றவர்.
மற்ற குற்றவாளிகளுக்கு சைலேந்திரபாபு தலைமையிலான காவல்துறையினர் மரண தண்டனை பெற்றுத் தந்தனர். இவரது பணிக்காலத்தில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை உரிய முறையில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, எவ்வித பாதுகாப்புக் குளறுபடிகளும் இல்லாமல், மாநாடு சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்தார்.
சிறைத்துறை ஏ.டி.ஜி.பி ஆகவும் பணி புரிந்தவர், தான் இருந்த பிரிவுகளில் எல்லாம் தடம் பதித்தார். பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில்தான் கடலோர காவல்படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது அந்த சம்பவத்தில் சைலேந்திரபாபு கடலோரக் காவல் படையினருடன் இணைந்து முக்கியப் பணியாற்றினார்
கடலோரப் பாதுகாப்பு போலீஸ் பிரிவின் உயர் அதிகாரியாக இருந்த 6 ஆண்டுகளில் தமிழக கடற்கரையின் 1071 கி.மீ. நீளம் 13 கடலோர மாவட்டங்களையும் கண்காணிக்க முடியாது என்பதால் மாற்று வழி யோசித்தார். தனது கீழ் பணியாற்றும் கடலோரக் காவல் படை போலீஸாருடன் இணைந்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் மீனவ இளைஞர்களை சேர்த்து குழுக்களை அமைத்தார். 5,000 பேர் கொண்ட இளைஞர்களை தேர்தெடுத்து சிறப்பு பயிற்சி அளித்தார் அவர்கள் இப்போது கடலோர கேட்-கீப்பர்களாக உள்ளனர்.
இதேபோன்று தீயணைப்பு துறையின் ஏடிஜிபி ஆக இருந்த காலகட்டத்தில் 2015ம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது தாம்பரம் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று நேரடியாக நீரில் இறங்கி மூழ்கிய பொதுமக்களை காப்பாற்றினார்.
தமிழக ரயில்வே காவல்துறையின் உயர் அதிகாரியாக கடந்த மூன்றரை வருடங்களாக இருந்து வருகிறார். இங்கும் சைலேந்திரபாவு முத்திரை பதித்தார், தனியாக பயணிக்கும் பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்யும் ஆசாமிகளைப் பற்றி ரயில்வே காவல்துறையின் அவசர உதவி எண்ணிற்கு புகார் அளிக்கப்பட்ட உடனேயே, அந்த ஆசாமிகளை ரயில்வே போலீஸார் சுற்றிவளைத்து பிடிப்பார்கள். ரயிலில் பயணிக்கும் பயணிகள் நிம்மதியுடன் பயணித்து வருவதற்கு இவரின் பலவித நடவடிக்கைகளும் முக்கியக் காரணம்.
ஃபிட்னெஸ் பிரியர்; யூத்-களின் நம்பிக்கை நாயகன்
உடற்பயிற்சியைத் தீவிரமாகக் கடைபிடித்து உடலைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் 'உடல்நலத் தகுதி' எனும் தமிழ் நூலை எழுதி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்போருக்கு விருந்தாக இந்த நூலைத் தந்துள்ளார்.
வீர தீர விளையாட்டுச் செயல்களான நீச்சல், தடகளம், துப்பாகிச்சுடுதல், சைக்கிளிங் போன்றவற்றில் அதி தீவிரமாக பங்களிப்பாற்றுபவர்.
வயது 56 ஆனாலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 22 பேர் குழுவுடன் சைக்கிளிங் பயணம், தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 28 கி.மீட்டர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து சாதனை, மாரத்தான் மற்றும் தொடர் ஓட்டம் என எப்போதும் புத்துணர்ச்சி பாய்ச்சலுடன் நேர்மறை சக்தியை மற்றவர்களுக்கும் புகுத்தி வருபவர் சைலேந்திர பாபு.
தோற்றத்தில் இருக்கும் கராரான மிடுக்கு அவருடைய நடை மற்றும் பேச்சிலும் அனல் தெறிக்கும். சிறந்த பண்பாளராக சக பணியாளர்களுடன் பழகும் இவருக்கு மாணவர்கள் மத்தியில் பேசுவதென்றால் அவ்வளவு உற்சாகம். சைலேந்திர பாபுவின் உத்வேக உரையை கேட்கும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு இலக்கு வேண்டும் தடைகள் பல இருந்தாலும் அதனை அடைவது சாத்தியமே என்ற நம்பிக்கை பிறக்கும்.
நீங்களும் ஐ.பி.எஸ். ஆகலாம், சாதிக்க ஆசைப்படு, உனக்குள் ஒரு தலைவன், சிந்தித்த வேளையில், உடலினை உறுதிசெய், இளமையில் வெல் என்று காவல்துறை சார்ந்து 3 புத்தகங்கள் உள்பட இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் 13 புத்தகங்களை எழுதியுள்ளார். புத்தகக் கண்காட்சிகளில் நட்சத்திர எழுத்தாளர்களின் புத்தகங்களைப் போலவே இவரது புத்தகங்களும் விற்பனையில் பட்டையை கிளப்பும்.
காவல்துறையில் இவர் ஆற்றிய பணிகளை மெச்சும் வகையில், சிறப்பாக கடமையாற்றியமைக்கான குடியரசுத்தலைவர் விருது, உயிர் காக்கும் பணிகளை மேற்கொண்டமைக்கான பிரதம மந்திரி விருது, தமிழக முதலமைச்சரின் கேலண்டரி விருது, தமிழக சிறப்பு டாஸ்க் ஃபோர்சின் கேலண்டரி காவல்துறை பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 30வது சட்டம் ஒழுங்கு காவல்துறைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் சைலேந்திரபாபு மக்கள் மனதில் போலீசார் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தும் நல்விதை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருப்பவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு பல்வேறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலானவர்.
சைலேந்திரபாபுவின் திறமையும், அறிவுத்திறனும் தமிழ்நாடு தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் சைபர் கிரைம் குற்றங்கள், வெளிமாநில கொள்ளையர்களின் கைவரிசை மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் பாலியல் வன்முறைகளில் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
சமூக வலைதளங்களிலும் நாட்டு நடப்பை அதிகம் அறியாதவர்களும் கூட புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சினிமா நட்சத்திரங்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளங்களுக்கு இணையாக சமூக வலைதளங்களில் சைலேந்திர பாபு பேன்ஸ் கிளப் வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறது.