பலமுறை பயன்படுத்தும் துணி டயாப்பர் தயாரிக்கும் கோவை இஷானா!
துவைத்து மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணி டயாப்பரை தயாரிக்கும் இவர், பல பெண்களுக்கு இதை எப்படி தைப்பது என பயிற்சி அளிக்க உள்ளார்.
சின்ன குழந்தைகளை வெளியே தூக்கிச் செல்வது கடினம். சிறுநீர், மலம் கழித்துவிட்டால் தண்ணீர் தேடி திரிய வேண்டியிருக்கும். இப்படி மிகவும் சங்கடமான சூழல் இருந்த காலம் மாறி தற்போது டயாப்பரின் உதவியால் குழந்தைகளை அனைத்து இடங்களுக்கும் கூட்டிச்செல்ல முடிகிறது. பெற்றோர்களும் இதை வெகுவாக வரவேற்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் பாட்டி காலங்களில் குழந்தைகளுக்கு, துணியை கட்டி விடும் பழக்கம் தான் இருந்தது. அது இன்றைய காலத்தில் டயாப்பராக உருமாறி இருக்கிறது. ஒரு முறை பயன்படுத்தும் டயாப்பரை காட்டிலும், காட்டன் துணிகளை இடுப்பில் கட்டி விடுவது பாதுகாப்பானது அதே சமயம் சருமத்துக்கும் எந்த தீங்கும் விளையாது.
அதனால் பாட்டியின் அக்கறையோடு, துவைத்து மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணி டயாப்பரை உருவாக்கி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த இஷானா.
இதுகுறித்து இஷானா நம்மிடம் பேசுகையில் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுங்கு இணங்க துவைத்து பயன்படுத்தும் நாப்கீன் மற்றும் முககவசங்க்ளை தயாரித்து வருவதாகத் தெரிவித்தார். அப்போது தாய்மார்கள் சிலர், குழந்தைகளுக்கான துணி டயாப்பரையும் தயாரித்து தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு நேரமில்லாததால் அதை தள்ளிப்போட்டு வந்தார் இஷானா.
இந்நிலையில், கொரொனா எதிரொலி காரணமாக, மற்ற டெய்லரிங் வேலைகள் குறைவாக இருந்த காரணத்தால், குழந்தைகள் டயாப்பர் மற்றும் முகக் கவசங்களை தைத்து வாடிக்கையாளர்களிடம் கொடுத்து சோதனை செய்துள்ளார் இஷானா. இந்த துணி டயாபர்களை, குழந்தைகள் நான்கு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
“துணி டயாப்பரை பயன்படுத்தும் போது குழந்தைகளின் சருமத்திற்கு எந்தவித பிரச்சனையும் வராத அளவிற்கு வடிவமைத்துள்ளேன். மேலும் பிளாஸ்டிக் லேயர் வெளியே இல்லாமல் துணிக்குள் வைக்கப்படுவதால் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும். இதில் பணச் செலவு குறைவு, கெமிக்கல்கள் இல்லை. திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். குழந்தைக்கு சௌகரியமாக இருக்கும்,” எனத்தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்கு சாதாரணமாக 240 டயாப்பர்கள் ஒரு குழந்தைக்கு பயன்படுத்தப் படுகின்றது. இதில் அதிகளவில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக துணி வகை டயாப்பரை 20 பயன்படுத்தினாலே ஒரு வருடத்திற்கு வரும் என்றார். மேலும் இதில் 20 பிளாஸ்டிக் லேயர் மட்டுமே பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.
இந்த வகையான பலமுறை பயன்படுத்தப்படும் துணி டயாப்பர்கள் தயாரிப்பதை அனைத்து மகளிர்களும் கற்றுக்கொடுத்து, அவரவது மாவட்டங்களில் சொந்தத் தொழிலாக செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் இஷானா தேவைப்படுபவர்களுக்கு பயிற்சியளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
டயாப்பரை தூக்கி எறியும் முன், கழிப்பறையில் மலத்தை கொட்டி அதன் பிறகு தூக்கி எறிந்தால் ஓரளவுக்கு துர்நாற்றம் வீசுவது குறையும். டயாப்பர் போடுவதற்கென தனியாக ஒரு குப்பைத்தொட்டி வைத்திருப்பதும் நல்லது. மூடி இருக்கும் குப்பைத் தொட்டையில் மட்டுமே பயன்படுத்திய டயாப்பரை போடுங்கள். இல்லையெனில் கிருமிகள் பரவும். இது வெளியே நடந்து செல்லும் நமக்கும், துப்புறவு தொழிலாளர்களுக்கும் சுகாதாரக் கேடு எனவும் பகிர்ந்து கொண்டார் இஷானா.
தகவல் உதவி: சுதாகர்