‘நீங்க தனியா இல்லை' - வீட்டுத் தனிமையில் உள்ள கோவிட் நோயாளிளுக்கு உதவும் கோவை பாய்ஸ்!
கொரோனாவால் வீட்டில் தனிமையில் இருக்குறீர்களா? கொரோனா தொற்றுக்கான மிதமான அறிகுறிகளுடன் நிரம்பி வழியும் மருத்துவமனைக்கு செல்ல அஞ்சி இருக்குறீர்களா? பயத்தை அகற்றுங்கள், உங்களது மொபைல் போனிலே மருத்துவ ஆலோசனை பெறலாம்.
'ஏதாவது மருத்துவமனையில் படுக்கைகள் காலியாக உள்ளதா? ஆக்சிஜன் வசதிகள் இருக்கிறதா?' போன்ற மெசேஜ்களை தினம் ஒருமுறையேனும் நமக்கு நன்கு பரீட்சையமானவர்களிடமிருந்தோ, முன்பின் அறியாத முகங்களிடமிருந்தோ வரும் லையிலுள்ளது நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.
படுக்கைகள் கிடைக்காமல் சிகிச்சைக்காக மருத்துவமனை வளாகத்தில் மக்கள் வரிசைக்கட்டி நிற்கும் புகைப்படங்கள் மக்களிடம் பயத்தையே ஏற்படுத்துகின்றனர். அதன் வெளிபாடாய் காய்ச்சல், சளி போன்ற மிதமான கொரோனா அறிகுறிகள் தென்படினும், தேவையற்ற பதட்டத்துக்கு ஆளாகின்றனர்.
இது போன்ற சூழலில் கொரோனா குறித்த சந்தேகங்களையும், வீட்டுத்தனிமையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டியவற்றையும் மக்கள் மருத்துவர்களிடமே கேட்டறிந்து கொள்ளும் வகையில் கோவையைச் சேர்ந்த தன்னார்வர் மற்றும் மருத்துவ நண்பர்கள் ஒன்றிணைந்து "யானா இந்தியா" எனும் பெயரில் வலைதளம் தொடங்கி மக்களையும், மருத்துவர்களையும் இணைக்கும் ஆபத்பாந்தவனாக மாறியுள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. நிலைமையை கையாள மிதமான கொரோனா அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவமனைக்குச் செல்வதை தவிர்த்து, மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளவே அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஆனால், தொற்று ஏற்பட்டலோ அல்லது அறிகுறிகள் தென்பட்டலோ என்ன செய்வதென அறியாத மக்களிடம் பயமே தொற்றிக் கொள்கின்றது. இனி, தேவையற்ற பயத்தை தவிர்த்து பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களின் இலவச ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் பெற்றிட, 'யானா இந்தியா' என்ற பெயரை நினைவில் கொண்டு, அதன் இணையதளத்தை அணுகுங்கள்.
யானா இந்தியாவின் செயல்பாடு குறித்தும், அதனை பிரயோகிக்கும் முறை குறித்தும் அதன் நிறுவனர் குழுவினர்களுள் ஒருவரான கண்ணன் வெங்கடசுப்ரமணியன் விரிவாக பகிர்ந்தார்.
"யானா இந்தியா இணையதளத்துக்குள் வந்தவுடன், முதலில் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். பின் அப்பாயின்மென்ட் பெறுவதற்கு நோயாளியின் பெயர், வயது, மொபலை் எண், முகவரி, நோயாளிக்கு இருக்கும் அறிகுறிகள், எத்தனை நாட்கள் அறிகுறிகள் தென்படுகின்றன, அவருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாத்திரைகள் / அறிவுரைகள் குறித்த சில விவரங்கள், தற்போதைய அவரின் ஆக்சிஜன் அளவு போன்றவற்றை முதலில் பதிவிட வேண்டும்.
மேலும், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக வந்த ரிசல்ட் அட்டை, சி.டி.ஸ்கேன் ரிப்போர்ட் போன்றவற்றின் புகைப்படங்களையும் பதிவிட வேண்டும். நோயாளியை கவனித்துக்கொள்பவர்தான் இந்தத் தளத்தை பயன்படுத்திகிறார் என்றால், அவர் தன் பெயரில், நோயாளியின் விவரங்களை பெற்று இவற்றை செய்யலாம். இவற்றையெல்லாம் பதிவிட்ட பின், மருத்துவரின் அப்பாயின்மென்ட் ரெக்யூஸ்ட் கொடுக்க வேண்டும். இதை கொடுத்தவுடன், எங்களுக்கு தகவல் வந்துவிடும்.
ஜூம் செயலி வழியாக வீடியோ காலில் மருத்துவருடன் நோயாளி ஆலோசனை பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம். நோயாளிகள் மருத்துவருடன் பேசுவதற்கு முன்பாகவே அவர்களது ஆடியோ, வீடியோ கரெக்ஷன், செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பின் அதை சரிசெய்து கொடுப்பது போன்ற உதவிகளை வாலன்டரியஸ் செய்து கொடுப்பர். மருத்துவரிடம் சந்தேகங்களை கேட்கலாம். மருத்துவர்கள் மருந்துகள் எதுவும் பரிந்துரைக்கமாட்டார்கள். முழு மருத்துவ வழிகாட்டுதலை மேற்கொள்வர். இந்த மருத்துவ ஆலோசனை, முற்றிலும் இலவசமானது.
இணையதளம் துவங்கி ஒரு வாரமாகிறது. 70 பேர் மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளனர். கோயம்புத்துார், அமெரிக்கா, சிங்கப்பூர் என வெளிநாடுகளையும் சேர்த்து 22 மருத்துவர்கள் யானா இந்தியாவுடன் இணைந்து மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர், என்றார்.
டாக்டர்ஸ் எல்லோரும் அவங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று ரொம்பவே முனைப்போடு செயல்படுகிறார்கள். ஆனா, எப்படி இதைட் செயல்படுத்தினோம் என சிந்தித்தே பார்க்க முடியவில்லை.
10 நாள் முன்பு தான் இந்த யோசனையே வந்தது. அதற்குள் ஒரு இணயைதளம் துவங்கி, அது மக்களையும் சென்றடைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பெரும் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் சமயத்தில், நம்மால் முடிந்த ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருந்ததில் எட்டிய யோசனை தான் இது.
என் ஸ்கூல் ப்ரெண்ட் டாக்டர் அகிலா அய்யாவு ஒரு நாள் போன் பண்ணி, ஆஸ்பிட்டல்ஸ் எல்லாம் நிரம்பி கொண்டியிருக்கிறது. அதற்கு நாம் ஏதாவது செய்யணும்னு வருத்தப்பட்டு சொன்னாங்க. அவங்களோடு மற்ற டாக்டர் ப்ரெண்ட்சும் சப்போர்ட் கொடுத்தாங்க. ஆனால், எங்களுக்கு என்ன செய்யுறதுனு தெரியலை. வாட்சப் குரூப் தான் முதலில் ஆரம்பித்தோம். ப்ரெண்ட்ஸ் மற்றும் அவங்களோட ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஜாயின் பண்ணாங்க.
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும் ஒருவருக்கு மருத்துவத் துறையை சேராத என்னை போன்ற ஒருவரால் அவர்களுக்கு மருத்துவம் சார்ந்த எந்தஉதவியும் வழங்கிட இயலாது. அதே நேரம் மருத்துவமனைகளில் பெட்ஸ் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் சூழலில், மிதமான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும், கொரோனா தொற்றால் வீட்டுதனிமையில் ஏகப்பட்ட சந்தேகங்களுடன் இருப்பவர்களுக்கும் உதவும் வகையில் போன் மூலமாக மருத்துவ வழிகாட்டுதலை அவர்களுக்கு வழங்க எண்ணினோம்.
உடனடியாக மருத்துவர்கள் கைகோர்த்தார்கள். குறிப்பாக அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் இரண்டாம் ஆண்டு தரவு அறிவியல் மாணவர்கள் வலைதள மேம்பாட்டுக்கும், மருத்துவர்களையும், நோயாளிகளையும் வீடியோ காலில் இணைக்கையில் ஏற்படும் டெக்னாலஜி சந்தேகங்களுக்கு நோயாளிகளுக்கு உதவுகின்றனர்.
ஏன், இந்த வெப்சைட் ‘Banyan infotech' எனும் வெப் டிசைனிங் கம்பெனி தான் ரெடி பண்ணி கொடுத்தாங்க. அந்நிறுவனத்தின் நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் எப்போதுமே தன்னார்வ பணிகளின்போது எங்களுக்கு உதவி வந்துள்ளார். மருத்துவர் அகிலா அய்யாவு, மற்ற மருத்துவர்களை ஒருங்கிணைத்தார். துவக்க முயற்சி தான் நாங்கள் எடுத்தோம், என்றார்.
இந்தத் தொற்று காலத்தில் மக்களுக்கு துணைநிற்க வேண்டும் என்ற உணர்வு பெரும்பாலானோருக்கு இருக்கிறது. அதனால், தான் ஒரே வாரத்தில் யானா இந்தியா துவங்குவது சாத்தியமாகியது. மற்ற மாநிலங்களிலிருந்தும் அப்பாயிமென்ட் கேட்கின்றனர். அந்த சமயங்களில் மொழிப் பிரச்னைகளை வாலன்டரியர்களே கையாள்கின்றனர். நோயாளியுடன் மருத்துவர் பேசுவதற்கு டிரான்ஸிலேட்டராக இருந்து உதவுகின்றனர்.
மே 9ம் தேதி இதை நாங்கள் தொடங்கினோம். வீடியோ கால் வழியாக நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் சேவையை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கொரோனா படுக்கைகள் எந்த மருத்துவமனைகளில் எவ்வளவு இருக்கிறது என்ற தகவல்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம். அதேபோல், யானா இந்தியா வலைதள சேவை ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கிறது.
கிராமத்து மக்களும் எளிதில் கையாளுவதற்கு ஏதுவாக தமிழ் வழியிலும் வலைதளத்தில் தகவல் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். கொரோனா அச்சம் உலகையே அச்சுறுத்தி வந்தாலும், ’இங்கு யாரும் தனித்துவிடப்பட்டவர்கள் இல்லை' என்ற நோக்கத்தில் தொடங்கிய சேவையே இது. ஆங்கிலத்தில் நாங்கள் வைத்திருக்கும் YANA என்பதன் விரிவாக்கம், You Are Not Alone என்பதுதான்.
கொரோனா நோயாளிகளும் அவர்களின் பராமரிப்பாளர்களும் எங்களது சேவையை பயன்படுத்தி கொரோனாவை வென்றிட வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம்.
முடிந்தளவு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று தான் நினைக்கிறோம். யானா இந்தியாவுடன் இணைந்து செயலாற்றும் டாக்டர்கள், வாலான்டரியர்கள் அனைவருமே தனிப்பட்ட அவர்களது பணியையும் தாண்டி தான் மக்களுக்காக செயல்பட்டு வருகின்றனர்.
அதனால், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் ஜூம் ஆப் போன்ற டெக்னாலஜியை பயன்படுத்த தெரிந்தோர் தொற்று உள்ளவர்களுக்காக எங்களது அப்பாயின்ட்மென்ட் பெற்று அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். ஏனெனில், இதுவரை மருத்துவச்சேவை பெற்றவர்கள் அனைவருமே சந்தேகங்கள் தெளிந்து, பயம் போயிருக்கு என்றே சொல்கிறார்கள். பயம் கொள்ளாமல், பதற்றமடையாமலிருங்கள், என்று கூறி முடித்த கண்ணன்,
இதற்கு முன்பாகவும் சென்னை வெள்ளம், கஜாபுயலில் கூட்டத்தை திரட்டி மக்களுக்கு தொடர்ச்சியாய் உதவிவரும் நன்னுள்ளமாவார்.
யானா இந்தியா இணையதளம் :