நாடாளுமன்றத்தேர்தல் 2019: இந்திய மக்களின் வாக்கு யாருக்கு?
வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்திய மக்களிடம் செல்வாக்கு பெற்ற கட்சி எது என்பதை தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். 600 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் வாக்குகள் யாருக்கு மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.
Thursday May 23, 2019,
2 min Read
இந்திய ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய தேர்தல் திருவிழா இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி மே 19ம் தேதி வரை 1 மாத காலம் ஏழு கட்டங்களாக நடந்த தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மத்தியில் பாஜக ஆட்சியே தொடருமா அல்லது புதிய அரசு ஆட்சி அமைக்குமா? தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் என்ன நடக்கும்? கூட்டணியின்றி தனித்து போட்டியிட்ட கட்சிகள் தேர்தலுக்கு பின்னர் ஒன்று கூடி ஆட்சி அமைக்குமா என்ற பல கேள்விகளுக்கு தேர்தல் முடிவுகளே பதில் தரும் என்பதால் பலரும் தொலைக்காட்சிகளில் வாக்குப்பதிவு நிலவர முடிவுகளை பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.
இன்று காலை 8 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவில் முன்னிலை நிலவரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. எனினும் 2014 தேர்தல் போல முழு முன்னிலை நிலவரம் முன்கூட்டியே பிற்பகலுக்குள் வெளிவர வாய்ப்பில்லை என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இந்த முறை விவிபிஏடி(VVPAT) ஸ்லிப்களும் எண்ணப்படுவதால் முன்னிலை நிலவரம் தெரியவே மாலையாகிவிடும் என்றும் முழு தேர்தல் முடிவுகள் வெளிவர இரவு கூட ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்(EVMs) கடந்த தேர்தல்களின் போதும் கூட முழு கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது. இந்த முறை EVMகள் குறித்த சர்ச்சைகளால் கூடுதல் ஏற்பாடாக விவிபிஏடி இணைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பில் அதிக கவனம்
வாக்கு எண்ணிக்கை மிகப்பெரிய அளவிலானது. 600 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியாவில் சராசரியாக 67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 1.72 மில்லியன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளள. ஒரு சட்டப்பேரவையில் 5 வாக்குப்பதிவு மையங்களில் உள்ள வாக்கு எந்திரம் மற்றும் விவிபிஏடி எந்திரங்களின் சீட்டுகள் சரிபார்க்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்கு எண்ணப்பட்ட பிறகே இந்த நடைமுறை பின்பற்றப்படும்.
ஆனால் எதிர்க்கட்சிகள் விவிபிஏடி எந்திரங்களின் ஸ்லிப்களை முதலில் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்த முடிவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். 20 அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கைக்காக பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த போதும் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டது. இந்த விவகாரத்தால் நாட்டில் வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதி வெளியுறவுத்துறை அமைச்சகமானது அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை அனுப்பியது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டிராங் அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளைச் சுற்றி போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. வன்முறைகளை தவிர்க்கும் விதமாக ஹைதராபாத், பெங்களூரு, கான்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் பெரும்பாலான பகுதிகள் உள்ளிட்ட சில நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைவருமே அரசியல் கணிப்பாளர்கள்
எது எப்படியானாலும் ஒன்று மட்டும் நிச்சயம். இன்றைய தினம் கணிப்புகள் மற்றும் யூகங்களுக்கான நாள். தேர்தல் பிரச்சாரங்களில் இதுவரை ஈடுபட்டிருக்காவிட்டாலும் தேர்தல் கணிப்புகளில் சக்கை போடு போடுபவர்களை இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த சில நாட்களாக கட்சிகள் மீதான விமர்சனங்கள் தூள் பறப்பதை பார்க்க முடிகிறது. அரசியல்வாதி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல மக்கள் பலரும் இதில் களமிறங்கியுள்ளனர். #தேர்தல்முடிவுகள்2019 என்று சமூக வலைதளங்களில் உலா வரும் ஹேஷ்டேக்களில் தேர்தல் குறித்த தங்களின் கணிப்புகளை மக்கள் வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது – யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்பது மட்டுமல்ல மாநில வாரியாக எந்த கட்சி எவ்வளவு இடங்களில் வெல்லும் என்று அட்டவணையே போட்டிருக்கிறார்கள்!
(தேர்தல் முடிவுகள் குறித்து அறிந்து கொள்ள எங்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள்)
கட்டுரையாளர் : சுமா ராமச்சந்திரன்
தமிழில்: கஜலட்சுமி