நடிகர் இர்ஃபான் கான் மறைவு: கடைசி நேரங்கள் பற்றி குடும்பத்தினர் உருக்கம்!
அரிய வகை கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த தலைசிறந்த நடிகர் இர்ஃபான் கான் இறுதி வரை போராடி மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 53.
நடிகர் இர்ஃபான் கான் புதன்கிழமையன்று மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உயிரிழந்தார். பெருங்குடல் தொற்றுநோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று (29/04/2020) மரணமடைந்துள்ளார். மறைந்த இர்ஃபான் கானுக்கு வயது 53.
இர்ஃபானின் குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அவருடைய இறுதி நேரங்களை யார் மீது அவர் அதிக அக்கறை செலுத்தினாரோ அந்த அன்பு நிறைந்த, அவரது குடும்பத்தினருடன் செலவிட்டார்...” என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய சினிமாவின் மதிப்புமிக்க கலைஞனான இர்ஃபான் கான் கடந்த சில மாதங்களாகவே அரிய வகை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். லண்டனில் சிகிச்சை முடிந்து சில மாதங்களுக்கு முன்னரே மும்பை திரும்பினார். இர்ஃபான் கான் அவருடைய மனைவி சுடபா மற்றும் இரண்டு மகன்களின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்.
இர்ஃபானின் குடும்பம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :
“நான் நம்பினேன், நான் சரணாகதியடைந்தேன்” கேன்சருக்கு எதிரான தனது போராட்டம் பற்றி முதன்முதலில் இர்ஃபான் மனம் திறந்து வெளிப்படுத்திய சில வார்த்தைகள் இவை.
அமைதியான நடிகர் தன்னுடைய காந்தக் கண்களாலேயே உணர்வுகளை வெளிப்படுத்துபவர். இந்த நாள் எங்களுக்கு சோகமானதாக அமைந்துவிட்டது, அவர் காலமாகிவிட்ட செய்தியை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
இர்ஃபான் ஒரு உறுதியான ஆன்மா, கடைசி வரை திடமாகப் போராடியவர், எப்போதும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்தவர். 2018ம் ஆண்டு அரிய வகை கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்ததும் கூட வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக் கொண்டு கேன்சரை எதிர்த்துப் போராடினார். யார் மீது அதிக அக்கறை காட்டினாரோ அவர்களின் அன்பு மற்றும் குடும்பத்தினார் சூழ்ந்திருக்க அவர் சொர்க்கத்தை அடைந்தார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகூ படத்தின் இயக்குனர் சுஜித் சிர்கார் இர்ஃபானின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
“என் அருமை நண்பா இர்ஃபான். நீ எதிர்த்துப் போராடினாய், போராடினாய், போராடினாய். எப்போதுமே நான் உன்னை நினைத்து பெருமைப்படுவேன். நாம் மீண்டும் சந்திப்போம். சுடாபா, பாபிலுக்கு என்னுடைய இரங்கல்கள். சுடாபா நீயும் இந்தப் போராட்டத்தில் உன்னால் முடிந்த வரை இர்ஃபானுக்கு தேவையானவற்றைத் தந்தாய். அமைதி மற்றும் ஓம் சாந்தி. சல்யூட் இர்ஃபான் கான்,” என்று ட்வீட்டியுள்ளார்.
இர்ஃபான் கான் 2018 மார்ச் மாதம் நியூரோ எண்டோகிரைன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததையடுத்து லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார். 2019 பிப்ரவரி மாதத்தில் அன்கிரேசி மீடியம் படப்பிடிப்பிற்காக இந்தியா திரும்பியவர், மீண்டும் சிகிச்சைக்காக லண்டனில் தங்கி இருந்தார். அறுவைச் சிகிச்சை மற்றும் சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியா திரும்பினார்.
இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்தார், அவருக்கு வயது 95. கொரோனா ஊரடங்கால் மும்பையில் இருந்து தாயின் இறுதிச் சடங்கிற்கு செல்ல முடியாதவர் வீடியோ கால் மூலம் இறுதி மரியாதையை செலுத்தினார்.
கடைசியாக இர்ஃபான் கான் நடித்த அன்கிரேசி மீடியம் திரைப்படம், இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் வெளியானது. தன்னுடைய உடல்நிலை காரணமாக படத்தின் புரமோஷன்களில் பங்கேற்காதவர் ரசிகர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ட்ரெய்லர் வெளியீடு பற்றியத் தகவலைத் தெரிவித்திருந்தார். சர்வதேச அளவில் இர்ஃபான் கானுக்கு அங்கீகாரம் பெற்றத் தந்த படங்கள் தி லன்ச்பாக்ஸ் மற்றும் ஜூராசிக் பார்க்.