பார்கிங் வழக்குகள் முதல் விவாகரத்து வரை சட்டத்தை டிஜிட்டல் மயமாக்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம்!
ஆதித்யா சிவகுமார் மற்றும் ஜோ அல்-காயத்தால் துவக்கப்பட்ட லண்டனைச்சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ’ரிசால்வ் டிஸ்பியூட் ஆன்லைன்’, பேச்சுவார்த்தை, மத்தியஸ்தம் மற்றும் நடுவர் மன்றம் மூலம் நீதிமன்றத்திற்கு செல்லாமலே பிரச்சனைகளுக்கு ஆன்லைனில் தீர்வு காண வழி செய்கிறது.
நீங்கள் மளிகைப் பொருட்களை ஆன்லைனில் வாங்கலாம், புதிய வீட்டையும் கூட ஆன்லைனில் வாங்கி, எல்லா பரிவர்த்தனைகளையும் இணையம் மூலம் மேற்கொள்ளலாம். ஆனால், சட்டப் பிரச்சனைகளையும் ஆன்லைனில் தீர்த்துக்கொள்ள முடியும் என்றால் எப்படி இருக்கும்?
ஆன்லைன் பிரச்சனை தீர்வு (ODR) உலகிற்கு வாருங்கள் மற்றும் பேச்சுவார்த்தை, மத்தியஸ்தம் மற்றும் நடுவர் மன்றம் மூலம் நீதிமன்றத்திற்கு செல்லாமலே பிரச்சனைகளுக்கு ஆன்லைனில் தீர்வு காண வழி செய்யும் லண்டனைச்சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ’ரிசால்வ் டிஸ்பியூட் ஆன்லைன்’ (Resolve Dispute Online) அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
துவக்கம்
பெரும்பாலான ஸ்டார்ட் அப் கதைகளைப்போல, இந்த தொடக்க நிறுவனமும் நட்பில் தான் துவங்கியது. ஆதித்ய சிவகுமார் மற்றும் ஜோ அல்-காயத் கார்டிப் பல்கலைக்கழகத்தில் சந்தித்துக்கொண்டனர். சட்டக்கல்லூரியில் மாணவர்கள் நலனுக்காக வாதாடியது மற்றும் மத்தியஸ்தத்தில் இருந்த ஆர்வம் அவர்களை நல்ல நண்பர்களாக்கியது. இதே காலத்தில் இங்கிலாந்த்தில் அங்கீகரிக்கப்பட்ட இளம் வயது மத்தியஸ்தர்களாகவும் இருந்தனர்.
2010-11ல் ஆதித்யா மற்றும் ஜோ ’மிடியேட் இட் ஆன்லைன்’ எனும் ஸ்டார்ட் அப்பை துவக்கினர். இங்கிலாந்தில் உள்ள தனிநபர்களுக்கு மத்தியஸ்த சேவையை இது வழங்கியது.
“இது மகத்தான் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியில் இருந்து நிறைய கற்றுக்கொண்டதால் மகத்தான தோல்வி என்கிறோம். காலத்திற்கு முந்தி இருந்ததால் தோல்வி அடைந்தோம்,” என்கிறார் வழக்கறிஞராக இருந்து தொழில்முனைவோராக மாறிய ஆதித்யா.
ஆதியா சென்னையில் வழக்கறிஞர் மற்றும் மத்தியஸ்தராக இருந்த நிலையில், ஜோ லண்டனில் வழக்கறிஞராக இருந்த நிலையிலும் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர்.
இருவரும் நீதிக்கான அணுகல் வசதி குறித்து ஈடுபாடு கொண்டிருந்ததாக ஆதித்யா கூறுகிறார்.
சர்வதேச அளவில் அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், உலகின் 57 சதவீத மக்கள் சட்டப் பாதுகாப்பிற்கு வெளியே இருப்பதாக, சட்டம், கட்டுப்பாடு மற்றும் வர்த்தக அலசல் தகவல்களை அளிக்கும் லெக்சிஸ் நெக்சிஸ் லீகல் & புரபஷனல் தெரிவிக்கிறது.
அனைவருக்கும் நீதிக்கான அணுகல் வசதி என்பது ஐநா சபையின் நீடித்த நிலையான இலக்கு 16 ஆக இருக்கிறது. பெரும்பாலானோர் சட்ட அமைப்பில் இருந்து விலகி இருப்பது தொடர்பாக ஏதேனும் செய்ய ஆதித்யா மற்றும் ஜோ விரும்பினர்.
2015-16ல், இது தொடர்பான மேடையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். 2017ல், ஆர்.டி.ஓ நிறுவனத்தை மென்பொருளை ஒரு சேவையாக வழங்கும் மற்றும் பி2பி ஸ்டார்ட் அப்பாக பதிவு செய்தனர்.
வர்த்தக முறை
சர்வதேச பி2பி பிரிவுக்கு சேவை அளிக்கும் வகையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் பிரச்சனை தீர்வு சேவையாக RDO திகழ்கிறது என்கிறார் ஆதித்யா. இந்த ஸ்டார்ட் அப்பின் தொழில்நுட்ப மேடை எந்த வகையான துறையின் பிரச்சனைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது, RDO பி2பி ஆன்லைன் பிரச்சனை தீர்வு சேவையை, நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், அரசுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யு.கே உள்ளிட்ட நாடுகளில் உள்ள மத்தியஸ்த வல்லுனர்களுடன் இணைந்து வழங்கி வருகிறது.
ஆன்லைனில் பிரச்சனைக்குத் தீர்வு
RDO சேவையை குடும்பச் சட்டம், சிவில் பிரச்சனை, போக்குவர்த்து- பார்க்கிங் பிரச்சனை, திவால் மற்றும் குற்றங்களில் பயன்படுத்தலாம்.
பி2பி முறையில், நிறுவனம் தனது மென்பொருளை வாடிக்கையாளர் (நிறுவனங்கள், அரசு அமைப்புகள், நீதிமன்றங்கள்) தொழில்நுட்ப மேடையுடன் இணைத்து மாட்யூலாக அல்லது தனியே செயல்படக்கூடிய மேடையாக அளிக்கிறது. அதவாது, வர்த்தக வாடிக்கையாளர்கள் இந்த சேவையை தங்களது அமைப்புக்குள் ஏற்படும் தவாக்களுக்கு தீர்வு காண பயன்படுத்துகின்றன.
இதற்காக வாடிக்கையாளர்கள் RDO நிறுவனத்திற்கு ஆண்டு சந்தா செலுத்துகின்றன. தாய்லாந்து அரசு உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் மொத்தம் 10 திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
உதாரணமாக, RDO சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்திற்காக, அவர்கள் தொழில்நுட்ப மேடையில் பிரச்சனைகளுக்கு தீர்வு சேவை அளித்துள்ளது. வியட்னாம் அரசுக்கு சிறுதொழில் நிறுவனங்கள் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் சேவை அளித்துள்ளது.
அதிக பணிச்சுமை காரணமாக, வழக்குகளை ஆன்லைன் தீர்வுக்கு மாற்றியுள்ள தாய்லாந்து அரசின் ஆதரவு பெற்ற தாய்லாந்து மத்தியஸ்த மையத்துடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஆன்லைன் தீர்வுக்கு பல்வேறு முறைகளை பயன்படுத்திப்பார்த்த போது, நிர்வாகிகள், மத்தியஸ்தர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே பணி குழப்பம் உண்டானது.
இதற்கு தீர்வு காணும் வகையில் RDO உடன் உடன் இணைந்து அந்த சேவையை பயன்படுத்தி வருகிறது.
”RDO, சேவையால் THAC அமைப்பின் செயல்திறன் அதிகரித்தது. இது நீதிமன்ற அமைப்புகளுக்கு சிறந்த மாற்றாகும். நுகர்வோருக்கு மிகுந்த ஆசுவாசத்தை வழங்கி வருகிறது. இந்த அமைப்புடன் மூன்றாவது ஆண்டாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். இது எங்கள் செயல்பாட்டை உணர்த்துகிறது,” என்கிறார் ஆதித்யா.
பயன்பாடுகள்
ஆன்லைன் பிரச்சனைகள் தீர்வு சேவை, சம்பந்த்தப்பட்ட தரப்பினர் எழுத்து வடிவம் அல்லது வீடியோ அல்லது இரண்டும் கலந்து பயன்படுத்தும் வாய்ப்பை அளிக்கிறது. இதனால், பயனாளிகள் உலகின் எந்த பகுதியில் இருந்தும் அணுகலாம். பயனாளிகள் பணியில் பாதிப்போ அல்லது இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இணைய வங்கிச்சேவை அல்லது ஆன்லைன் வரித்தாக்கல் போலவே இந்த மேடை செயல்படுகிறது. உதாரணமாக போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வழக்குகளில் நீதிமன்றத்தின் ODR மேடை மூலமாக வழக்கு விசாரணை கோரலாம். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டவுடன், வழக்கு டேஷ்போர்டிற்கான இணைப்பு இ-மெயில் அல்லது குறுஞ்செய்தி வழியே அனுப்பி வைக்கப்படுகிறது.
டேஷ்போர்டு, வழக்கு விவரங்களை கொண்டிருப்பதோடு, கோரிக்கையாளர் தனது தரப்பு விவரங்களை எடுத்து வைப்பதற்கான சாத்தியங்களை அளிக்கிறது. இந்த வழக்கு ஒரு நீதிபதிக்கு அளிக்கப்படுகிறது. இதே விவரங்களை அவராலும் பார்க்க முடியும். இதில் உள்ள அவார்டு பில்டர் அம்சம் கொண்டு நீதிபதி தீர்ப்பு வழங்கலாம். தீர்ப்புக்கான காரணங்களை தெரிவித்து, குறிப்பிட்ட காலத்தில் செலுத்த வேண்டிய அபராதத்தையும் தெரிவிக்கலாம். நீதிபதி தீர்ப்பில் இ-கையெழுத்து இடலாம் மற்றும் சம்பந்ததப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
மற்றொரு உதாரணமாக, உணர்வுகள் தொடர்புடைய விவாகரத்து வழக்கிலும் இது பயன்படும்.
“விவாகரத்து வழக்குகளில், விஷயங்கள் சிக்கலாகலாம். குறிப்பாக குழந்தைகள் தொடர்பு கொண்டிருந்தால் இவ்வாறு நிகழலாம். ஒருவர் இன்னொருவருடன் ஒரே அறையில் இருக்க விரும்பாமல் போகலாம். ODR முலம், இரு தரப்பினரும் வாதம் செய்து, ஒரு முடிவுக்கு வரலாம் அல்லது மத்தியஸ்தர் உதவியை இணையம் வழியே நாடலாம்,” என ஆதித்யா விளக்குகிறார்.
விவாகரத்து கோருபவர்கள் ODR மேடையில் பதிவு செய்து கொண்டு, வழக்கறிஞர், மத்தியஸ்தர் மற்றும் பிரதிவாதியை அழைக்கலாம்.
வழக்கில் தொடர்புடைய ஒவ்வொரு தரப்பினரும் தனது விவரங்களை டேஷ்போர்டில் கையாளலாம். நிலுவையில் உள்ள செயல்கள், வழக்கு வரலாறு, ஆவணமாக்கல், எதிர்வரும் நிகழ்வுகள், பேமெண்ட், செட்டில்மண்ட்கள் ஆகியவற்றை இது கொண்டிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கான தகவல்கள் மற்றும் நிகழ்வுகளை நோட்டிப்பிகேஷனாக பெறலாம்.
மத்தியஸ்தர்கள் வழக்குகளை எளிதாக நிர்வகிக்கலாம். மென்பொருள், அரட்டை அறை கொண்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
வளர்ச்சி திட்டங்கள்
இந்த நிறுவனம், 2020ல் சில முதலீட்டாளர்களிடம் இருந்து குறிப்பிடப்படாத நிதியை திரட்டியது. கனடாவைச்சேர்ந்த மீடியா நிறுவனம் மற்றும் மிகப்பெரிய சட்ட நிறுவனம் இதில் அடங்கும். நிறுவனம், ஏ சுற்றுக்கு முந்தைய நிதி திரட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் வாய்மொழி பரிந்துரைகள், நேரடி தகவல் அளித்தல் மூலம் வாடிகையாளர்களை ஈர்த்து வருவதாக ஆதித்யா தெரிவிக்கிறார்.
“இது வரை இயல்பாகவே வளர்ந்திருக்கிறோம். எனினும் அடுத்த கட்ட வளர்ச்சி, சூழலில் உள்ளவர்கள் மத்தியில் சேவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அடங்கியிருக்கிறது. மொத்த நிதியில் 0.5 சதவீதம் மார்க்கெட்டிங்கிற்கு செலவிட்டுள்ளோம்,” என்கிறார் ஆதித்யா.
ஒரு இணை நிறுவனர் (ஜோ) மற்றும் ஒரு சில ஊழியர்கள் தவிர நிறுவனத்தின் 25 உறுப்பினர் குழு தென்னிந்தியாவை சார்ந்துள்ளது. துவக்கத்தில் சென்னை அலுவலகத்தில் இருந்து செயல்பட்ட நிறுவனம் தற்போது ரிமோட் முறையில் செயல்பட்டு வருகிறது. விரைவில் இரண்டும் கலந்த முறையை பயன்படுத்த உள்ளது.
“RDO இந்தியாவில் தலைமையகம் கொண்டிருக்கவில்லை என்றாலும், இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட சேவை. ஊழியர்கள் நியமனத்தில் பலதரப்பட்டவர்களை சேர்க்கும் அணுகுமுறை கொண்டுள்ளோம்,” என்கிறார் ஆதித்யா.
அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் நீதி வழங்கலை மேம்படுத்தும் வகையில் செயல்படும் அமைப்பான நேஷனல் செண்டர் பார் ஸ்டேட் கோர்ட்ஸ், ஓ.டி.ஆர் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே அமெரிக்காவைச் சேராத நிறுவனமான RDO இருக்கிறது என்கிறார் ஆதித்யா.
மேலும், மைக்ரோசாப்டின் ஓடிஆர் மேடை பங்குதாரராக நிறுவனம் தேர்வாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முடிவுக்கு ஏற்ப இந்த ஸ்டார்ட் அப் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஓடிஆர் சேவையை முன்மொழியலாம்.
“அடுத்த ஆண்டு மைக்ரோசாப்டின் சட்ட வழங்களுக்கான ஜூனியர் பங்குதாரராக விளங்குவோம் என எதிர்பார்ப்பதாக,” ஆதியா கூறுகிறார்.
நிறுவனம் தற்போது 6 முதல் 7 இலக்க வருவாயை பெற்றிருப்பதாக ஆதித்யா கூறுகிறார். விரிவாக்கத் திட்டங்களை கருத்தில் கொள்ளும் போது லாபம் ஈட்ட மூன்று ஆண்டுகள் ஆகலாம்.
Presolv360 மற்றும் Sama போன்ற நிறுவனங்கள் B2B2C பிரிவில் வர்த்தக நிறுவனங்களுக்கான சேவையை தங்கள் மேடையில் வழங்கி வருகின்றன.
இருப்பினும் இந்தியாவில் உள்ள ஓடிஆர் மேடைகள் தங்களுக்கான தனி விதிகளை (இந்திய மத்தியஸ்தம் – நடுவர் மன்ற சட்டங்கள் கீழ்) கொண்டுள்ளன. இவற்றை பயனாளிகள் பின்பற்ற வேண்டும். ஆனால், RDO பிரதான சட்டம் கீழ் தனிவிதிகளை கொண்டிருக்கவில்லை மற்றும் மத்தியஸ்தர்களுக்கான மேடையாக மட்டுமே விளங்குகிறது.
“அமைப்பின் மீதான என் நம்பிக்கை முழுமையானது. அமைப்பிற்கு உதவியாகவே இருக்க விரும்புகிறோம். அதற்குள் நுழைய விரும்பவில்லை. மிகையான சட்டத்தின் கீழான விதிகளுக்கு வாடிக்கையாளர்கள் சந்தா செலுத்தவில்லை என தெளிவாக உள்ளோம்,” என்கிறார் ஆதித்யா.
B2B, B2C பரப்பில் வளர்ந்து வரும் நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பி2சி பிரிவில் நுழைவதற்கான திட்டங்கள் வெறும் யூகம் தான் என்கிறார் ஆதித்யா.
“நானும், ஜோவும் நீதிக்கான அணுகலில் ஈடுபாடு கொண்டுள்ளோம். நீதி பெறும் முறையை ஜனநாயகமயமாக்க விரும்புகிறொம்,” என்கிறார் அவர்.
உபெர் அல்லது ஓலா சவாரி பதிவு செய்வது போல, தனிநபர்கள் ஒரு சில கிளிக்குகளில் நீதியை அணுகுவதை சாத்தியமாக்க RDO விரும்புகிறது.
“எனது உள்ளங்களையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமா? என் போனில் நீதிகான அணுகலை கொண்டு வரமுடியுமா? B2B2C பிரிவில் நிலைப்பெற்ற பிறகு நுகர்வோர் பரப்பிற்கு வருவோம்,” என்கிறார் ஆதித்யா.
இந்த முறையில், மத்தியஸ்தர்கள் மற்றும் நடுவர்கள் RDO குழுவில் இடம்பெற்றிருப்பார்கள். வழக்குகள் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட மத்தியஸ்தருக்கு அது அளிக்கப்படும்.
“தனிநபர்கள் நீதியை அணுகுவதை எளிமையாக்க வேண்டும். தினசரி எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வை சாமானிய மனிதர்களால் அணுக முடிந்தால் அதுவே உலகிற்கான சிறந்த முறை,” என்கிறார்.
இந்தியாவில் ஓடிஆர் வெற்றி பெற அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவில் 4.2 கோடி கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என நேஷனல் ஜூடிசியல் டேட்டா கிரிட் தெரிவிக்கிறது.
ஆங்கிலத்தில்: வித்யா சிவராமகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்