'நூலகமான சலூன்’ - புக் படித்தால் முடி கட்டிங்கில் சலுகை!
முடிதிருத்த வரும் மாணவர்களின் சிந்தையை சீர்படுத்தும் தூத்துக்குடி இளைஞர்.
மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் பேருந்து, ரயில் நிலையங்கள் தொடங்கி, எல்லா இடங்களிலும், எப்போதும், எல்லோர் கைகளிலும் செல்போன்கள். செல்லை நோண்டத் தொடங்கிவிட்டால் நேரம் போவதே தெரியாத அளவுக்கு அதிலும் எக்கச்சக்கமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன.
முன்பெல்லாம் முடி திருத்தும் சலூன் கடைகளில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும்போது சலிப்படையாமல் இருக்க பொழுதுபோக்கு அம்சமாக ரேடியா, டி.வி., செய்தித்தாள்கள் போன்றவை இருக்கும். ஆனால், தற்போதோ அனைவரின் கைகளிலும் ஆன்ட்ராய்ட் போன்கள் தவழுவதால், இந்தப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.
முடி திருத்தி தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ள வருபவர்களின் சிந்தையை திருத்தி அவர்களின் அறிவை மெருகேற்றினால் என்ன எனத் தோன்றியது தூத்துக்குடி, மில்லர்புரத்தில் சலூன் கடை வைத்திருக்கும் பொன்மாரியப்பனுக்கு.
சுஷில்குமார் பியூட்டி கேர் என்ற பெயரில் சலூன் கடை நடத்திவரும் இவர், தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், காத்திருக்கும் சிறிது நேரத்தில் எதையாவது படித்து, தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது கடையில் சில நூல்களை வாங்கிப் போட்டார். இன்று அது ஓர் நூலகமாக விழுது பரப்பி விரிந்து நிற்கிறது.
இதுகுறித்து பொன்மாரியப்பன் கூறியது,
“செல்போன்களின் வருகையால் புத்தக வாசிப்பு என்ற பழக்கம் அடியோடு குறைந்துவிட்டது. இதனை மாற்றி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் வாசிப்பு பழக்கத்தை உருவாக்கவே நான் புதிய முயற்சியாக எனது முடிதிருத்தும் கடையில் புத்தகங்களை வாங்கத் தொடங்கினேன்,” எனக் கூறும் பொன்மாரியப்பன் எட்டாம் வகுப்பு வரையே படித்துள்ளார்.
ஆறு வருடங்களுக்கு முன்பு கடை தொடங்கும்போது, எல்லாக் கடைகளையும் போல எனது கடையிலும் டீவி தான் வைத்திருந்தேன். ஆனால் யாரும் அதை கவனிக்காமல் தங்கள் செல்போனிலேயே மூழ்கி விடுவதைக் கண்டேன். இதனை மாற்ற என்ன செய்யலாம் என சிந்தித்தபோதுதான், பாரதியின் வரிகளான புத்தகங்களே என் சொத்து, இவையே நான் என் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லும் பொக்கிஷம் என்ற வரிகள் நினைவுக்கு வந்தது. இதையடுத்தே நான் எனது சலூனில் புத்தகங்களை வாங்கிக் குவித்தேன் என்கிறார்.
முதலில் ஐந்தாறு புத்தகங்களை மட்டும் வாங்கிப் போட்ட பொன்மாரியப்பன் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அறிந்து, 250 புத்தகங்களை வாங்கி ஓர் ஷெல்பில் அடுக்கினார்.
வரலாறு, இலக்கியம், சிறுகதைகள், சிறுவர் கதைகள் என பல்வேறு வகையான புத்தகங்களை வாங்கிக் குவித்தார். இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறக்க, சுமார் ஆயிரம் புத்தகங்களுடன் ஓர் குட்டி நூலகமாகவே இந்த சலூன் கடை மாறிவிட்டது என்றால் மிகையல்ல.
இவரது நூலகத்துக்கு முடி திருத்த வரும் மாணவர்கள் இந்த நூலகத்தில் இருந்து ஏதாவது ஓர் நூலை எடுத்து படித்து, அந்த நூலின் பெயர், படித்த பக்கங்களின் எண், மாணவர் வாசித்ததில் பிடித்த வரி அல்லது வாக்கியத்தை அங்குள்ள ஓர் நோட்டில் எழுத வேண்டும். இவ்வாறு எழுதும் மாணவர்களின் பெயர்களை மாதமொரு முறை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அந்த மாணவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்குகிறார்.
மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவே இந்தத் திட்டத்தை செயல்படுத்தினேன். இவ்வாறு மாணவர்கள் சிறிது நேரமாவது படித்து ஏதாவது ஓர் விசயத்தை தெரிந்து கொள்கிறார்கள் என்பதே எனக்குக் கிடைத்த வெற்றிதான்.
மேலும், இவ்வாறு படித்த விசயத்தை நோட்டில் எழுதும் மாணவர்களுக்கு முடி வெட்டும் கட்டணத்தில் சலுகையும் அளித்து வருகிறேன். இதனால் மாணவர்கள் ஆர்வமாக எனது கடைக்கு வந்து புத்தகங்களை படிக்கின்றனர்.
படிக்கத் தெரியாதவர்கள் என் கடையில் அமர்ந்து புத்தகங்களை சும்மாவாது கையில் வைத்திருந்தாலும் நான் கட்டணச் சலுகை அளிக்கிறேன். இன்று அவரது கையில் தவழ்ந்த புத்தகம், நாளை அவரின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும். அறிவொளி வழங்கும் என்கிறார் உற்சாகமாக.
இவர் கடையில் ஓர் மைக்கும் வைத்துள்ளார். மாணவர்கள் தாங்கள் படித்த விசயத்தை அல்லது ஏதேனும் ஓர் பொது தலைப்பில் இந்த மைக்கில் பேசலாம். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் குரலை தானே மைக்கில் கேக்கும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது. மேலும், மேடைக்கூச்சமும் மாணவர்களை விட்டு அகலுகிறது என மாணவர்களின் பேச்சாற்றலையும் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு மாணவர்கள் சமுதாயத்தை செல்போன் எனும் மாயையில் இருந்து மீ்ட்டு, அவர்களை சீர்திருத்தி, வாசிப்புக் கலை, பேச்சுக் கலை போன்றவற்றில் மேம்படுத்தி, அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் தன்னாலான சிறு முயற்சி இது என்கிறார் பொன்மாரியப்பன்.
என் குழந்தைகளுக்கு நான் சேர்த்து வைக்கும் சொத்து புத்தகங்களே எனக் கூறும் பொன்மாரியப்பனின் இம்முயற்சிக்கு அவரது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகள் முழு ஆதரவு அளித்துள்ளனர். இவரின் இப்பணியை பாராட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இவரது நூலகத்துக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கியுள்ளனர்.
தமிழக பொது நூலகத் துறை அதிகாரியும் பொன்மாரியப்பனைப் பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளார். கடந்தாண்டு, உலகப் புத்தக தின நாளில் பெரியார் சுயமரியாதை பிரசார இயக்கம் சார்பில் இவருக்கு புத்தகர் விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
”எனது வருமானத்தில் புத்தகங்கள் வாங்குவதற்காகவே ஓர் சிறு தொகையை தனியே ஓதுக்கி விடுவேன். எனது வாடிக்கையாளர்கள் அனைவரையும் வாசகர்களாக மாற்றுவதே என் லட்சியம்,” என்கிறார் இவர்.
மிகக் குறைந்த வருவாய் ஈட்டினாலும், அதிலும் ஓர் பங்கை சமூக முன்னேற்றுத்துக்காக பிரித்து, அதில் புத்தகங்களை வாங்கி, மாணவர்களின் வாசிப்புத் திறன் மற்றும் பேச்சாற்றலை வளர்க்கப் பாடுபடும் பொன்மாரியப்பனின் பணியை பாராட்டியே தீரவேண்டும்.