‘நான் வேதியியலில் 24 மார்க் எடுத்தேன், மதிப்பெண் வாழ்க்கை அல்ல’- ஐஏஎஸ் அதிகாரி!
ஐஏஎஸ் அதிகாரி நிதின் சங்வான், தனது 12ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் புத்திசாலிகளாகவும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் முட்டாள்களாகவும் அடையாளப்படுத்துவது வழக்கம்.
ஆனால் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. குறைந்த மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்களிடையே இதைப் பலரும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
ஐஏஎஸ் அதிகாரியான நிதின் சங்வான் தனது பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல் பாடத்தில் 24 மதிப்பெண்கள் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் மிகவும் கடினமான தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார்.
நிதின் சங்வான் தனது மதிப்பெண் சான்றிதழை ட்விட்டரில் பதிவிட்டு,
“நான் 12ம் வகுப்புத் தேர்வில் வேதியியல் பாடத்தில் 24 மதிப்பெண்கள் எடுத்தேன். பாஸ் மார்க்கை விட ஒரு மதிப்பெண் மட்டுமே அதிகம் பெற்றேன். ஆனால் நான் வாழ்க்கையில் என்ன ஆகவேண்டும் என்பதை அந்த மதிப்பெண் தீர்மானிக்கவில்லை. அதிக மதிப்பெண் எடுக்கவேண்டும் என்கிற சுமையை குழந்தைகள் மீது சுமத்தாதீர்கள். வாழ்க்கை என்பது பொதுத்தேர்வுகளுக்கு அப்பாற்பட்டது. தேர்வு முடிவுகளை தற்சோதனைக்கு ஒரு வாய்ப்பாக கருதவேண்டுமே தவிர விமர்சனங்களுக்கு உட்படுத்தக்கூடாது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான நிதின் சங்வான் 2015ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதற்கு முன்பு ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்தார். தற்போது நகராட்சி துணை ஆணையராகவும் குஜராத்தின் அகமதாபாத் ஸ்மார்ட் சிட்டி சிஇஓ-வாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது ட்விட்டர் பதிவை டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உட்பட பலர் பகிர்ந்துள்ளனர்.
“மதிப்பெண்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியையோ அல்லது கவலையையோ நிர்ணயிப்பதாக இருக்கிறது. இந்தச் சூழலில் ஐஏஎஸ் அதிகாரி நிதின் சங்வானின் பதிவு மிகவும் முக்கியமானது. வாழ்க்கை என்பது தைரியம் மற்றும் நம்பிக்கை சார்ந்தது. ஒரு தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் வெற்றியையோ தோல்வியையோ நிர்ணயிப்பதில்லை,” என்று மனீஷ் சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.
தகவல் மற்றும் பட உதவி: என்டிடிவி