கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் மாஸ்க்: மதுரை போராசிரியரின் கண்டுபிடிப்பு!
கொரோனா பரிசோதனை முடிவுகள் 12 வினாடிகளில் கிடைக்கக் கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கருவியையும், ஆக்சிஜன் சிலிண்டர் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நானோ தொழில்நுட்பம் கொண்ட ஆக்சிஜன் முககவசத்தையும் கண்டுபிடித்துள்ளார் கல்லுாரி போராசியர்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் ஆக்சிஜன் சிலிண்டர்களும், மருத்துவமனை படுக்கைகளுமே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் பிரதான தேவை. தமிழகத்திலும் வேகமாகப் பரவி வரும் கோவிட் இரண்டாம் அலையின் பாதிப்பால் மருத்துவமனைகளில் இடமில்லாத நிலையினையும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ள நிலையையும் அடைந்துள்ளோம்.
இந்நிலையில், வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜனை நானோ மெட்டீரியல், மின்காந்தவியல் மூலம் தனியாக பிரித்தெடுத்து, சுவாச கருவியினுள் செலுத்தி நுரையீரல் நன்றாக செயல்பட உதவும் வகையில் இக்கருவி வடிவமைத்துள்ளார் மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் இயற்பியல் பேராசிரியர் ஆரோக்கிய தாஸ்.
ஐஐடி மெட்ராஸ் உட்பட பல கல்லுாரிகளில் பணியாற்றியுள்ள ஆரோக்கிய தாஸின் 260வது கண்டுபிடிப்பே இந்த ஆக்ஸிஜன் மாஸ்க். அத்துடன் கொரோனா தொற்றை துரிதமாக 12 நொடிகளில் கண்டறியும் கருவியையும் வடிவமைத்து காப்புரிமை பெற்றுள்ளார்.
"புது கண்டுபிடிப்புகளை உருவாக்கும்திறன் எனக்கு கடவுள் அளித்த வரம். இதுவரை 260 அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளேன். அதில் ஆக்ஸிஜன் மாஸ்க் என்னுடைய 89வது காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு. 64 கண்டுபிடிப்புகளுக்கு வெளிநாட்டு காப்புரிமை பெற்றுள்ளேன். ஏறத்தாழ அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் எனக்கு 10 முதல் 15 நாட்கள்தான் ஆகியது. ஆக்ஸிஜன் மாஸ்க் கண்டறியவும் 10 நாட்களே ஆனது.
பல்கலைகழகத்தின் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் அவர்கள் கொடுத்த ஊக்கத்திலும், ஆதரவிலும் இதையே வேகமாக செய்து முடித்தோம். இரண்டு வகையான மாஸ்க் ரெடி பண்ணோம். 'ரெகுலர் ஆக்சிஜன் மாஸ்க்' மற்றும் 'ஆக்சிஜன் சென்சார் நானோ மாஸ்க்'. இரண்டிலும் நானோ மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரெகுலர் ஆக்சிஜன் மாஸ்க்கை சாதாரண மாஸ்க் அணிவது போல், இதை பயன்படுத்தலாம். நாம் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை, திரும்ப சுவாசிக்க செய்யாது. இது, ஆக்சிஜனை மட்டுமே உள்ளே அனுப்பும். நோய் தொற்று இல்லாதவர்கள், முன்னெச்சரிக்கையாக இதை பயன்படுத்தலாம். ஆக்சிஜன் சென்சார் நானோ மாஸ்க்கில் தயாரிப்பு செலவு கொஞ்சம் அதிகம்.
ஆக்சிஜன் சென்சார் நானோ மாஸ்க்கில் ஆக்ஸிஜன் சென்சார், கார்பன் டை ஆக்ஸைடு சென்சார், பிரஷர் சென்சார் என 4 சென்சார்கள் பொருத்தி வடிவமைத்துள்ளோம். தற்போது நிலவிவரும் ஆக்ஸிஜன் தட்டுபாட்டு நேரத்தில் நோயாளிகளுக்கு பெரிதும் பயன்படும். கோவிட் தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்படும் நேரங்களில் இந்த முகக்கவசம் உயிர் பாதுகாப்புட் சாதனமாக பயன்படும், என்றார்.
இந்த முகக்கவசங்கள் நோயாளிகளுக்கு மட்டுமின்றி எங்கெல்லாம் சுவாசத்திற்கு ஆக்சிஜன் அளவு குறைவாக கிடைக்கிறதோ அங்கெல்லாம் அனைவரும் அணிந்து கொள்ளலாம்.
கொரோனாவின் முதல் அலையிலே ஆக்ஸிஜன் மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுவிட்டேன். அப்போது அதன் மாதிரி மட்டுமே செய்திருந்தோம்.
100 கிராமுக்கும் குறைவான எடை கொண்ட இந்த முகக் கவசம், பேட்டரி கொண்டு இயங்குகிறது. மொபைல் சார்ஜரால் ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரத்திற்கு இயங்கும். அதே போல், மாஸ்க் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தக்கூடியது தான். தனியார் நிறுவனம் ஒன்றில் கண்டறியப்பட்ட முகக்கவசத்தை விற்பனைக்குக் கொண்டுவரப் பேசப்பட்டுள்ளது.
இதில் இரண்டு வகையாகப் பிரித்துள்ளோம். ஒன்று எளிய மக்கள் வாங்குவது போன்று சென்சார் இல்லாமல் தயாரித்துள்ளோம். இதில், ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் இருக்கும். இதை 500 ரூபாயுக்கு விலை நிர்ணயித்துள்ளோம். சென்சார் இணைத்துச் செய்யக்கூடிய முகக்கவசத்தில் சென்சார்களுக்கு மட்டுமே 4500 ரூபாய் செலவாகிறது. எனவே இதற்கு ரூ.5,000 விலை நிர்ணயித்துள்ளோம். மொத்தமாக ஆக்சிஜன் சென்சார் வாங்கும்போது அதன் விலை குறைந்துவிடும். அதற்கு ஏற்றார்போல் விலை குறைப்பு செய்ய முடியும்.
பெருந்தொற்று காலத்தில் இந்த முகக்கவசத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் அரசே அளித்தால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எல்லோரும் நீங்களே இதனை செயல்படுத்த அணுகலாமே என்று கேட்கின்றனர். அது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. பல ஊடகங்களில் ஆக்ஸிஜன் மாஸ்க் குறித்து வெளியாகியுள்ளது. புதிய அரசு மாறியுள்ளது. அவர்களே முன்வந்து மக்களுக்கு பலனிக்கும் வகையில் என் கண்டுபிடிக்க இருக்க வேண்டும் என்பது என் ஆசையும், கோரிக்கையும்," என்று கூறி முடிதார் அவர்.
படங்கள் உதவி : asiavile