சென்னையில் மளிகைப் பொருட்கள் வீட்டுக்கே டெலிவரி: உங்க ஏரியா கடை பெயர், விவரம் இதோ!
7,500க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுக்கு அனுமதி!
சென்னையில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று முதல் மளிகை, காய்கறி கடைகள் திறக்காமல், பொருட்களை ஆன்லைன் மூலம் மற்றும் நடமாடும் வாகனங்கள் விற்க சென்னை மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கங்களுடன் இணைந்து புதிய முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று முதல் நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய மாநகராட்சி சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை விநியோகிக்க 7,500க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களின் வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தனது வலைத்தளத்திலும், அதன் மொபைல் ஆப்-பில் வீட்டு விநியோகச் சேவைகளை வழங்கும் உரிமம் பெற்ற விற்பனையாளர்களின் பட்டியலைப் பதிவேற்றியுள்ளது சென்னை மாநகராட்சி நிர்வாகம்.
மாநகராட்சி அனுமதிக்க இருக்கும் 7,500 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களில், இதுவரை 2,197 விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்களின் விவரம் http://covid19.chennaicorporation.gov.in/covid/groceries/ என்ற இணையதளம் மற்றும் 'நம்ம சென்னை' செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொருட்களை விற்கும் கடையின் பெயர், தொலைபேசி எண், வார்டு மற்றும் அந்தப் பகுதியில் உள்ள சிறிய கடை அல்லது சூப்பர் மார்க்கெட் போன்ற விவரங்கள் வகைப்படுத்தி இதில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவல் மூலம் பொதுமக்கள் மொபைல் போன் மூலம் ஆர்டர் செய்து வீட்டிற்கே டெலிவரி பெறலாம்.
கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக சென்று சென்னை மக்கள் தங்களுடைய பகுதியை தேர்வு செய்து அந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் அல்லது சிறிய கடைகளைத் தேர்வு செய்து அதில் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்தால் மட்டும் போதும். வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இறைச்சி, மீன் விற்பனையும் ஆன்லைன் மூலம் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னைவாசிகள் தனியார் இறைச்சி கடைகளின் ஆப் மூலம் ஆர்டர் செய்து வீட்டிலேயே டெலிவரி பெறலாம். ஒரு வாரம் கழித்து இறைச்சி விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, “விற்பனையின்போது வியாபாரிகளும் பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்" என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநாகராட்சி அனுமதி தந்துள்ள கடைகள் பட்டியலை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தகவல் உதவி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்