ரூ.250க்கு கொரோனா தடுப்பூசி: அனுமதி அளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் பட்டியல் இதோ!
நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 க்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு டோஸ் ஒன்றுக்கு ரூ.250 என கட்டணம் நிர்ணயித்து, இதற்கான மருத்துவமனைகள் பட்டியலையும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதற்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்டு (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி துவங்கி வைத்தார். இதன்படி, முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது.
இதுவரை, 1 கோடியோ 37 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 2.77 லட்சம் கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 23.77லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. தற்போது வரை 4.57 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் அனுமதி
இந்நிலையில், இந்த தடுப்பூசி போடும் பணியை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையிலான இணை நோயாளிகள் என, 1.06 கோடி பேருக்கு மார்ச் 1ம் தேதி அதாவது நாளை முதல் தடுப்பூசி போடப்பட உள்ளது.
தனியார் மருத்துவமனையிலும் தடுப்பூசிப்போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 761 தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தனியார் மருத்துவமனைகளில் ஒரு முறை தடுப்பூசி போட மத்திய அரசு ஒரு நபருக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி 2 முறை தடுப்பூசி போட ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 761 தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து வெளியிட்டப்பட்ட பட்டியலில் இருந்து முக்கிய மருத்துவமனைகள் எவை என கீழே குறிப்பிட்டுள்ளோம்:
- சென்னை - அப்பல்லோ மருத்துவமனை, காஞ்சி காமகோடி சைல்டு டிரஸ்ட் மருத்துவமனை, பாரதிராஜா மருத்துவமனை, பில்ராத் மருத்துவமனை காவேரி மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் கழகம், விஜயா மருத்துவமனை உள்ளிட்ட 65 மருத்துவமனைகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
- கோவை - பிஎஸ்ஜி மருத்துவமனை, அரவிந்த் ஐ ஹாஸ்பிடல், கேஜே மருத்துவமனை, கேஎம்சிஎச் மருத்துவமனை, ஸ்ரீராமகிருஷ்னா மருத்துவமனை, கோவை மெடிக்கல் செண்டர் உள்ளிட்ட 78 மருத்துவமனைகள் பட்டியலில் உள்ளது.
- மதுரை - அப்போலோ மருத்துவமனை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, பிஜிஎம் மருத்துவமனை, ஈஸ்வரா மருத்துவமனை, பாரதி மருத்துவமனை உள்ளிட்ட 58 மருத்துவமனைகள் இந்த பட்டயலில் உள்ளன.
- திருச்சி - ஏ.ஜே மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட 44 மருத்துவமனைகள் பட்டயலில் உள்ளன.
முன்பதிவு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருபவர்கள் இதற்காக பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக Co-Win ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Aarogya Setu செயலி மூலமும் பதிவு செய்யலாம்.
இதற்கான வழி முறை வருமாறு:
Co-Win app, Aarogya Setu app அல்லது cowin.gov.in தளத்தை லாக் இன் செய்து, மொபைல் எண்ணை டைப் செய்யவும் உங்களுக்கு மொபைலுக்கு OTP எண் வரும். அதன் மூலம் உங்கள் அக்கவுன்ட்டை திறக்கலாம் உங்கள் பெயர், வயது, பாலினம் ஆகியவற்றை குறிப்பிட்ட பிறகு, உங்கள் அடையாள அட்டையை பதிவேற்ற வேண்டும்.
பின்னர், 45 வயதுக்கு மேற்பட்டோர் என்றால், மருத்துவரிடம் பெறப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்கவும் எந்த சென்டர் வேண்டும் என்பதையும், எந்த தேதியில் தடுப்பூசி போட வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம். ஸ்மார்ட் போன் வசதி இல்லாத பெரியவர்கள், இதற்கென்றே அமைக்கப்பட்டுள்ள செண்டருக்கு சென்று ரெஜிஸ்டர் செய்யலாம் அல்லது 1507 எனும் கால் சென்டர் எண்ணுக்கு அழைக்கலாம்.