ஊசி, பாசி மணி விற்ற நறிக்குறவப் பெண்களை தொழில் முனைவர்கள் ஆக்கிய நெல்லை ஆட்சியர்!
நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் நரிக்குறவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உதவியோடு, அவர்களுக்கு சானிடைசர், பினாயில், வாஷிங் படவுர் போன்றவை தயாரித்து, விற்பனை செய்ய பயிற்சி அளித்தார். இதனால் அவர்கள் இன்று தொழில்முனைவோராக மாறியுள்ளனர்.
உலகையே தனது கோரப்பசிக்கு கொன்று தின்றுவிட துடிக்கும் கொரோனா எனும் அரக்கனின் கோரப் பிடியில் பணக்காரனுக்கும், பாமரனுக்கு வேறுபாடில்லை. இதில் சிக்கி உயிரை இழப்பவர்களைவிட, இதன் பாதிப்பால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தவர்களின் நிலைதான் மிகவும் பரிதாபமானது.
வள்ளியூர்; பூங்கா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாசி, ஊசி போன்றவற்றை வள்ளியூர் பேருந்து நிலையத்தில் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதில் இருந்து இவர்களது பிழைப்பு கேள்விக்குறியானது.
தங்களின் குழந்தைகளுக்கு பால் கூட வாங்கிக் கொடுக்க முடியாமல் கருப்புக் காப்பியையும், சோறு வடித்த கஞ்சியையும் உணவாக அளித்து பசியை போக்க முயன்றுள்ளனர். ஆனால் இதனால் பச்சிளம் குழந்தைகள் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளானார்கள்.
இதேபோல், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மணவாசி முடக்குசாலை பகுதியில் வசித்துவரும் நரிக்குறவர் குடும்பத்தினர் நாள்தோறும், ஊசி, பாசி விற்றால் தான் வீட்டில் உணவு என்ற நிலையில் வாழ்ந்து வந்தனர். இச்சூழலில் ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வந்தனர்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வந்த நிலையில், தங்களுக்கு அரசு முன்வந்து நிதியுதவி மற்றும் தொழில் அபிவிருத்திக்கு கடனுதவி அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்ற அரசு, ஓவ்வோர் குடும்பத்துக்கும் அரசுத் தரப்பில் 5 கிலோ அரிசி மற்றும் சீனி வழங்க நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் அதிலும் ஓர் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் பெரும்பாலானவர்களிடம் ஸ்மார்ட் குடும்ப அட்டை கூட இல்லை என்பதால் அரசின் இந்த அடிப்படை உதவிகூட கிடைக்கவில்லை. இதனால் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு கடனுதவி வழங்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.
ஓர் மனிதனுக்கு உதவ விரும்பினால், அவனுக்கு மீன் பிடித்து தராதே, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்ற பொன்மொழியின்படி, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் நரிக்குறவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உதவியோடு,
நரிக்குறவர் இனப் பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சானிடைசர், பினாயில், வாஷிங் படவுர், சோப் ஆயில் போன்றவை தயாரித்து, விற்பனை செய்ய பயிற்சி அளித்தார். ஆட்சியரின் முயற்சி வீண் போகவில்லை. பயிற்சிக்குப் பின் தாங்களாகவே அவர்கள் இதனை தயார் செய்யத் தொடங்கினர்.
இதையடுத்து, கடந்த வாரம் நரிக்குறவர் மக்களின் சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களின் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்து, அவர்களின் வாழ்க்கையில் ஓர் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து, திருநெல்வேலி, பேட்டை பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் சமூக பெண்ணான செல்லமீனா நம்மிடம் தெரிவித்ததாவது, கொரோனாவுக்கு முன்பு எங்கள் வாழ்க்கை, ஓகோவென போகவில்லை என்றாலும், சாப்பாட்டுக்கு பஞ்சமில்லாமல் ஓரளவுக்கு சமாளித்து வந்தோம். ஆனால், இந்த நோய் தொற்றினால் அரசு ஊரடங்கு அறிவித்த பிறகு, ஓர்வேளை உணவுக்குக் கூட மிகுந்த கஷ்டமாகிவிட்டது. இதுகுறித்து நாங்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்திருந்தோம். மேலும், ஆட்சியரும், எங்கள் நிலை குறித்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வந்திருந்த செய்திகளை வைத்து அறிந்து வைத்திருந்தார்.
இதையடுத்து, எங்களைத் தேர்வு செய்து, எங்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிப்பதற்கான பயிற்சிகளை வழங்கினார். இதன்மூலம் எங்களையும் தொழில்முனைவோராக மாற்றி, எங்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் என நெகிழ்ந்தார்.
18 நரிக்குறவர் இனப் பெண்களைத் தேர்ந்தெடுத்த ஆட்சியர், இவர்களுக்கு மகளிர் திட்டம் மூலம் சானிடைசர், சோப் ஆயில், பாத்திரம் துலக்கும் பவுடர், வாஷிங் பவுடர் என பல்வேறு விதமான வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரித்து, அதனை விற்பனை செய்ய பயிற்சியளித்திருக்கிறார்.
மேலும், இவர்கள் மிக விரைவாக அதனை கற்றுத்தேர, இவர்களை ஊக்குவிக்கும்விதமாக இவர்கள் வசிக்கும் திருநெல்வேலி பேட்டை பகுதியிலேயே இரண்டு கடைகளையும் அமைத்து தருவதாக வாக்களித்திருக்கிறாராம். இதனால் எங்களுக்கு மொத்தமாக ஆர்டர் கொடுத்தால்கூட, நாங்கள் இப்பொருள்களை தயாரித்து வழங்க ரெடியாக இருக்கிறோம் என்கிறார்கள் உற்சாகமாக.
இதற்கு முன்பு சாலைகளின் ஓரத்திலோ, அல்லது தள்ளுவண்டியிலோ பாசி, வளையல் போன்றவற்றை மட்டும் விற்று, வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த எங்களுக்கு, இந்த வீட்டு உபயோக பொருள்களை விற்பனை செய்வதற்கான கடைகள் மட்டும் விரைவில் கிடைத்துவிட்டால் எங்களின் வாழ்வாதாரம் விரைவில் உயர்ந்துவிடும் என்கிறார்.
இதனால் எங்கள் குழந்தைகளுக்கு நல்ல உணவு, கல்வி போன்றவையும் எளிதாகக் கிடைக்கும். எனவே நான் மற்றவர்களையும் இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தி, அவர்களும் முன்னேற அறிவுறுத்தி வருகிறேன் என்கிறார் செல்ல மீனா.
மேலும், மகளிர் திட்டம் மூலம் இதேபோல வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு தையல் உள்பட பல்வேறு சிறுதொழில் பயிற்சி அளித்து அனைவரும் வாழ்வில் ஏற்றம்பெற பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளதாக நெல்லை ஆட்சியர் தெரிவித்திருப்பதன்மூலம், என்னதான் கொரோனா நம்மை கொன்று தின்று விட முயன்றாலும், நாம் மீண்டும் மீண்டும் வீறு கொண்டு எழுவோம் என்பதையே இதுகாட்டுகிறது.
நெல்லையில் தொடங்கிய இம்முயற்சி தமிழகம் முழுவதும் பரவி வாழ்வாதாரத்தை தொலைத்த அனைவரின் வாழ்விலும் தீபஓளியை ஏற்றட்டும்.