தூய நரையில் மலர்ந்த காதல்: முதியோர் இல்லத்தில் கரம் கோர்த்த மணமக்கள்!
காதலுக்கு தடைகளில்லை, வயதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 60 வயதினை கடந்த கேரள தம்பதிக்கு டிசம்பர் 28 - காலை 11 மணிக்கு மாநில அமைச்சர் தலைமையில் முதியோர் இல்லத்தில் மணம் முடிக்கப்பட்டது.
தூயநரைக்கும் சருமம் சுருங்கலுக்கு பிறகான வாழ்க்கையில், அரவணைப்பு, பாசப்பரிமாற்றமின்றி தவிக்கும் முதியவர்களது கடைசிக்கால போராட்ட வாழ்வு இயல்பான நிகழ்வாய் கருதும் ஒன்றாக மாறிவருகிறது. ஆனால், ‘20 வயசானா என்ன 60 வயசானா என்ன துணை துணைதான்’ என்ற ‘பவர்பாண்டி’ எடுத்துக்கூறிய ஆழ்கருத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் வகையில், கேரள தேசத்தில் தூய நரையில் பிறந்த காதலின் நீட்சியாய் 60 வயதினை கடந்த காதல் ஜோடிக்கு மணம் முடிக்கப்பட்ட அழகிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
ஆம், கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த 67 வயது கோச்சானியனுக்கும், 66 வயது லெட்சுமி அம்மாளுக்கும் கடந்த சனிக்கிழமை முதியோர் இல்லத்தில் திருமணம் நடந்துள்ளது. திருச்சூரில் அருகே உள்ள ராமவர்மாபுரம் அரசினர் முதியோர் இல்லத்தில் வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் முன்னிலையில் நடந்த திருமணத்தில், நிரம்பி வழிந்தது பேரன்பு.
திருமணத்தின் முந்தைய நாள் மாலையில் மணமகள் லெட்சுமி அம்மாளுக்கு மெகந்தி வைக்கும் சடங்கும் நடந்துள்ளது. திருச்சூர் மாநகராட்சி நல குழு உறுப்பினர், ஜான் டேனியல் மெகந்தி விழாவினை பேஸ்புக்கில் லைவ்வாக்க, ஹார்டின்கள் பறந்தது.
காதல் கடந்து வந்த கதை...
காதல் ஜோடி ஒருவரையொருவர் மூன்று சகாப்தங்களாக அறிவர். லெட்சுமி அம்மாளின் கணவர் கிருஷ்ணா ஐயர் பிசியான செஃப். சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணா ஐயர் உடல்நலக் குறைவால் மரணப்படுக்கைக்கு செல்ல, அவரது கடைசிநாள்களில், அவருடைய சமையல் உதவியாளரான கோச்சானியனை அழைத்து, மனைவியை பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அவர் காலமான பிறகு, நான் சில வருடங்கள் என் வீட்டில் தனியாக வாழ்ந்தேன். எனக்கு ஏதாச்சும் உதவி தேவைப்பட்டால் கோச்சானியன் வீட்டிற்கு வருவார். பின்னர், நான் எனது வீட்டை விற்று உறவினரின் வீட்டிற்குச் சென்று பல ஆண்டுகள் வாழ்ந்தேன். அங்கிருக்கும் போது கோச்சானியன், நான் எப்படியிருக்கேன்னு அடிக்கடி விசாரித்து கொள்வார்,’ என்று லெட்சுமி கூறினார்.
ஆயினும், சில ஆண்டுகளுக்கு இருவருக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தைகளுமற்று போனது. காலங்களும் உருண்டோடியது. வயதான லெட்சுமி அம்மாளுக்கு கவனிப்பு தேவைப்பட அவர், ராமவர்மாபுரத்தில் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
சமையல்காரரான கோச்சானியனும் தொழில் சார்ந்து பல இடங்களுக்கு பயணப்பட வேண்டிருந்தது. இதற்கிடையே, கோச்சானியன் பணி தொடர்பாய் குருவாயூர் சென்றிருக்கையில், திடீர் என்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். கோச்சானியனை வயநாட்டைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளது. அப்போது அவரிடம் யார் நீங்கள்? எங்கு வசிக்கிறீர்கள்? என்று வாழ்க்கை குறித்துக் கேட்டபோது, அவர் லெட்சுமி அம்மாள் குறித்துத் தெரிவித்துள்ளார்.
பின்னர், கேரள சமூக அமைச்சகத்தின் உதவியுடன் லெட்சுமி அம்மாள் தங்கியிருந்த முதியோர் இல்லத்திலே கோச்சானியனை சேர்த்துள்ளனர். ஒரு காலும், கையும் முடங்கிய நிலையிலிருந்த அவரை, அன்பினில் கலந்த கவனிப்பால் குணப்படுத்தினார் லெட்சுமி அம்மாள். ஏதேவொரு மனத்தயக்கம் இருவருக்குமிடையே இருந்த அன்பை இருவரும் வெளிப்படுத்திக் கொள்ளவேயில்லை.
‘20 வயசானா என்ன 60 வயசானா என்ன துணை துணைதான்’ என்ற ‘பவர்பாண்டி’ சமூகத்துக்கு எடுத்துக்கூறிய கருத்தை கோச்சானியனும், லெட்சுமி அம்மாளும் உணர்ந்த தருணம், இருவரும் இறுதி காலத்தை கணவன் -மனைவியாக வாழ்ந்து, மகிழ்ந்து கழித்திட முடிவெடுத்தனர். அந்நாளும், கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது.
இளஞ்சிவப்பு நிற பட்டுப் புடவையில், மணப்பெண் அலங்காரத்தில் லெட்சுமி அம்மாளும், பட்டு வேட்டி, பட்டுசட்டையில் வாலிபர்களுக்கே உரித்தான மிடுக்கிலிருந்த கோச்சானியனின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி அன்புகளை அள்ளியது.
திருமணத்தை முன்னின்று நடத்திய கேரள மாநில வேளாண் அமைச்சர் சுனில்குமார் ஃபேஸ்புக் பதிவில், அந்த நாளை ‘எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று’ என்று குறிப்பிட்டுள்ளார்.
“இது என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாகும். ராமவர்மாபுரம் முதியோர் இல்லத்தில் கோச்சானியன் மற்றும் லெட்சுமி அம்மாளின் திருமணத்திற்கு சாட்சி கொடுத்தது எப்போதும் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். நிர்வாகம், சமூக ஆர்வலர்கள், முதியோர் இல்லத்தில் வசிக்கும் அவைரும் இணைந்து இந்த திருமணத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளனர்.
அரசு நடத்தும் முதியோர் இல்லத்தில் நடக்கும் முதல் திருமணம் இது. மணமகனும் மணமகளும் மண்டபத்திற்குள் நுழைந்தபோதே மகிழ்ச்சியாகவும் ஆர்வமுடனும் இருந்தனர். அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும் அமைதியானதாகவும் இருக்க வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்,” என்று அமைச்சர் கூறினார்.
மனதால் இணைந்த மணமக்களே மகிழ்ந்திருங்கள்!