380கிராம் எடை கொண்ட 5 மாத குறைப் பிரசவக் குழந்தையை காப்பாற்றிய சென்னை மருத்துவர்கள்!
தாயின் கருவறையில் 5 மாதங்கள் மட்டுமே இருந்த இந்தியாவின் மிகவும் இளம்வயது பச்சிளம் குழந்தைக்கு, வெளியில் 100 நாட்கள் தீவிர சிகிச்சையளித்து அதனைக் காப்பாற்றி சாதனைப் படைத்துள்ளது சென்னை தனியார் மருத்துவமனை.
நாகரீக மாற்றத்தால் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை காரணங்களால் பல தம்பதிக்கு பிள்ளைப்பேறு என்பது கனவாக இருக்கிறது. குழந்தைப் பிறப்பது கனவாகவே போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த சென்னையைச் சேர்ந்த கீதா, அறிவழகன் தம்பதிக்கு குழந்தை வரம் கிடைத்தது. இரட்டை குழந்தைகளை கருவில் சுமந்திருந்த கீதாவிற்கு அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை.
கீதா 5 மாத கர்ப்பிணியாக இருந்த போது அவரது மகப்பேறில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரட்டைக் குழந்தைகள் வளர்ச்சிக்காக கர்ப்பப்பை சவ்வு விரிவடைதலில் சிக்கல் இருந்ததால் கீதாவிற்கு 22வது வாரத்திலேயே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
குழந்தைகளுக்கு தீவிர பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் இரட்டையில் ஒரு குழந்தையின் உயிர் பிரிந்தது. 24*7 மணி நேரம் தீவிர சிகிச்சை தேவைப்பட்ட மற்றொரு ஆண்குழந்தை சென்னையில் செயல்பட்டு வரும் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பச்சிளம் குழந்தைகள் சிகிச்சையில் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இந்த மருத்துவமனையை நம்பிய கீதா அறிவழகனுக்கு அவர் குழந்தை திரும்பக் கடைத்து விட்டது.
தாயின் கருவறையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்த குழந்தையை காப்பாற்ற முடியுமா என்ற கேள்விக்கு அறிவியல் பூர்வமாக கிடைக்கும் பதில் மிக அரிதாகவே இது சாத்தியம்.
குறைப்பிரசவத்தில் பிறந்த இந்தக் குழந்தைக்கு சுவாசிப்பதில் அதிக சிரமம் இருந்துள்ளது. மேலும் பலவீனமான எலும்புகள் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட பிரச்னைகளும் இருந்துள்ளது. மருத்துவமனையில் சேர்க்கைக்காக கொண்டு வரும் போது 380 கிராம் மட்டுமே எடை இருந்துள்ளது.
பிள்ளை பிறப்பியல் மற்றும் பச்சிளம் குழந்தையியல் துறையின் முதன்மை ஆலோசகர் டாக்டர். ராகுல் யாதவ் தலைமையிலான டாக்டர்கள் ஷோபனா ராஜேந்திரன் மற்றும் அருண்குமார் குழு குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தனர்.
22 வாரக் குழந்தையை உயிர் பிழைக்க வைப்பதற்கான விகிதம் மிகக்குறைவு என்பதால் இந்தக் குழந்தையை காப்பாற்றும் பொறுப்பு மிக அதிகமாக இருந்தது. குழந்தைக்கு நுரையீரல் தொற்றும் இருந்தது. இரட்டைச் சுவர் கொண்ட இன்குபேட்டர்களை அமைத்து குழந்தைக்கு செயற்கை சுவாசம் பொருத்தியதோடு, குழந்தை ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து ஊக்கமும் தரப்பட்டது.
பெற்றோரின் முழு ஒத்துழைப்பால் எங்களால் இந்தக் குழந்தையை காப்பாற்ற முடிந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் நாங்கள் குறைப்பிரசவத்தில் அதாவது 25 வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்த 5 குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளோம். குறைப்பிரசவத்தில் உயிர் பிழைக்கக் குறைவான வாய்ப்புகளுடன் இருக்கும் குழந்தைகளையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக டாக்டர். ராகுல் யாதவ் கூறியுள்ளார்.
100 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு 1.54 கிலோ எடையுடன் குழந்தை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தை இயல்பாக செயல்படுவதுடன் அதன் எடையும் 3.5 கிலோவாக அதிகரித்துள்ளது.
ஐம்புலன்களும் சிறப்பாக செயல்படுகிறது, மனவளர்ச்சியும் இயல்பாகவே இருப்பதை மருத்துவர்கள் குழு உறுதி செய்துள்ளது. வளர்ந்து விட்ட மருத்துவ உலகில் வீணான உயிரிழப்புகள் தேவையற்றது என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியுள்ளது. குழந்தை உயிர் பிழைக்கத் தேவையான உயர் மருத்துவ சிகிச்சையளிக்க அதிக நிதி தேவைப்பட்ட நிலையில் மருத்துவமனையே கீதா அறிவழகன் தம்பதிக்கு கிரவுட் ஃபண்டிங் முறையில் நிதித் திரட்ட உதவி செய்து குழந்தைக்கு மறுஜென்மம் கொடுத்துள்ளது.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி