ஆட்டோமேடிக் சானிடைசர் இயந்திரம் வடிவமைத்துள்ள மதுரை பொறியாளர்கள்!
இந்த இயந்திரத்தில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால் மனிதக் கைகள் படவேண்டிய அவசியமில்லை.
கொரோனா வைரஸ் கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளைத் தொடுவதன் மூலம் பரவுகிறது. எனவே கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரிலோ அல்லது சானிடைசர் கொண்டோ சுத்தப்படுத்தவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கநிலை படிப்படியாகத் தளர்த்தப்படும் சூழலில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் முகக்கவசம் அணிந்து செல்வதும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துவதும் கட்டாயமாகிறது.
இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதால் அலுவலகம் அல்லது மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் ஒரு பொதுவான இடத்தில் வைக்கப்படும் கிருமிநாசினியை பலரும் கைகளால் தொட்டு பயன்படுத்துவது பாதுகாப்பற்றது.
இதைப் பற்றி சிந்தித்த மதுரையைச் சேர்ந்த தீபன் மற்றும் பிரசன்னா ஆகிய இரண்டு பொறியாளர்கள் இதற்கான தீர்வை உருவாக்கியுள்ளனர். இவர்கள் தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தைக் வடிவமைத்துள்ளனர்.
இந்த ஆட்டோமேடிக் சானிடைசர் இயந்திரம் பார்ப்பதற்கு தண்ணீர் சுத்திரிக்கும் கருவியைப் போன்றே தோற்றமளிக்கிறது. இதில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால் மனிதக் கரங்கள் படவேண்டிய அவசியமில்லை.
மதுரையில் Aran Technologies என்ற நிறுவனம் நடத்தும் தீபன் மற்றும் பிரசன்னா, தற்போதுள்ள தேவைக்கு இந்த மெஷின் சிறு நிறுவனங்கள், பொது இடங்கள் என பல இடங்களில் தேவைப்படும் என யோசித்து இதை வடிவமைத்தனர். இந்த இயந்திரத்தின் கீழ்பகுதியில் கைகளை நீட்டினால் தானாகவே 5 மி.லி அளவிற்கான கிருமிநாசினி கைகளில் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அளவினை தேவைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.
இவர்கள் மதுரை மாநகராட்சிக்கு இந்தக் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை இலவசமாக வழங்கியுள்ளனர்.
“நோய் தொற்று பரவலைத் தடுக்க கிருமிநாசினியைத் தொடர்ந்து பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். வழக்கமாக ஒருவர் கைகளால் தொட்டு பயன்படுத்திய கிருமிநாசினியை அடுத்த நபர் கைகளால் தொட்டு பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் நாங்கள் வடிவமைத்துள்ள இந்த இயந்திரத்தின் அருகில் கைகளை நீட்டினால் தானாகவே 5 மி.லி அளவிற்கான கிருமிநாசினி கைகளில் விழும். இந்த இயந்திரத்தை யாரும் கைகளில் தொடவேண்டாம் என்பதே இதன் சிறப்பம்சம்,” என்கிறார் தீபன்.
இந்த இயந்திரம் 5,8,10 மற்றும் 12 லிட்டர் கொள்ளவுகளில் கிடைக்கிறது. நமக்குத் தேவையான சானிடைசர் திரவத்தை இதில் நிரப்பி பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது ஒரு மெஷின் ரூ.7000 (தொடக்க விலை) முதல் அளவிற்கு ஏற்றவாறு இது விற்கப்படுகிறது என நிறுவனர் தீபன் தெரிவித்தார்.
கட்டுரை: ஸ்ரீவித்யா