டீ விற்பனை வருவாயில் ஏழைகளுக்கு உணவளிக்கும் மதுரை டீக்கடைக்காரர்!
டீக்கடைக்காரர் தமிழரசன் டீ விற்பனை மூலம் குறைந்த வருவாயே ஈட்டினாலும் ஏழைகளுக்கு உதவி வருகிறார்.
கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்கள் போன்றோரை வறுமை நிலைக்குத் தள்ளியுள்ளது. தொழில் துறையினர் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதால் பெரும்பாலானோர் வேலையையும் வருவாயையும் இழந்து தவிக்கின்றனர்.
நல்லுள்ளம் படைத்த ஏராளமானோர் இந்தக் கடினமான சூழலில் தவிப்போர்களுக்கு உதவி வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் மதுரையைச் சேர்ந்த தேநீர் விற்பனையாளர் தமிழரசன். இவர் மதுரையின் அலங்காநல்லூரைச் சேர்ந்தவர்.
தமிழரசன் வீட்டிலேயே தேநீர் தயாரிக்கிறார். அதை பாத்திரத்தில் நிரப்பி சைக்கிளில் எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார். இவரது வருமானமே குறைவு என்றாலும் ஏழைகளுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் உணவளித்து உதவி வருகிறார்.
“அலங்காநல்லூர், மேட்டுபட்டி, புதுப்பட்டி என சுற்றுவட்டார கிராமங்களுக்கு காலையிலும் மாலையிலும் சைக்கிள் ஓட்டி சென்று டீ விற்பனை செய்கிறேன். இதன் மூலம் தினமும் வருமானம் கிடைக்கிறது,” என்று தமிழரசன் ஏஎன்ஐ-இடம் தெரிவித்துள்ளார்.
“நான் டீ விற்பனை செய்யும்போதெல்லாம் சாலைகளிலும் கோவில் வாசல்களிலும் உள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக டீ கொடுப்பேன். அதுமட்டுமின்றி என்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து இவர்களுக்கு மூன்று வேளையும் உணவளிக்கிறேன்,” என்கிறார் தமிழரசன்.
தமிழரசனின் முயற்சிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அப்போதிருந்து நெட்டிசன்கள் இவரைப் பாராட்டி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் சொந்தமாக ஒரு கடையை அமைத்து பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உதவவேண்டும் என்பதே இவரது விருப்பம் என்று 'இந்துஸ்தான் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது. இவர் வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால் இவரிடம் சொத்து ஏதும் இல்லாத காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழரசன் போன்றோரின் நற்குணம், பலர் தங்களது வசதியான வட்டத்தை விட்டு வெளியே வந்து இதுபோன்ற நெருக்கடியான சூழலில் மற்றவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று உந்துதலளிக்கிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA