200 பேருக்கு வேலை வாய்ப்பு; 500 கோடி ரூபாய் வருவாய் இலக்கை நோக்கி Mamaearth!
ஆண்டு வருவாய் ரூ.500 கோடியை கடந்துள்ளது!
Honasa Consumer Pvt Ltd (HCPL)ன் தனிநபர் பராமரிப்பு பிராண்டான 'மாமாஎர்த்' (Mamaearth) பல்வேறு பொறுப்புகளுக்கு 200 பேரை இந்தாண்டு பணியமர்த்த இருக்கிறது. இதன்மூலம் மாமாஎர்த்-தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழியாக இதன் வணிகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி வேகத்தை எட்டியுள்ளதை இது காட்டுகிறது.
பெருநகரங்கள் மற்றும் டயர்-1, டயர்-2 நகரங்களில் எழுந்துள்ள இந்த பிராண்டின் தேவை காரணமாக Mamaearth-ன் ஆண்டு வருவாய் ரூ.500 கோடியை கடந்துள்ளது. மேலும் இது எதிர்காலத்தில் இரட்டிப்பாகும் எனவும் கூறப்படுகிறது.
"இப்போது நாங்கள் சுமார் 300 பேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள், இந்த எண்ணிக்கை 500ஆக உயரும். இவர்களில், 100 பேர் ஆஃப்லைன் சில்லறை அணியின் ஒரு பகுதியாக இருப்பார்கள். மற்றவர்கள் வளர்ச்சிக் குழு, டி 2 சி குழு, வாடிக்கையாளர் சேவை, சந்தைப்படுத்தல் குழு மற்றும் பிற செயல்பாடுகளில் பணியமர்த்தப்படுவார்கள். மாமாஎர்த் இப்போது ரூ.500 கோடி ஆண்டு ரன்ரேட் வருவாய் ஈட்டும் பிராண்டாகும்.”
இது வேகமாக வளர்ந்து வரும் தனிநபர் பராமரிப்பு பிராண்டுகளில் முக்கியமானதாக திகழ்கிறது. நான்கு ஆண்டுகளுக்குள் மைல்கல்லை எட்டும், என்று ஹொனாசா நுகர்வோர் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமா வருண் அலாக் தெரிவித்துள்ளார்.
மேலும், “எங்கள் அடுத்த லட்சிய மைல்கல் ரூ.1,000 கோடியாக இருக்கும், ஆனால் அதை எப்போது அடைய முடியும் என்று பார்ப்போம். கடந்த ஆண்டு வளர்ச்சி 400 சதவீதம் கூடுதலாக இருந்தது. எனவே ரூ.1,000 கோடி எங்களுடைய அடுத்த இலக்கு," என்று அவர் கூறினார்.
வருவாய் ரன் வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சந்தை மூலம் விற்கப்படும் பொருட்களின் மொத்த மதிப்பைக் குறிக்க ஆன்லைன் சில்லறை விற்பனையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.
ஆஃப்லைன் இருப்பை விரிவுபடுத்துதல், புதுமையான தயாரிப்புகளைத் தொடர்ந்து கொண்டுவருதல், மற்றும் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதிக பிராண்டுகளை அறிமுகப்படுத்தி மாமாஎர்த்தில் இருந்து அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகிய மூன்று விஷயங்களில் நிறுவனம் கவனம் செலுத்தும் என்று வருண் அலாக் கூறியுள்ளார்.
"எங்கள் டி 2 சி மற்றும் இணையவழி சேனல்களைத் தவிர, ஏராளமான நுகர்வோர் ஆஃப்லைன் இடத்தில் பரிவர்த்தனை செய்வதை விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம்; ஆஃப்லைனில் இருப்பை விரிவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தப் போகிறோம், மேலும் இந்தியாவின் சிறந்த 100 ஸ்மார்ட் நகரங்களில் இருக்கிறோம்.”
”புதுமை என்பது எங்கள் பிராண்ட் டி.என்.ஏ.வின் முக்கிய பகுதியாகும், அது தொடர்ந்து நடக்கும், நுகர்வோருக்கு உண்மையிலேயே தேவைப்படும் புதிய பிரிவுகள் மற்றும் தயாரிப்புகளை நாங்கள் கொண்டு வருவோம்," என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 10,000 லிருந்து 40,000-க்கும் மேற்பட்ட ரிடைல்ஸ் பாயிண்ட்களை அதன் நெட்வொர்க்கில் சேர்க்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. சுமார் 20 சதவிகிதமாக இருக்கும் ஆஃப்லைன் விற்பனை வருவாய், ஆண்டு இறுதிக்குள் 35 சதவிகிதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுப்பு: மலையரசு