தூத்துக்குடி சலூன் கடைக்காரர் பொன் மாரியப்பன் உடன் தமிழில் உரையாடி பாராட்டிய மோடி!
தூத்துக்குடியில் தனது சலூன் கடையில் நூலகம் அமைத்து மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொன் மாரியப்பனுடன் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் தமிழில் உரையாடி அவரை பாராட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
தூத்துக்குடியில் சலூன் கடை நடத்தி வரும் பொன் மாரியப்பன் வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில் தனது கடையில் நூலகம் ஒன்றை அமைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாற்றினார். அப்போது பொன் மாரியப்பனிடம் தொலைபேசி வாயிலாக உரையாடி அவரது சேவையைப் பாராட்டினார்.
மாரியப்பன் தனது கடைக்கு முடிதிருத்தம் செய்ய வருவோர் செல்போனிலேயே அதிக நேரம் செலவிடுவதை கவனித்தார். மக்களிடையே வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது என்று வருத்தப்பட்ட மாரியப்பன், ஆறாண்டுகளுக்கு முன்பு தனது சலூன் கடையில் சில புத்தகங்களை வைத்துள்ளார்.
இன்று அதுவே ஒரு நூலகமாக மாறியுள்ளது. இவரது கடையில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில் வரலாறு, இலக்கியம், சிறுகதைகள், சிறுவர் கதைகள் என வகை வகையாக புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்கள் புத்தகங்களை ஆர்வமாக படிக்கத் தூண்டும் வகையில் அவர்களுக்கு முடி வெட்டும் கட்டணத்தில் சலுகைகள் வழங்குகிறார். இதற்கென அவர் வைத்துள்ள நோட்டு ஒன்றில் மாணவர்கள் தங்களது பெயர், படித்த நூலின் பெயர் மற்றும் பக்கங்களின் எண், பிடித்த வரிகள் போன்ற தகவல்களை எழுதவேண்டும்.
இவரது சமூக அக்கறையைப் பாராட்டும் விதமாக மோடி இவரிடம் தமிழில் உரையாற்றினார். வணக்கம் மாரியப்பன், நன்றாக இருக்கிறீர்களா? என்று தனது உரையாடலைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து நூலகம் அமைக்கும் ஐடியா எப்படி வந்தது என்று கேட்டறிந்தார்.
அதற்கு மாரியப்பன் தான் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாகவும் குடும்பச் சூழல் காரணமாக தொடர்ந்து படிக்க முடியாமல் போனது என்றும் குறிப்பிட்டார். படிப்பின் அருமையை உணர்ந்த மாரியப்பன் மற்றவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இந்த முயற்சியை மேற்கொண்டதாக பிரதமரிடம் விவரித்தார்.
மாரியப்பனுக்கு பிடித்த புத்தகம் எது என்று பிரதமர் மோடி கேட்டதற்கு திருக்குறள் என்று அவர் பதிலளித்துள்ளார்.
திருக்குறளின் புகழ் நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நூல் அனைத்து மொழிகளிலும் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் வாசிக்கவேண்டும் என்று பிரதமர் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.