சுற்றுச் சூழலை தூய்மைப்படுத்தும் கோவை மாரத்தான் ஆர்வலர்!
39 வயது ஸ்ரீனி சுவாமிநாதன் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன் தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சாலைகளில் நாம் நடந்து செல்கையில் பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்பட்டிருப்பதை கவனித்திருப்போம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாக இருக்கும் நிலையில் அவ்வாறு பாதுகாக்கும் சிலரும் தங்களது சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
ஆனால் 39 வயது ஸ்ரீனி சுவாமிநாதன் தூய்மைப்படுத்தும் முயற்சி ஒன்றின் மூலம் தனது சுற்றுவட்டாரப் பகுதிகளை மட்டுமல்லாது தனது நகரத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த இவர் ஒரு மாரத்தான் ஆர்வலர். தன்னைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஓடுகிறார். 2013-ம் ஆண்டு முதல் இவர் தான் ஓடும் பாதைகளில் உள்ள குப்பைகளை அகற்றி வருகிறார்.
மும்பையின் போரிவலி தேசிய பூங்காவில் ஜூலை 27-ம் தேதி நடைபெற்ற #BNPEndurathon 12 கி.மீ ஓட்டத்தின்போது சுற்றுலாப்பயணிகள், அந்த வழியாக பயணம் செய்வோர், உள்ளூர் மக்கள், மாரத்தான் ஓடுபவர்கள் போன்றோர் வீசிய 35 கிலோவிற்கும் அதிகமான பிளாஸ்டிக் குப்பைகளை 3.5 மணி நேரத்திற்கும் அதிகமாக செலவிட்டு சேகரித்துள்ளார். ஸ்ரீனி தனது சமீபத்திய வெற்றி குறித்து என்டிடிவி உடனான உரையாடலில் கூறும்போது,
"நான் 200-க்கும் அதிகமான சிப்ஸ் பாக்கெட்டுகள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 100-க்கும் அதிகமான பிளாஸ்டிக் ஸ்பூன்கள், 200-க்கும் அதிகமான பெட் பாட்டில்கள் / குளிர்பான பாட்டில்கள், 100-க்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகள், 30-க்கும் அதிகமான மதுபாட்டில்கள், 100-க்கும் அதிகமான குட்கா மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகள் போன்றவற்றை சேகரித்தேன். இவை அனைத்தும் நமது வசதிக்காக பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்த பிளாஸ்டிக் கழிவுகளாகும். இந்த நிலையை நான் மாற்ற விரும்புகிறேன். இத்தகைய பொருட்களை நாம் அதிகம் சார்ந்துள்ளதால் இவை சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதை நாம் உணர்வதில்லை. பிளாஸ்டிக் கழிவுகள் இன்று நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும். இதற்கான தீர்வுகளை நாம் ஆராயவேண்டிய நேரம் இது,” என்றார்.
ஸ்ரீனி கழிவுகளை சேகரித்த பிறகு அவற்றை பிரித்தெடுத்து குப்பை பொறுக்குபவர்களிடம் விற்பனை செய்கிறார். ரேப்பர்கள், பிளாஸ்டிக் பைகள், பாலி பைகள் போன்ற விற்பனை செய்ய இயலாத கழிவுகள் நகராட்சி தொட்டிகளில் கொட்டப்படுகிறது.
நமது நகராட்சிகளில் மறுசுழற்சி செய்வதற்கான வசதிகள் முறையாக இல்லை என்கிறார் ஸ்ரீனி.
ஸ்ரீனி மேற்கொண்டு வரும் தூய்மைப்பணிகள் சிறு வயதிலேயே திட்டமிடப்பட்டது அல்ல. சாலைகளில் குவிக்கப்படும் குப்பைகளை அன்றாடம் கவனித்தபோதே இத்தகைய முயற்சியைத் தொடங்கியுள்ளார். 2013-ம் ஆண்டு முதலே ஓட்டப்பயிற்சியின்போது குப்பைகளை சேகரிக்கும் (Plog Journey) பணியை மேற்கொண்டு வருகிறார். அவர் கூறும்போது,
”நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் மூலமாகவும் படித்து தெரிந்துகொண்டதன் காரணமாகவும் நான் வசிக்கும் கிரகத்தை தூய்மைப்படுத்துவதில் பங்களிக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அக்கறை காட்டுகிறேன். நான் உற்பத்தி செய்யும் கழிவுகளின் அளவுகளிலும் கார்பன் அடிச்சுவடை எவ்வாறு குறைக்கலாம் என்பதிலும் கவனம் செலுத்துகிறேன். 2009ம் ஆண்டு என்னுடைய ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஓட்டப்பயிற்சியைத் தொடங்கினேன். என்னுடைய உடல்நலனுக்காக என்னால் இதைச் செய்யமுடியுமானால் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் என்னால் பங்களிக்கமுடியுமா என்கிற கோணத்தில் சிந்தித்தேன்,” என்றார்.
ஸ்ரீனி இந்த முயற்சி மட்டுமின்றி பல்வேறு நற்பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். உதாரணத்திற்கு கடந்த பத்தாண்டுகளாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு வரும் ஸ்ரீனி ராஜஸ்தானில் இரவு நேரங்களில் செயல்படும் பல்வேறு பள்ளிகளுக்கு சோலார் விளக்குகளை வழங்குவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
ஓட்டப்பயிற்சி தீவிர ஆர்வம் கொண்ட ஸ்ரீனி பிட்ஸ் பிலானி முன்னாள் மாணவர் ஆவார். Teach For India-வில் தன்னார்வலராக இணைந்துள்ளார். மும்பை தாராவியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 2011-ம் ஆண்டு வரை இரண்டாண்டுகள் கற்றுக்கொடுத்ததாக Indulge Express தெரிவிக்கிறது.
“மனிதர்களுக்காகவும் விலங்கினங்களுக்காகவும் நாம் நமது உலகை நல்ல விதத்தில் விட்டுச்செல்லவேண்டும். கதாநாயகர்கள் மண்ணில் தோன்றி சுற்றுச்சூழலை பாதுகாப்பார்கள் என நாம் காத்திருக்கக்கூடாது. நாமே நாயகர்களாக மாறவேண்டும்,” என்று என்டிடிவி உடனான உரையாடலில் ஸ்ரீனி குறிப்பிட்டுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA