மெரினா பீச் சிறு வணிகர்களின் நிலை என்ன? லாக்டவுனில் இவர்கள் சமாளித்தது எப்படி?
மெரினா பீச்சில் கடை போட்டு அந்த வருமானத்தில் வாழும் சிறு வணிகர்கள், கொரோனா லாக்டவுனை கடந்தது எப்படி? இப்போது கடைகள் திறந்ததால் இவர்களின் வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பிவிட்டதா? ஒரு ஸ்பெஷல் வீடியோ ரிப்போர்ட்!
கொரோனா எனும் கொடிய நோய் நம்மை தாக்கிய பொழுதிலிருந்து இவ்வுலகமே தன் கட்டுப்பாட்டை இழக்கத்தொடங்கியது போல் ஆனது. கோவிட்-19 வைரசால் பல நாடுகள் லாக்டவுனில் முடங்கியதில், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிறுகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கொரோனாவால் மரணங்கள் ஒருபுறம் இருக்க, வறுமையால் பலர் வாழவே முடியாத நிலைக்குப் போனார்கர். ஓரளவு கையில் சேமிப்பும், வேலையிழக்காமல் இருந்தவர்களுமே இந்த ஊரடங்கை சமாளித்தனர். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக இவற்றில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தொழில்முனைவர்கள் மற்றும் சிறுவணிகர்களே.
ஊருக்கே விடுமுறை நாள் என்றால், அன்றுதான் இவர்களுக்கு பிசினஸ் சூடுபிடிக்கும். பொது இடங்கள், சுற்றுலாப்பயணிகள் வரும் இடங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த சிறு வணிகர்கள், தங்கள் கடைகளை திறக்கமுடியாமல், வேறு பணிக்கும் செல்லமுடியாமல் தவித்த நாட்கள் பல. அரசு மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் உதவியால் பசியின்றி நாட்களை இவர்கள் எப்படியோ கழித்தாலும், தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் கல்வி, திருமணம், சுபநிகழ்ச்சிகள் மற்றும் இதர செலவுகளுக்கு காசில்லாமல் தவித்துள்ளனர் என்பதே உண்மை.
மெரினா பீச்- சிறு வணிகரகள் நிலை என்ன?
சென்னை என்றாலே சட்டென எல்லாருக்கும் நினைவிற்கு வருவது மெரினா பீச் தான். கடற்கரை அழகை ரசித்தவாறு, அங்குள்ள சூடான பஜ்ஜி, மீன் வறுவல் கடைகளில் கொறித்தவாறு மக்கள் வலம்வருவது வழக்கம். ஆனால் கொரோனா லாக்டவுன் சமயத்தில் முற்றிலும் முடக்கப்பட்டது பீச் மற்றும் அங்குள்ள சிறு கடைகள்.
இதையே தங்களது வாழ்வாதாரமாக நினைத்து பலவருடங்களாக வாழ்ந்த சிறுவணிகர்ளுக்கு இது ஒரு பெரிய இடியாக வந்தது. கடற்கரையே மூடப்பட்டுவிட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்? கடந்த மார்ச் முதல் தற்போது வரை, கடந்த ஆண்டில் 20 நாட்கள் மட்டுமே பீச் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. பின்னர், மீண்டும் முடக்கப்பட்டு, இப்போதுதான் கடந்த சில வாரங்களுக்கு முன் திறக்க அனுமதி வழங்கியது தமிழக அரசு.
எத்தனை முறை பீச் சென்றாலும், அதில் ஒரு நிம்மதியும், சந்தோஷமும் கிடைப்பதால், சென்னைவாசிகள் தொடர்ந்து சென்றுவரும் ஒரு பொழுதுபோக்கிடமாக மெரினா இருப்பதால், இங்கு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதனாலேயே அரசு, மெரினாவை திறக்க தயக்கம் காட்டி வந்தது. மக்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை என்றாலும், அங்குள்ள சிறு வணிகர்களின் நிலை மோசமானது.
கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட சிறுகடைகள், மெரினா லைட் ஹவுசில் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை உள்ளது. லாக்டவுன் சமயத்தில் கடைகள் மூடப்பட்டதால், இந்த கடை உரிமையாளர்கள் அதை எப்படி சமாளித்தனர்? குடும்பத்தை நடத்த வருமானமாய் அமைந்த இந்த வாருவாய் இல்லாமல் என்ன செய்தனர்? மெரினா தற்போது மீண்டும் திறந்ததில் இவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதா? என்ற பல கேள்விகளுடன் மெரினா பீச் பக்கம் உலா வந்தோம்.
பஜ்ஜி கடை, பானிபூரி கடை, ரங்கராட்டினம், பலூன் ஷூட்டிங், வேர்கடலை விற்பவர்கள், சோளம், கரும்பு ஜூஸ் என்று மெரினாவைச் சுற்றி பலவித சிறுகடைகள் உள்ளன. பஜ்ஜி கடை நடத்தும் உதயகுமாரி முதல் மீன்வறுவல் கடையை நம்பி மொத்த குடும்பமும் நடத்தும் வளர்மதி வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம், லாக்டவுன் நாட்களை தள்ளிய கதைகள் இருந்தன.
இதுவரை கடையை நம்பி இருந்த இவர்கள், ஊரடங்கு நேரத்தில் வேறு வழியின்றி வீட்டுவேலை, மீன் கழுவும் வேலை, கட்டுமானப்பணி என கிடைத்ததை செய்து சொற்ப வருமானம் ஈட்டி வாழ்க்கையைத் தள்ளியுள்ளனர்.
இப்போது பீச் திறந்துள்ளது. இருந்தும், மக்கள் மெல்ல வரத்தொடங்கியும், இன்னும் பழைய அளவிற்கு இவர்களுக்கு கூட்டமோ, வருமானமோ கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம். இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரமாக இருக்கும் இந்த கடைகளை மொத்தமாக மூடிவிட்டு போக இந்த சிறுவணிகர்களுக்கு மனமில்லை.
என்றோ ஒரு நாள் தங்களின் பழைய வாழ்க்கை திரும்பும் என்ற நம்பிக்கையில் இவர்கள் மீண்டும் உற்சாகமாக கடைகளைத் திறந்த மக்கள் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
இதோ அவர்களின் கதையை கீழே உள்ள காணொளியில் தொகுத்தொள்ளோம்.