என்னது மார்க் ‘சிக்னல்’ யூஸ் பண்றாரா? போன் நம்பர் கசிந்ததால் விளைந்த சிக்கல்; கலாய்த்த நெட்டிசன்கள்!
வாட்ஸ்அப்பிற்கு பதிலாக சிக்னலைப் பயன்படுத்தும் மார்க் ஜுக்கர்பெர்க்!
533 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல் கசிந்துவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தரவுகளும் கசிந்ததுதான்.
ஊடக அறிக்கையின்படி, கசிந்த தரவுகளில் ஜுகர்பெர்க்கின் தொலைபேசி எண், ஃபேஸ்புக் பயனர் ஐடி, இருப்பிடம், திருமண விவரங்கள் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்கள் அடங்கும். இதில் இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.
அதாவது ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க், ஃபேஸ்புக் நடத்தும் வாட்ஸ்அப்’பை பயன்படுத்துவதில்லை. மாறாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் போட்டியாளராகக் கருதப்படும் சிக்னல் ஆப்பை பயன்படுத்துகிறார். சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளரான டேவ் வாக்கர், 2019 ஹேக்கில் தகவல் கசிந்த 533 மில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களில் ஜுக்கர்பெர்க் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்.
வாட்ஸ்அப்’பின் முக்கியப் போட்டியாளர்களில் ஒருவரான சிக்னல் செயலில் ஒரு மறைகுறியாக்கப்பட்ட அதாவது encrypted செய்யப்பட்ட மெசேஜிங் ஆப் ஆகும். இதன் பயன் என்னவென்றால், பயனர்கள் பகிரும் எந்த செய்தியையும் அழைப்புகளையும் நிறுவனம் கண்காணிக்க முடியாது. இதனால் அதனை மார்க் பயன்படுத்துகிறார் எனச் சொல்லப்படுகிறது.
மார்க், சிக்னல் ஆப் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியான பிறகு,
“மே 15 ஆம் தேதி வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு வேகமாக நெருங்கி வருவதால், சிக்னல் ஆப்’பில் இணைய மார்க் எடுத்துக்காட்டாக முன்னிலை வகிக்கிறார்," என்று சிக்னல் நிறுவனம் டுவீட் செய்து கலாய்த்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தனியுரிமைக் கொள்கையை புதுப்பிக்க வாட்ஸ்அப் தீர்மானித்தது. ஆனால் தனியுரிமைக் கொள்கை குறித்து பொதுமக்கள் எதிர்ப்புகள் தெரிவிக்க அதன்பின் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, மார்க் சிக்னல் ஆப் பயன்படுத்தும் செய்திகள் அறிந்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.