12வயதில் திருமணம், பின்னர் விதவை: தொடர் கொடுமைகளைத் தாண்டி தொழில் தொடங்கிய ஜோய்தன் பியா!
12 வயதில் திருமணம் முடிக்கப்பட்டு கணவனை இழந்து தனிமரமாக நின்ற ஜோய்தன் பியா குழந்தைகளைக் காப்பாற்ற வீட்டு வேலை செய்ய ஆரம்பித்து இன்று சொந்தமாக மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
பிரச்சனைகள் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், அதை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் விதம் மாறுபடும். சிலர் பிரச்சனைகளை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இந்தக் கவலை இவர்களை மேலும் மோசமாக்குமே தவிர தீர்வளிக்காது. ஆனால் ஒருசிலர் ஒரு கை பார்த்துவிடுவோம் என்கிற துணிச்சலுடன் பிரச்சனைகளை எதிர்கொண்டு கரையேறியும் விடுகின்றனர்.
மேற்குவங்கத்தின் சுனகாலி கிராமத்தைச் சேர்ந்த ஜோய்தன் பியா இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்.
12 வயதில் இவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஜோய்தனின் கணவருக்கு அவரைவிட மூன்று மடங்கு அதிக வயது. வேறு வழியின்றி திருமணம் செய்துவைக்கப்பட்டது.
சக வயதுடைய குழந்தைகள் படித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்க இவர் மட்டும் வீட்டு வேலைகளை செய்து வந்தார். இரண்டு ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆனார்.
புகுந்த வீட்டினருடன் சுமூகமான உறவு இல்லை. ஜோய்தனையும் அவரது குழந்தைகளையும் அவர்கள் சுமையாகவே பார்த்தார்கள். கொடுமைப் படுத்தினார்கள். கணவரும் இரக்கமின்றி கடுமையாக நடந்துகொண்டார். வீட்டை விட்டு விரட்டியிருக்கிறார்கள்.
”எனக்குக் கல்யாணம் முடிஞ்சு எட்டு வருஷத்துக்கப்புறம் என் கணவர் இறந்துட்டாரு. நான் மட்டுமே சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்த வேண்டிய சூழ்நிலை இருந்துது,” என்கிறார் ஜோய்தன்.
தனித்துவிடப்பட்டார்
ஜோய்தனின் புகுந்த வீட்டினர் அவரையும் குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை, மகனும் இறந்துவிட்டான். இனி இவர்கள் எதற்கு என ஒதுக்கிவிட்டார்கள். ஜோய்தன் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டார்.
அருகிலிருந்த பணக்காரர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று வேலை கேட்டார். வீட்டு வேலையில் சேர்ந்தார். குழந்தைகளையும் உடன் கூட்டிச்சென்று இந்த வேலை செய்து சம்பாதித்து வந்தார்.
“எவ்வளவு பிரச்சனை வந்தாலும்சரி என் குழந்தைங்களை படிக்க வைக்கணும்னு பிடிவாதமா இருந்தேன். பக்கத்துல இருந்த அரசுப் பள்ளியில சேர்த்தேன். கிடைச்ச கம்மியான சம்பளத்தை வெச்சுகிட்டு வாழ்க்கையை ஓட்டினோம்,” என்கிறார்.
மேல்நிலைப்பள்ளி படிப்பில் தேர்வு எழுதி முடித்த ஜோய்தனின் மகன் விவசாயக்கூலியாக வேலை செய்ய ஆரம்பித்தான்.
பெருந்தொற்று
கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கிராமத்தில் பலர் வேலையை இழந்தார்கள். ஜோய்தனின் மகனுக்கும் வேலை போனது. வருமானம் இல்லாமல் பசியால் வாடினார்கள்.
ஒருகட்டத்தில் ஜோய்தனுக்கு நிஷ்தா (Nishtha) என்கிற முயற்சி பற்றி தெரியவந்தது. இதன்கீழ் பெண்கள் குழு, இளைஞர்கள் குழு, உள்ளூர் பள்ளிக்குழந்தைகள் போன்றோரை ஒன்றுதிரட்டி கல்வி உதவி வழங்கப்பட்டது.
நிஷ்தா கிராமப்புற சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் போன்ற பிரிவுகளில் செயல்படுகிறது. கிராமப்புற இளம் பெண்களுக்கு சொந்த பாடதிட்டத்தை உருவாக்கி இந்த லாப நோக்கமற்ற முயற்சி உதவி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் நூலகம், கம்ப்யூட்டர் செண்டர், அங்கன்வாடி போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன. இளம்பெண்களுக்கு தற்காப்புக் கலையில் பயிற்சியளிக்கிறது. அத்துடன் கணவர் துணையில்லாமல் தனித்து வாழும் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த சிறப்பு திட்டங்களும் ஏற்பாடு செய்கிறது.
ஜோய்தனின் அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் பலர் நிஷ்தாவின் குழுவில் இணைந்திருப்பதால் அதைப்பற்றி ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தார் ஜோய்தன்.
ஆதரவு
தற்போது நிஷ்தாவின் ’உன்னதிர் உதான்’ என்கிற சுய உதவிக் குழுவில் ஜோய்தன் இணைந்திருக்கிறார். Edelgive Foundation இதற்கு ஆதரவளித்து வருகிறது. இதன் மூலம் அவருக்கு தொழிமுனைவிலும் சிறுதொழில் செய்யும் திறனிலும் பயிற்சியளிக்கப்பட்டது.
சுய உதவிக் குழுவினரிடம் வேலை கேட்டுப் பார்த்தார். ஆனால், ஊரடங்கு காரணமாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. சிறுதொழில் தொடங்க குழுவினர் ஊக்குவித்தார்கள். ஜோய்தன் அவரது கணவர் செய்து வந்த மீன் வியாபாரத்தில் உடனிருந்து உதவி செய்திருக்கிறார். இதில் ஓரளவிற்கு அனுபவம் இருந்ததால் அதே வியாபாரத்தை நடத்த முடிவு செய்தார். ஆனாலும் அவரிடம் தொழில் தொடங்க பணம் இல்லை.
குழுவைச் சேர்ந்தவர்கள் அவருக்குப் பணம் கொடுத்து உதவ முன்வந்தார்கள். ஒவ்வொருவரிடமும் 10-20 ரூபாய் என சேகரித்தார்கள்.
“குழுவை சேர்ந்தவங்க நான் தொழில் ஆரம்பிக்க உதவி செஞ்சாங்க. வியாபாரத்தை ஆரம்பிச்சேன். ஆனா, அடுத்த பிரச்சனை வந்துது. வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவங்க பிரச்சனை பண்ணாங்க. நான் சங்கத்துல சேராததால வியாபாரம் பண்ண அனுமதிக்கமாட்டோம்னு சொன்னாங்க,” என அடுத்த சிக்கலை விவரித்தார்.
இதை அறிந்துகொண்ட ஜோய்தனின் குழுவினர் உள்ளூர் இளைஞர் கிளப்பை தொடர்பு கொண்டார்கள். உதவி செய்யுமாறு கேட்டார்கள். ஆனால் வியாபாரிகள் சங்கத்தை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது என்றும் முடிந்த உதவியை செய்வதாகவும் சொல்லியிருந்தனர்.
குழுவின் தலைவரும் குழு உறுப்பினர்கள் சிலரும் ஜோய்தனுடன் சேர்ந்து யூத் கிளப் அலுவலகம் சென்றார்கள். வியாபாரிகள் சங்கத்தின் செயலாளரும் யூத் கிளப் உறுப்பினர்களும் அங்கு வந்திருந்தார்கள். வியாபாரம் செய்யும் இடத்திற்கு ஜோய்தன் மாதாந்திர வாடகை கொடுக்க சம்மதித்தால் அனுமதியளிப்பதாக முடிவு எட்டப்பட்டது. தொழிலில் லாபம் கிடைத்ததும் உறுப்பினராக இணைந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
தற்போது ஜோய்தன் வெற்றிகரமாக தொழில் செய்து வருகிறார். குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அவரது மகனும் உதவி செய்கிறார். கடனை அடைக்கக் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
கடினமான காலத்தில் அவருக்கு உதவிக்கரம் நீட்டிய EdelGive Foundation உடன் இணைந்து புதிய தொழில் முயற்சியில் ஈடுபடவும் ஜோய்தன் திட்டமிட்டிருக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா