பூலோகத்தில் செவ்வாய் கிரகம்? நாசாவின் 'மார்ஸ் டூன் ஆல்பா' பற்றி தெரியுமா?
செவ்வாய் கிரகத்தில் நிலவும் சூழலை நகல் எடுத்தது போலவே வாழ்விடத்தை உருவாக்கி, அதில் செவ்வாய்க்கு செல்ல விரும்பும் மனிதர்களை தங்க வைத்து நாசா சோதனை மேற்கொண்டு வருகிறது.
20-ம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நகர்வுகளை உலக நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. அதில் விண்வெளி சார்ந்த அறிவியல் பணிகளில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகளின் பங்கு மிக அதிகம்.
1971 முதல் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டு வருகிறது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் இந்த பணியை மும்முரமாக செய்து வருகின்றன.
அதே நேரத்தில், நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமை மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் பணிகளும் முன்னெடுக்கப்படுகிறது. வரும் 2030ம் ஆண்டுக்குள் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு நிச்சயம் செல்வார்கள் என ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மார்ஸ் டூன் ஆல்பா!
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணி சார்ந்த ஆய்வுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதற்காக செவ்வாய் கிரகத்தில் நிலவும் சூழலை நகல் எடுத்தது போலவே வாழ்விடத்தை உருவாக்கி, அதில் செவ்வாய்க்கு செல்ல விரும்பும் மனிதர்களை தங்க வைத்து வெள்ளோட்டம் பார்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இது எப்படி என்றால் புராணக் கதைகளில் அசுரர்கள் தங்களுக்கென பிரத்யேக சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்வதை நாம் அறிந்திருப்போம். அது போலவே செவ்வாய் கிரகத்தில் நிலவும் அதே சூழலுக்கு நிகரான செட்-அப்பை பூலோகத்தில் விண்வெளி ஆய்வு அமைப்புகள் உருவாக்குகின்றன.
அந்த வகையில், தற்போது ‘Mars Dune Alpha’ எனும் செவ்வாய் கிரகத்தின் சூழல் நிறைந்த புதிய வாழ்விடம் ஒன்றை உருவாக்கி உள்ளது நாசா. செவ்வாய் கிரகத்தில் நிலவும் அதே சூழல் இங்கு இருக்கும்.
1,700 சதுர அடி பரப்பளவு கொண்ட ’மார்ஸ் டூன் ஆல்பா’வில் நான்கு சிறிய அறைகள், உடற்பயிற்சிக் கூடம், இரண்டு கழிவறை, செங்குத்து தோட்டம், பசுமை குடில் மற்றும் சிவப்பு மண்ணால் சூழ்ந்த வகையில் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது. 3டி பிரிண்ட் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள நாசாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி தளத்தில் ஒரு Hangar-ல் இது நிறுவப்பட்டுள்ளது. (Hangar = விமானம் அல்லது விண்கலத்தை வைக்க வடிவமைக்கப்பட்ட கட்டிட அமைப்பு) முக்கியமாக புவி ஈர்ப்பு விசை குறைந்து காணப்படும் செவ்வாயை அப்படியே சிமுலேட் செய்யும் வகையில் ட்ரெட்மில் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இதில் நடை போடுவதன் மூலம் செவ்வாய்க்கு செல்லும் போது அங்கிருந்து மாதிரிகளை தன்னார்வலர்களால் எளிதில் சேகரிக்க முடியும் எனவும் நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தன்னார்வலர்களை ஓராண்டு காலம் தங்க வைக்கும் திட்டத்தில் உள்ளது நாசா.
இதன் மூலம் ‘மார்ஸ் டூன் ஆல்பா’-வில் வாழும் நபர்களின் உடல் நலன் மற்றும் செயல்திறனை தொடர்ச்சியாக ஆய்வு செய்கிறது நாசா. முதற்கட்டமாக இந்த சோதனையில் நான்கு பேர் பங்கேற்றுள்ளனர். தனிமையில் இருக்கும் அவர்களது உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனையும் கண்காணிக்கிறது நாசா. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தின் பின்னணி கொண்ட தன்னார்வலர்களுக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.
மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் இலக்கில் இது நாசா எடுத்து வைத்துள்ள முதல் படி. ஏனெனில், ஆர்ட்டெமிஸ் மிஷன் மூலம் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணியில் நாசா மும்முரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தில் காஸ்மிக் கதிர்கள் உட்பட இன்னும் பிற கதிர்வீச்சு அதிகம் இருப்பது, போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமை, உயிர் காக்கும் கருவிகள் செயல் இழக்கும் அபாயம் போன்ற சவால்கள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதால்தான் முன்கூட்டியே தன்னார்வலர்களுக்கு தீவிரப் பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
செவ்வாயில் அமைக்கப்படும் பேஸில் இருந்து ‘மார்ஸ் சூட்’ அணிந்து கொண்ட பின்னர் அதிலிருந்து வெளிவந்து, ரோவரில் பயணித்து மாதிரிகளை இவர்கள் சேமிக்க வேண்டும். அதன் மூலம் மனிதர்கள் உயிர் வாழக்கூடிய சாத்தியம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Induja Raghunathan