ரூ.8,722 கோடி வருவாய் ஈட்டும் முத்தூட் பைனான்ஸ் தலைவர் எம்.ஜி. ஜார்ஜ் முத்தூட் பணக்காரர் ஆனது எப்படி?
முத்தூட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணமான ஜார்ஜ் முத்தூட் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்!
"வெள்ளிக்கிழமை இரவு 9.21 மணியளவில் அமர் காலனி காவல் நிலையத்தில் எங்களுக்கு தகவல் கிடைத்தது."
இந்தியாவின் மிகப்பெரிய தங்க நிதி நிறுவனமான முத்தூட் குழுமத்தின் தலைவரான எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் தனது 72 வயதில் புதுடில்லியில் காலமானார். காவல்துறையினரின் கூற்றுப்படி, எம்.ஜி.ஜார்ஜ் சமநிலையை இழந்து டெல்லியின் கிழக்கு கைலாஷில் உள்ள தனது வீட்டின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
"72 வயதான ஜார்ஜ் தனது வீட்டின் நான்காவது மாடியில் இருந்து விழுந்தார் என்று வெள்ளிக்கிழமை இரவு 9.21 மணியளவில் அமர் காலனி காவல் நிலையத்தில் எங்களுக்கு தகவல் கிடைத்தது," என்று டி.சி.பி (தென்கிழக்கு) ஆர் பி மீனா கூறினார்.
பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
51,000 கோடி ரூபாய் சந்தை மூலதனம் மற்றும் மொத்த வருமானம் ரூ.8,722 கோடியுடன், தலைசிறந்த முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட், இன்று இருக்கும் பான்-இந்தியா நிதி அதிகார மையமாக மாற்றிய பெருமைக்குரியவர் 1949ல் இன்றைய கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கோசஞ்சேரியில் பிறந்த மத்தாய் ஜார்ஜ் ஜார்ஜ் முத்தூட்.
இவர் முத்தூட் குழுவின் நிறுவனர் முத்தூட் நினன் மத்தாயின் பேரன், மற்றும் நிதித் தொழிலைத் தொடங்கிய எம் ஜி ஜார்ஜ் முத்தூட்டின் மகன்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்ததும், குடும்ப வணிகத்தில் அலுவலக உதவியாளராக சேர்ந்து 1979ல் அதன் நிர்வாக இயக்குநரானார். 1993ல், அவர் முத்தூட் குழுவின் தலைவராக பொறுப்பேற்றார். 1980'களின் முற்பகுதியில், அவரது குடும்பம் பிரிந்தது. மேலும், அவர்களது வணிக சாம்ராஜ்யம் உறவினர்களிடையே பிளவுபட்டது.
இதன் விளைவாக முத்தூட் பப்பச்சன் குழுமம் உருவாக்கப்பட்டது, இது இன்று கேரளாவில் முத்தூட் நிதிக்கு போட்டியாக விளங்குகிறது.
ஜார்ஜின் தலைமையின் கீழ் தான், முத்தூட் பைனான்ஸ் கேரளாவின் கொச்சியில் உள்ள அதன் தலைமையகத்திலிருந்து விரிவடைந்து நாட்டின் மிகப்பெரிய தங்கக் கடன் நிறுவனமாக உயர்ந்தது.
இந்தியா முழுவதும் 5,550க்கும் மேற்பட்ட கிளைகளும், ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் (2020) வருவாயும் கிடைத்தது. டிசம்பர் 2020 காலாண்டில் இந்நிறுவனத்தின் கடன் புத்தகம் 56,000 கோடி ரூபாயாக இருந்தது என்கிறது பி.டி.ஐ.
2020ஆம் ஆண்டில், ஜார்ஜ் முத்தூட் 26வது பணக்கார இந்தியராகவும், இந்தியாவின் பணக்கார மலையாளியாகவும் ஃபோர்ப்ஸ் ஆசியா பத்திரிகை அறிவித்தது.
தகவல் உதவி - indianexpress | தமிழில்: மலையரசு