’இந்தியாவில் நடப்பது நல்லதல்ல’ - சத்ய நாதெள்ளா CAA குறித்து கவலை!
அமெரிக்காவில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிறுவன சி.இ.ஓ சத்யா நாதெள்ளா, இந்தியாவில் நடப்பவை கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்டின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சி.இ.ஓ.வான சத்யா நாதெள்ளா, சர்ச்சைக்குறிய குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) குறித்து கவலைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நிகழ்பவை சோகமாக இருப்பதாகக் கூறியுள்ளவர், வங்கதேச அகதி இந்தியாவின் அடுத்த யூனிகார்னை உருவாக்குவதை காண விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மான்ஹட்டனில் மைக்ரோசாப்ட் சார்பில் நடைபெற்ற எடிட்டர்கள் சந்திப்பில் பேசும் போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக அச்சுறுத்தலுக்கு இலக்காகிறவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வழி செய்யும் சர்ச்சைக்குறிய சி.ஏ.ஏ சட்டம் பற்றி கேட்கப்பட்டது.
"தற்போது நிகழ்பவை சோகமானதாகக் கருதுகிறேன். இது மோசமானது. இந்தியாவுக்கு வரும் ஒரு வங்கதேச அகதி, இந்தியாவில் அடுத்த யூனிகார்னை உருவாக்குவதை அல்லது இன்போசிஸின் அடுத்த சி.இ.ஓ. ஆவதை காண விரும்புகிறேன்,” என்று சத்யா நாதெள்ளா கூறியதாக பஸ்பீட் நியூஸ் எடிட்டர் இன் சீப் பென் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
"ஒவ்வொரு நாடும் தனது எல்லையை வரையறுத்துக் கொள்ளும் மற்றும் வரையறுத்துக் கொள்ள வேண்டும். இதற்கேற்ப தனது தேசத்தை பாதுகாத்து, குடியுரிமை கொள்கையை வகுத்துக் கொள்ளும். ஜனநாயக நாடுகளில், இது பற்றி அரசாசங்கமும், மக்களும் விவாதித்து, அதன் எல்லைக்குள் இதை வரையறுப்பார்கள்,” என்று மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
"இந்திய பாரம்பரியம், பன்முகத்தன்மைக் கொண்ட இந்தியாவில் வளர்ந்தது மற்றும் அமெரிக்காவின் குடியுரிமை அனுபவம் என்னை உருவாக்கியுள்ளது. இந்திய சமூகம் மற்றும் பொருளாதாரத்திற்கு நலன் பயக்கும் வகையில் செழிப்பான ஸ்டார்ட் அப் அல்லது ஒரு பன்னாட்டு நிறுவனத்தை தலைமையேற்று வழிநடத்த ஒரு அகதி கனவு காண்பதை சாத்தியமாக்கும் இந்தியாவை நான் காண விரும்புகிறேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
2020 ஜனவரி 10ம் தேதி முதல் CAA அமலுக்கு வந்ததாக அறிவிக்கும் அறிவிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்டது.
இந்த சட்டத்தின் படி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக நடவடிக்கைக்கு உள்ளாகி, 2014ம் ஆண்டு டிசம்பர் 31க்குள் வந்த இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்துவ சமூகத்தினர் சட்ட விரோதமாக குடியேறியவர்களாகk கருதப்படாமல், இந்தியk குடியுரிமை வழங்கப்படும். இந்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்