ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சுரங்கத் தொழிலாளி!
டான்சானியா நாட்டைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ஒருவருக்கு ஒரே நாளில் 25 கோடி ரூபாய் கிடைத்து செல்வந்தர் ஆனார். எப்படி தெரியுமா?
காலச்சக்கரம் சில செல்வந்தர்களை ஒரே நாளில் ஏழைகளாகவும் சில ஏழைகளை ஒரே நாளில் செல்வந்தர்களாகவும் மாற்றிவிடுகிறது. இந்த இரு வகையினருமே ஒரு சில நொடிகள் முன்பு வரைகூட தங்களது நிலைமை முற்றிலும் மாறப்போகிறது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.
அப்படித்தான் டான்சானியா நாட்டைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ஒருவர் ஏழ்மை நிலையில் இருந்து திடீரென்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார். டான்சானியா நாட்டைச் சேர்ந்தவர் சானினியு லைசர். நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் ‘டான்சனைட்’ எனப்படும் இரண்டு ரத்தினக் கற்களை இவர் கண்டுபிடித்தார்.
இந்த ரத்தினக் கற்களுக்கு அரசாங்கம் இவருக்கு 7.74 பில்லியன் டான்சானியன் ஷில்லிங்ஸ் கொடுத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய் இவருக்குக் கிடைத்துள்ளது.
இதில் ஒரு ரத்தினக் கல் 9.27 கிலோ எடையும் மற்றொரு ரத்தினக் கல் 5.103 கிலோ எடையும் கொண்டுள்ளது என சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘டான்சனைட்’ கிழக்கு ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதிகளில் மட்டுமே காணப்படும் ரத்தினக்கல்.
டான்சானியா வங்கி இந்த ரத்தினக் கற்களை வாங்கிய பிறகு அந்தத் தொகைக்கான காசோலையை சானினியு லைசர் பெறும் காட்சி டான்சானியாவின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. டான்சானியா அதிபர் மகுஃபுலி இவரை அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
டான்சானியாவில் சுரங்கத் தொழிலாளர்கள் தங்களிடமுள்ள கற்களையும், தங்கங்களையும் அரசாங்கத்திடம் விற்பனை செய்ய உதவும் வகையில் கடந்த ஆண்டு அந்த நாடு முழுவதும் வர்த்தக மையங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தொழிலாளர்கள் சுரங்க நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. இவர்களே சொந்தமாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோதமான சுரங்க மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 2018-ம் ஆண்டு மகுஃபுலி பிரம்மாண்ட சுவர்கள் எழுப்பினார்.
தகவல் உதவி: என்டிடிவி