750 மாணவர்களுக்கு பிளம்பிங் பயிற்சி, வேலைவாய்ப்பு அளித்து உதவிய 27 வயது சதப்தி!
ஸ்கில் இந்தியா திட்டத்தின்கீழ் பிளம்பிங் வேலைகளில் சதப்தி சுபாஸ்மிதா சாஹூ பயிற்சியளித்த 750-க்கும் மேற்பட்ட மாணவர்களில் கிட்டத்தட்ட 600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
சதப்தி சுபாஸ்மிதா சாஹூ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பிளம்பிங் வேலைகளில் பயிற்சியளித்து வருகிறார். இதன் மூலம் இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
சதப்தியின் அப்பா போஸ்ட்மாஸ்டர். அம்மா இல்லத்தரசி. இவர்கள் சதப்தியின் விருப்பத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கின்றனர். ஆண்களுக்கு பயிற்சியளிக்க போகக்கூடாது என அவரது பெற்றோர் தடை போடவில்லை.
20 வயதில் துணிந்து இந்த வேலையில் களமிறங்கினார் சதப்தி. கடந்த 8 ஆண்டுகளாக பயிற்சியளித்து வருகிறார். பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை குழுவாக ஒன்றிணைத்து பயிற்சி அளித்திருக்கிறார்.
சதப்தி 2015-ம் ஆண்டு பி.டெக் சிவில் என்ஜினியரிங் முடித்துள்ளார். 2013-ல் சிவில் ட்ரேட் பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளார். இவர் வேலை தேட முடிவு செய்த நேரத்தில் செய்தித்தாளில் விளம்பரம் ஒன்றைப் பார்த்துள்ளார்.
பிளம்பிங் மற்றும் வயர் பெண்டிங் பணியில் பயிற்சியளிக்க பயிற்சியாளர்கள் தேவை என ஸ்கில் டெவலப்மெண்ட் இந்தியா அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த இரண்டிற்கும் முறையான தகுதி இருந்ததால் சதப்தி விண்ணப்பித்தார்.
“நான் நேர்காணலுக்கு சென்றேன். என்னிடம் ‘பயணம் செய்ய சம்மதமா’? எனக் கேட்டார்கள். நான் ஒப்புக்கொண்டேன். உடனே வேலை கிடைத்துவிட்டது. இந்த நேர்காணலில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ’இந்திய பிளம்பிங் ஸ்கில் கவுன்சில்’ பயிற்சியளிக்கிறது. இதில் பயிற்சியாளராக பணிபுரிவதற்கான பயிற்சியளிக்கப்படுகிறது,” என தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் சதப்தி.
கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி ஏழை மக்களின் வருவாயைப் பெருக்கவேண்டும் என்பதே ஸ்கில் இந்தியா திட்டத்தின் நோக்கம்.
“ஸ்கில் இந்தியா திட்டத்தின்கீழ் உள்ள தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் (NRLM) ஒரு பகுதியாக தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் வளர்ச்சித் திட்டம் உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயிற்சியளித்து வருகிறேன்,” என்கிறார்.
சதப்தியின் குடும்பத்தினர் படிப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள். குழந்தைகள் மென்மேலும் படிக்க ஊக்கமளித்துள்ளனர். சதப்தியின் தங்கை எம்சிஏ படிக்கிறார். அவரது தம்பி மெக்கானிக்கல் என்ஜினியரிங் டிப்ளமோ படிக்கிறார்.
பெற்றோர்கள் ஊக்கமளிக்காத காரணத்தால் பல மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்கின்றனர். மேலும், சிலர் வறுமை காரணமாகவும் படிக்க முடிவதில்லை. இப்படிப்பட்ட மாணவர்களே சதப்தியிடம் பயிற்சி எடுத்துக்கொள்ள வருகின்றனர். இவர்களின் நிலையை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறார் சதப்தி.
இவரது நோக்கம் உன்னதமாக இருப்பினும் சில சவால்களையும் அவர் கடந்தே செல்லவேண்டியுள்ளது.
“எல்லா மாணவர்களும் பயிற்சி வகுப்பில் ஆர்வமும் முழு ஈடுபாடும் காட்டுவதில்லை. சில மாணவர்கள் முரண்டு பிடிப்பார்கள். கவனிக்க மாட்டார்கள். அவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துவேன். நான் பெண் என்பதாலோ இளம் வயதினர் என்பதாலோ யாரும் என்னை மரியாதை குறைவாக நடத்தியதில்லை,” என்கிறார் சதப்தி.
தன்னிடம் பயிற்சி எடுத்துக்கொள்ளும் மாணவர்கள் வேலை வாய்ப்பு கிடைத்து சொந்த காலில் நிற்பதைப் பார்க்கும்போது மன திருப்தி கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார் சதப்தி.
“ஒரு பேட்ச்சில் 35 மாணவர்கள் என 20 பேட்ச் மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். இதில் ஒவ்வொரு பேட்ச்சிலும் 30 மாணவர்களுக்கு வேலை கிடைத்துவிடுகிறது. கிராமத்தை விட்டு வெளியூர்களுக்கு செல்லவேண்டாம் என சில மாணவர்களின் குடும்பத்தினர் அழுத்தம் கொடுக்கின்றனர். இப்படிப்பட்ட மாணவர்கள் மட்டுமே வேலையில் நியமிக்கப்படுவதில்லை,” என்கிறார்.
சதப்தியிடம் பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மும்பை மகாநகர் கேஸ் லிமிடெட் போன்ற பெரிய நிறுவனங்களும் இதில் அடங்கும். இந்நிறுவனம் கேஸ் லைன் போடுவதற்கு திறன்மிக்க பிளம்பர்களை பணியமர்த்துகிறது.
“மற்றவர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கார்ப்பரேஷனில் பிளம்பராக பணியாற்றுகின்றனர். சிலர் அரசு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சிலர் ஒடிசாவிலேயே வேலை செய்யும் நிலையில் பெரும்பாலானோர் வேலை கிடைத்து பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாதம் 5,000-8,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். இவர்களை மீண்டும் சந்திக்க நேரும்போது எனக்கு நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கின்றனர்,” என்கிறார்.
தொடர்ந்து பலருக்கு பயிற்சியளிக்க ஆர்வமாக இருக்கும் சதப்தி,
“நான் மேலும் பலருக்கு பயிற்சியளித்து வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க விரும்புகிறேன். குறிப்பாக என்னைப் போன்ற பெண்கள் திறன்களைப் பெறவேண்டும். இந்தத் திறன்களில் மற்றவர்களுக்கும் பயிற்சியளிக்க முன்வரவேண்டும். இப்படிச் செய்தோமானால் அனைவருமே முன்னேற்றப் பாதையில் பயணிக்கலாம்,” என்கிறார் சதப்தி.
ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா