பணமா? தேசமா? ஃப்ரான்சைஸ் லீக் விளையாட ஆர்வம் காட்டும் கிரிக்கெட் வீரர்கள்!
கிரிக்கெட் விளையாட்டில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்துக்குமே ஒரு விலை உண்டு.
உலக அளவில் அதிக அளவு பார்வையாளர்களை பெற்ற விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 என மூன்று ஃபார்மெட்டுகளில் சர்வதேச நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இது தவிர உலகம் முழுவதும் லீக் கிரிக்கெட் தொடர்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம் கிரிக்கெட் விளையாட்டை சார்ந்து இயங்கும் வணிகம் தான். கிரிக்கெட் விளையாட்டில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்துக்குமே ஒரு விலை உண்டு.
பணமா? தேசமா?
அண்மைய காலமாக கிரிக்கெட் வீரர்கள் தங்கள் தேசத்திற்காக விளையாடுவதை காட்டிலும் லீக் கிரிக்கெட் தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்ப்போம்.
கிரிக்கெட் வீரர்கள் ஆண்டு முழுவதும் தாங்கள் சார்ந்துள்ள சர்வதேச கிரிக்கெட் அணி மற்றும் லீக் அணிகளுக்காக பிசியாக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடுவது ஒருவிதமான உளவியல் சிக்கலை தங்களுக்குள் ஏற்படுத்துவதாக சில கிரிக்கெட் வீரர்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்திருந்தனர்.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கொஞ்சம் பிரேக் கூட எடுத்துக் கொண்டார். 2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய வீரர் பும்ரா அது குறித்து பேசி இருந்தார். அவர்கள் சொல்வது போல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வே இல்லாமல் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
லீக் கிரிக்கெட் தொடர்கள்
உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையாக லீக் கிரிக்கெட் தொடர்கள் பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த போட்டிகளை நேரடியாகவும், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் வழியில் பார்ப்பவர்கள் கோடான கோடி பேர்.
இந்தியாவில் ஐபிஎல், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக், ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக், இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் என ஏராளமான தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர, தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடர் மற்றும் அமீரக டி20 லீக் தொடரும் புதிதாக சேர்ந்துள்ளன. இந்த லீக் தொடர்கள் அனைத்திலும் உள்ளூர் வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் என்ற பெயரில் இந்த லீகுகளில் அணிகளை வாங்கும் உரிமையாளர்கள், தங்கள் அணியில் தரமான வீரர்களை இடம் பெற செய்ய வேண்டுமென்ற நோக்கில் வீரர்களுக்கு நல்ல விலை கொடுத்து வாங்குகிறார்கள். ஆண்டுக்கு ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதம் வரை தான் இந்த லீக் தொடர்கள் ஒவ்வொன்றும் நடைபெறுகிறது. அதன் மூலம் வீரர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது.
லீக் தொடர்களில் விளையாட விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் தாங்கள் சார்ந்துள்ள கிரிக்கெட் வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டி உள்ளது. அதன் மூலம், அவர்கள் சர்வதேச போட்டிகளுக்கு அந்த குறிப்பிட்ட நாட்களில் விளையாட மாட்டார்கள் என்பதை தங்கள் அணி நிர்வாகத்திற்கு உறுதி செய்துவிடுவார்கள்.
இந்தியாவில் டொமாஸ்டிக் மற்றும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுபவர்கள் ஐபிஎல் தொடரை தவிர வெளிநாட்டு லீகுகளில் பங்கேற்று விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிப்பதில்லை.
ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு லீக் என்றால் அதில் விளையாடும் வீரர்களால் அதனை சமாளிக்க முடியும். ஆனால், ஆண்டு முழுவதும் நடைபெறும் லீக் தொடர்களில் விளையாடும் போது தான் அவர்களுக்கு சிக்கல் உருவாகிறது.
அதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தேசத்திற்காக விளையாடுவதை காட்டிலும் லீக் தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதை சில வீரர்கள் வெளிப்படையாகவே தெரிவித்தும் உள்ளனர்.
போல்ட் வகுத்த பாதை!
சில வீரர்கள் லீக் தொடர்களைக் காட்டிலும் தாய்நாட்டுக்காக விளையாடவே விரும்புகின்றனர். ஆனால், வேறு சில வீரர்களோ லீக் தொடர்களை தங்களது ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஆப்ஷனாக தேர்வு செய்துள்ளனர். அதில் ஒருவர் தான் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்.
33 வயதான போல்ட், எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் சர்வதேச களத்தில் ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படியே, அந்த வாரியமும் செயல்பட்டுள்ளது. டி20 லீக் தொடர்களை கணக்கில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவருக்கு டி20 ஃபார்மெட்டில் அதிக டிமாண்ட் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவரை பின்தொடர்ந்து நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டரான நீஷமும் வருடாந்திர ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார். அவரும் டி20 லீகுகளில் விளையாட ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. வரும் நாட்களில் இவர்கள் வழியை இன்னும் பல வீரர்கள் பின்பற்றலாம்.
ஓய்வு முடிவுகள்!
கிரிக்கெட் அட்டவணையை கருத்தில் கொண்டு சில வீரர்கள் ஓய்வு முடிவையும் கையில் எடுத்துள்ளனர். இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். மூன்று ஃபார்மெட்டிலும் தன்னால் தாக்குப்பிடித்து விளையாட முடியவில்லை என அவர் வெளிப்படையாக சொல்லி இருந்தார். அவரது இந்த முடிவுக்கான நோக்கம் நியாயமானதாக உள்ளது. டி20 லீக் தொடர்களில் ஆக்டிவாக விளையாட ஆர்வம் காட்டும் வீரர் அவர் இல்லை என இப்போதைக்கு நம்பப்படுகிறது.
மறுபக்கம் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிராண்ட்ஹோம் ஓய்வை அறிவித்துள்ளார். அவர் லீக் தொடரில் விளையாடவே இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் பிக்பேஷ் லீக் தொடரில் விளையாடவே இந்த முடிவை எடுத்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன.
லீக் தொடருக்காக ஒருநாள் தொடரை புறக்கணிக்கும் தென் ஆப்ரிக்கா!
எதிர்வரும் 2023 ஜனவரியில் தென் ஆப்ரிக்க அணி ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட அட்டவணை தயாராக உள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் தங்கள் நாட்டில் நடைபெறும் டி20 லீக் தொடருக்காக ஒருநாள் தொடரை வேறு தேதிக்கு மாற்றுமாறு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சார்பில் கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் வசம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆண்டு முழுவதுக்குமான கிரிக்கெட் அட்டவணை ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்ட காரணத்தால் அது முடியாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்தது. அதையடுத்து, தொடரில் இருந்து பின்வாங்கும் முடிவை தென் ஆப்ரிக்கா எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த சூழலில் தான் டி20 லீக் தொடர்கள் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என சொல்லப்பட்டது.
இருநாடுகளுக்கு இடையிலான டி20 தொடர்கள் வேண்டாம் - ரவி சாஸ்திரி
டி20 லீக் தொடர்கள் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அச்சுறுத்தல் எனச் சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு படி மேலே சென்று கருத்து சொல்லியுள்ளார்.
“இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடர்கள் வேண்டவே வேண்டாம். மக்களிடையே அதற்கு போதிய வரவேற்பு இல்லை. அதனால் நேரடியாக ஐசிசி நடத்தும் டி20 தொடர்கள் மட்டும் போதுமானது. அந்த இடைப்பட்ட நேரத்தில் ஃப்ரான்சைஸ் லீக் தொடர்களை நடத்த ஊக்கம் கொடுக்கலாம்,” என சொல்லியிருந்தார்.
பணம் தான் காரணமா?
லீக் கிரிக்கெட் தொடர்களின் வளர்ச்சிக்கு அணியின் உரிமையாளர்களுக்குக் கிடைக்கும் வருமானம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முன்பு கிரிக்கெட் தொடர்களில் கிடைக்கும் வருமானம் வாரியம் மற்றும் வீரர்களுக்கு சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு பங்கு சம்பந்தப்பட்ட நாட்டில் கிரிக்கெட் கட்டமைப்புப் பணிகள் மற்றும் வருங்கால வீரர்களின் நலனுக்காகவும் செலவு செய்யப்பட்டு வந்தது.
இப்போது லீக் கிரிக்கெட்டில் வருமானம் உரிமையாளர்கள் வசம் செல்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் வருமானம் அதிகம் புழங்குவதே ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட் தொடர்கள் அதிகரிக்க காரணம் என தெரிகிறது. அதோடு லீக் தொடர்களை நடத்தும் கிரிக்கெட் அமைப்புகளுக்கு அதன் ஒளிபரப்பு உரிமம், டைட்டில் ஸ்பான்சர் என வருமானம் ஈட்டுவதற்கான ஏராளமான வழிகள் இதில் உள்ளன.
வீரர்களும் வழக்கத்தை காட்டிலும் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் அதிகளவு வருமானம் கிடைப்பதால் அதை தொடர்ந்து நடத்த ஊக்கம் அளித்து வருகின்றன. இதனால் நஷ்டம் என்னவவோ சர்வதேச கிரிக்கெட்டுக்கு தான்.
Edited by Induja Raghunathan