ஃபேஸ்புக் அம்மாக்களின் ’அன்னையர் தினம்’ முயற்சி- 5 மாவட்டங்களில் தாய்ப்பால் தானம்!
அன்னையர் தினமான இன்று சென்னை உட்பட 8 மாவட்டங்களைச் சேர்ந்த, ஃபேஸ்புக் குழு மூலமாக ஒன்றுகூடிய 50க்கும் மேற்பட்ட அம்மாக்கள் தாய்ப்பால் தானம் வழங்க இருக்கிறார்கள்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என எல்லாவற்றிலும் முதன்மையானவள் தாய். ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து, உரு கொடுத்து, தன் கருப்பையில் பத்து மாதம் பாதுகாப்பாக வளர்த்து, உயிரைக் கொடுத்து பிரசவ வலி அனுபவித்து அதனை உலகிற்கு தருபவள் தாய். தாய்மைக்குப் பின் எல்லா பெண்களுக்கும் வாழ்க்கை நிச்சயம் மாறித் தான் போகிறது. அதுவரை தன்னை ஒரு குழந்தையாக நினைத்தவள், தன் குழந்தைக்கு தாயாகும் மாயம் எந்த நொடியில் நடக்கிறது என்பது யாரும் அறியாதது.
அப்படிப்பட்ட தாய்மையைக் கொண்டாடத் தான் ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு சர்வதேச அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக அன்றைய தினத்தில் குழந்தைகள் தங்கள் அன்னைக்கு பரிசுகள் கொடுத்து, வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வார்கள்.
ஆனால், ஃபேஸ்புக் தாய்மார்கள் சிலர் ஒன்று கூடி யாரென்றே தெரியாத சில பிறந்த சிசுக்களுக்காக அன்னையர் தினத்தன்று விலை மதிப்பிட முடியாத பரிசு ஒன்றைத் தர திட்டமிட்டுள்ளனர். ஆம், இன்று அவர்கள், எவ்வளவு காசு கொடுத்தாலும் கடைகளில் வாங்க முடியாத தாய்ப்பால் எனும் அமிர்தத்தை தானமாக அளிக்க இருக்கின்றனர்.
தானத்தில் சிறந்தது அன்ன தானம், கண் தானம் மட்டுமல்ல. தாய்ப்பால் தானமும் தான். தாயின் வயிற்றில் இருந்து வெளியில் வரும் குழந்தைக்காக இறைவன் தரும் அற்புத உணவு தாய்ப்பால். நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்த இந்த உணவு சில பல காரணங்களால் எல்லாக் குழந்தைகளுக்கும் சாத்தியப்பட்டு விடுவதில்லை. அந்தக் குறையை தங்களால் இயன்ற அளவு மாற்றத் தான் இந்த ஃபேஸ்புக் தாய்மார்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
’மம்மி டாக்ஸ் தமிழ்’ (Mommy talks Tamil) என்ற ஃபேஸ்புக் பக்கம் மூலம் தான் இந்த முயற்சியை ஆரம்பித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கௌசல்யா ஜெகதீசன். இவரும், பேபிஸ்ரீ என்பவரும் அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது தாய்ப்பால் தானமாக கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். அப்போது தாய்ப்பால் கிடைக்காமல் பல குழந்தைகள் உயிரிழப்பதைப் பார்த்து, வேதனையுற்றவர்கள், தங்களால் முயன்றளவு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தனர்.
அதன்படி, தங்களது ஃபேஸ்புக் பக்கம் மூலமாக இது தொடர்பான விழிப்புணர்வை மற்ற அம்மாக்களுக்கும் அளித்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகத் தான், இன்று தங்களது ஃபேஸ்புக் பக்கம் மூலம் பாலூட்டும் அன்னையரை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் தாய்ப்பால் தானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, சேலம் மோகன் குமாராலிங்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என ஐந்து மருத்துவமனைகளில் இன்று 50-க்கும் மேற்பட்ட அம்மாக்கள் தாய்ப்பால் தானம் வழங்கவிருக்கிறார்கள்.
இது தொடர்பாக கௌசல்யா ஜெகதீஷ் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில்,
“கடந்தாண்டு புதிதாகக் குழந்தைபெற்ற தாய்மார்களை இணைத்து ஃபேஸ்புக்கில் மாமி டாக்ஸ் என்ற ஒரு குழுவை உருவாக்கினோம். அந்தக் குழுவில் குழந்தைகள் பராமரிப்பு குறித்து எழும் சந்தேகங்களையும், அதற்கான ஆலோசனைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் தாய்ப்பால் தானமாகக் கொடுப்பவர்கள் தான். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், பிரசவத்தில் தாயை இழந்த குழந்தைகள், பிரசவம் முடிந்ததும் தாயின் நோய் காரணமாக அவர்களிடமிருந்து தாய்ப்பால் பெற முடியாத குழந்தைகள் என தாய்ப்பால் கிடைக்காமல் பல சிசுக்கள் உயிரிழப்பதைத் தடுக்கத் தான் இந்த முயற்சியை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அன்னையர் தினத்தில் இருந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என விரும்பிய இந்த ஃபேஸ்புக் அம்மாக்கள், இன்று அதனை செயல்படுத்திக் காட்ட இருக்கின்றனர்.
‘தாய்ப்பாலை மற்ற குழந்தைகளுக்கு கொடுத்து விட்டால், பிறகு தங்கள் குழந்தைக்கு பால் இருக்காதோ என அஞ்ச வேண்டாம். தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்க அதிகமாய் சுரக்குமே தவிர, குறையாது,’ என்கின்றனர் மருத்துவர்கள்.
சமூகவலைதளங்கள் என்பது கத்தி போன்றது. அதனை மருத்துவர்கள் போல் பயன்படுத்தினால், மற்றவர்களுக்கு என்றுமே நன்மை தான். அப்படித்தான் ஃபேஸ்புக் பக்கத்தை வெறும் பொழுதுபோக்கும் அரட்டை அடிக்கும் தளமாக இல்லாமல், சமூக மாற்றத்திற்கான ஒரு களமாக இந்த அம்மாக்கள் கையில் எடுத்திருப்பது நிச்சயம் பாராட்டிற்குரியது.
நீங்களும் பாலூட்டும் அன்னையாக இருந்து, உங்களுக்கும் இதே போன்று தாய்ப்பால் தானம் அளிக்க வேண்டும் என விரும்பினால், மம்மி டாக்ஸ் ஃபேஸ்புக் பக்கத்தை தொடர்பு கொள்ளலாம். இதோ அவர்களது ஃபேஸ்புக் லிங்க்.