இயற்கை விவசாயி அவதாரம் எடுத்த ‘தல’ தோனி!
ஒரே மனுஷன் பல அவதாரம், நினைத்ததையெல்லாம் செய்து பார்த்து கெத்தாக வாழும் மகேந்திர சிங் தோனி இப்போது எடுத்திருக்கும் அவதாரம் ‘இயற்கை விவசாயி’
கடிவாளம் கட்டிக்கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவராக இல்லாமல் கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி பலப்பல புதுமைகளை வெகுஜன மக்களை கவரும் விஷயங்களை செய்து அசத்தி வருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
இவரது தனித்துவமான விளையாட்டிற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் போல, தோனி செய்து வியக்க வைக்கும் புதிய புதிய செயல்களுக்காகவே கிரிக்கெட்டை விரும்பாதவர்கள் கூட இவருக்கு ரசிகர்களாகி விடுகின்றனர்.
ராணுவ வீரராக சேவை செய்தது, தன்னுடைய சக அணி வீரர்களுக்கு பானி பூரி பரிமாறுதல் என வியக்க வைத்தவர், இப்போது இயற்கை விவசாயி அவதாரம் எடுத்திருக்கிறார். ஐபிஎல் 2020 போட்டியில் பங்கேற்பதற்காகப் பயிற்சிக்கு செல்வதற்கு முன்னர் விவசாயம் பழகும் வீடியோவை தோனி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ட்ரெண்ட் செட்டர் செலப்ரிட்டி ஆகி இருக்கிறார்.
அண்மையில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிட்சை சமன்படுத்தும் ரோலரை தன்னுடைய கைகளால் தோனி இயக்கும் வீடியோ வைரலானது. அடுத்த வைரல் வீடியோவாக வலம் வந்து கொண்டிருப்பது சேற்றில் இறங்கி இயற்கை விவசாயம் பழகும் முன்னாள் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்னுமேனுமான தோனியின் புதிய கெட்டப்.
விதை விதைப்பு, விவசாயத்திற்கு பிள்ளையார் சுழியாக போட்ட பூமி பூஜை என 2.03 நிமிடி வீடியோவை தோனி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்
“எனது சொந்த ஊரான ராஞ்சியில் 20 நாட்களில் பப்பாளிச் செடிக்கான இயற்கை விவசாயம் செய்ததைத் தொடர்ந்து தர்பூசணிப் பழ விதைகளை விதைத்துள்ளேன். முதல் முறை என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
வீடியோவில் தோனி தனது நெருங்கிய நண்பர்கள் சூழு தேங்காய் உடைத்து, பூமி பூஜை செய்து விதைகளை விதைக்கிறார். தோனியின் இந்த வீடியோ லைக்ஸ்களை அள்ளிக் குவித்து விட்டது. இதே போன்று தோனி எடுத்துள்ள இயற்கை விவசாயி முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
ராஞ்சியின் காடுகள் உற்பத்தி கல்வி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஷம்புநாத் மிஸ்ரா, தோனி முயற்சிக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“புவி வெப்பமடைதலை எதிர்த்து போராடும் விதமாக இயற்கை விவசாயத்தை தோனி முன்னெடுத்திருக்கிறார். இயற்கை விவசாயம் மண்ணிற்கு, பறவைகள், விலங்குகள் மற்றும் விளை நிலங்களை ஒட்டி வாழும் மக்களுக்கும் நன்மை பயக்கும். மாசு குறையும், நீர் மேலாண்மை வளர்ச்சி காணும், மண் அரிப்பு தடுக்கப்படும், மண் வளம் காக்கப்படுவதோடு, சக்தி வீணாவதும் தடுக்கப்படும்,” என்று மிஸ்ரா கூறியுள்ளார்.
2019 உலகக்கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது இந்தியா. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற செய்தி உலா வந்து கொண்டிருந்தது. பிசிசிஐயின் மத்திய ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் இருந்தும் தோனியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது. ஆனால் இந்த வதந்திகளுக்கு பதில் அளிக்காமல் மௌனமாகவே இருந்து வந்தார் தோனி.
கிரிக்கெட் சர்ச்சைகள் ஒருபுறமிருந்தாலும் கிரிக்கெட் மைதானத்தில் ரோலர் இயக்கியது, உத்தரகண்டத்தில் பனிக்கட்டிகளை அப்புறப்படுத்துதல் என ஜாலியாக வாழ்க்கையை என்ஜாய் செய்து கொண்டு வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தார் நம்ம தல தோனி.
மார்ச் 29ம் தேதி ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2020 போட்டியை சந்திக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காகவும் தனது அணி வீரர்களின் பயிற்சிக்காகவும் மார்ச் 2ம் தேதி முதல் தோனி சென்னையில் தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் ஜுரம் தொடங்குவதற்கு முன்னரே இயற்கை விவசாயி தோனியின் வீடியோ மாஸான ட்ரெய்லராக இருக்கிறது.