நிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனைக் குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனு நிராகரிப்பு!
நிர்பயா கூட்டுப் பாலியல் வழக்கின் குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதை அடுத்து தூக்குத்தண்டனை ஜனவரி 22ம் தேதி நிறைவேற்றப்படுமா?
நிர்பயா கூட்டுப் பாலியல் வழக்குக் குற்றவாளிகளில் முக்கியமானவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை மத்திய உள்துறை அமைச்சகம், இந்த கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய சில மணி நேரங்களிலேயே இது நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, முகேஷ் சிங், பவன் குப்தா ஆகிய நான்கு பேருக்கும் வரும் ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட அதிகாரப்பூர்வ ஆணை சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று கூறி டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் இருவரிடமும் கருணை மனு தாக்கல் செய்திருந்தார்.
துணை நிலை ஆளுநர் ஏற்கனவே இதனை நிராகரித்திருந்த நிலையில், தற்போது குடியரசுத்தலைவரும் கருணை மனுவை நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, திட்டமிட்டப்படி ஜனவரி 22ஆம் தேதி குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும்,
"நான் இதுவரை அரசியல் குறித்து ஏதும் பேசியதில்லை. நான் நீதியை மட்டுமே கேட்டு வந்தேன். ஆனால், 2012ம் ஆண்டு தேசியக் கொடி ஏந்தி என் மகளுக்காக நீதிக்கேட்டு போராடியவர்களே, இன்று என் மகளின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்," என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தூக்குத் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படுமா, குற்றவாளிகள் மீண்டும் கருணை மனு தாக்கல் முடியுமா? என்றால் அதற்கு பதில் ஆம் என்பதே.
தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கருணை மனு தாக்கல் செய்யலாம். அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசுத்தலைவர் நிராகரிக்கலாம், எப்பதே சட்ட வல்லுனர்களின் கருத்தாகும்.
தகவல் உதவி: பிடிஐ