தேவைப்படுவோருக்கு இலவச ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொடுக்க தன் காரை விற்ற மும்பைவாசி!
மும்பையைச் சேர்ந்த ஷானவாஸ் ஷேக் தனது எஸ்யூவி காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி கொரோனா பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு கொடுத்துள்ளார்.
ஷானவாஸ் ஷேக்கிற்கு கார்கள் என்றால் கொள்ளைப் பிரியம். 2011-ம் ஆண்டு ஆசையாக ஒரு புது ஃபோர்ட் எண்டெவர் கார் வாங்கினார். 007 என்கிற எண்ணை வாங்குவதற்கும் மியூசிக் சிஸ்டத்திற்கும் கூடுதலாக பணம் செலவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது ஷேக் தனது வாகனத்தைத் தற்காலிகமாக ஆம்புலன்ஸாகப் பயன்படுத்தத் தொடங்கினார். இவரது பிசினஸ் பார்ட்னரின் சகோதரி 6 மாதம் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மே மாதம் 28-ம் தேதி சிகிச்சைக்காக ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அந்த கர்ப்பிணிப் பெண் உயிழந்துள்ளார்.
அந்தப் பெண்ணை ஐந்து வெவ்வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் படுக்கை வசதி மற்றும் வெண்டிலேட்டர் பற்றாக்குறை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
சரியான நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டிருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்பதை ஷேக் தெரிந்துகொண்டார். இவரைப் போன்று அவசரத் தேவை இருப்போர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொடுத்து உதவத் தீர்மானித்தார். இதற்காக தனது காரை விற்பனை செய்தார்.
ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாத காரணத்திற்காக இன்னொரு உயிர் பறிபோகக்கூடாது என்று நினைத்தார். சுவாரக் கோளாறு இருப்பவர்கள் உயிர் பிழைக்க உதவவேண்டும் என்பதே இவரது விருப்பம்.
ஜூன் மாதம் 5-ம் தேதி இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கத் தொடங்கினார். இதுவரை கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கியுள்ளார்.
“ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளரைத் தொடர்பு கொள்ள என் நண்பர் ஒருவர் உதவினார். தற்போது சிலிண்டர் தேவைப்படுவோர் மருத்துவரின் பரிந்துரையுடன் வந்து எங்களிடமிருந்து நேரடியாக எடுத்துச் செல்கின்றனர்,” என்று `மும்பை மிரர்’-இடம் ஷேக் தெரிவித்துள்ளார்.
மொத்த குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது வீட்டிலிருந்து யாரும் வரமுடியாத சூழல் நிலவினாலோ இக்குழுவினர் வீட்டிற்கே சென்று சிலிண்டரை டெலிவர் செய்கின்றனர்.
கேர் மருத்துவமனையின் டாக்டர் சபவுதின் ஷேக் அவர்களின் உதவியுடன் சிலிண்டர் பயன்படுத்தும் விதம் குறித்து மக்களுக்கு வழிகாட்ட டெமோ வீடியோ ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
“உயிர்களைக் காப்பாற்றுபவர்கள் இந்த உலகிற்கு அவசியம்,” என்றார் பிரபல அமெரிக்க எழுத்தாளர் மற்றும் கவிஞர் Frederick Buechner. அவரது வரிகளுக்கேற்ப தன்னுடைய விலையுயர்ந்த காரை இதுபோன்ற உயிர்காக்கும் உன்னத நோக்கத்திற்காக விற்பனை செய்துள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA