வட கொரியா அதிபர் கிம் உடல் நிலையில் நீடிக்கும் மர்மம்...
அணு ஆயுத ஆற்றல் கொண்ட நாடான வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உடல் நிலை தொடர்பான நிச்சயமற்ற தகவல்கள் உலகை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
வட கொரியாவில் என்ன நடக்கிறது என்பதும், கிம் ஜாங்குக்கு என்ன ஆச்சு என்பதும் தான், கொரோனா தொடர்பான பதற்றத்திற்கு மத்தியிலும் உலகம் பரபரப்புடன் கேட்கும் கேள்விகளாக இருக்கின்றன. இந்த கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லாமல், வதந்திகளும், சந்தேகங்களும் உலா வரும் நிலையில், வடகொரியா நிலை பற்றியும், கிம்மின் ஆரோக்கியம் பற்றியும் குழப்பங்கள் தான் அதிகரித்துள்ளன.
வடகொரியா பற்றியும் அதன் தலைவர் கிம் பற்றியும் திடிரென ஏன் இத்தனை பரபரப்பு?
கொரிய தீபகர்பத்தின் ஒரு பகுதியான வட கொரியா, உலகில் இன்னும் மிஞ்சியிருக்கும் கடைசி கம்யூனிச நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கம்யூனிச நாடு என்றாலும், அங்கு நடப்பதென்னவோ சர்வாதிகார ஆட்சியாகத் தான் இருக்கிறது. ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் தான் நாட்டுக்கும் தலைவர், ராணுவத்திற்கும் அவர் தான் தளபதி.
மர்மதேசம்
மேற்கத்திய நாடுகளில் இருந்து நாட்டுக்கும், கம்யூனியச கொள்கைக்கும் ஆபத்து இருப்பதாக வடகொரிய அதிபர்கள் துவக்கத்தில் இருந்து கருதுவதால், அந்நாடு மூடப்பட்ட தேசமாகவே தொடர்கிறது. அதோடு அருகாமையில் உள்ள தென் கொரியாவுடனான வரலாற்று பகையும் நீடிக்கிறது. இதனால் ரகசியங்கள் நிறைந்த மர்மதேசமாகவும் நீடிக்கிறது.
கம்யூனிசத்தைக் கட்டிக் காப்பதற்காக வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. மக்களுக்கு அதிக சுதந்திரம் கிடையாது. எல்லோரும் அரசு சொல்வதை தான் கேட்டு நடக்க வேண்டும். அங்கு தேசத்தலைவர் என்பவர் கடவுள் என்பது போல மக்கள் நினைக்க பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். அபூர்வமாக அனுமதிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள் கூட, அந்நாட்டு அரசு வழிகாட்டும் இடங்களை தான் சுற்றிப்பார்க்கலாம்.
இது தான் வட கொரியா. ஏற்கனவே மர்மதேசமாக இருக்கும் அந்நாட்டில் தான் தற்போது என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த குழப்பத்திற்கு காரணம், வட கொரிய அதிபராக இருக்கும் கிம் ஜாங்’ன் உடல்நிலை பற்றி உலா வரும் செய்திகள் தான்.
சந்தேகம் ஏன்?
அதிபர் கிம், இரண்டு வார காலத்திற்கு மேலாக பொதுமக்கள் பார்வையிலேயே படாமல் இருப்பதை அடுத்து, அவரது ஆரோக்கியம் தொடர்பான சந்தேகம் உண்டானது. ஏப்ரல் 11ம் தேதியில் இருந்து அதிபர் கிம், எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. அது மட்டும் அல்ல 15ம் தேதி நடைபெற்ற தேசத்தின் முதல் அதிபர் நினைவு தின நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 2011ம் ஆண்டு அதிபராக பதவியேற்றது முதல் ஓராண்டு கூட, கிம் ஜாங், இந்த நினைவாஞ்சலியை தவறவிட்டதில்லை. இது உலக மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான், கிம் ஆரோக்கியம் தொடர்பாக கேள்வி எழுப்பும் செய்திகள் வெளியாகத்துவங்கின. அதிலும் குறிப்பாக தென்கொரிய இணையதளம் ஒன்று, கிம்மின் ஆரோக்கியம் தொடர்பாக வெளியிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்காவின் சி.என்.என் தரப்பிலும், கிம் உடல்நிலை தொடர்பாக சந்தேகத்தை எழுப்பும் செய்தி வெளியானது.
அதிபர் கிம்மிற்கு இருதய அறுவைச் சிகிச்சை நடைபெற்று, ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்றும், விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் இருவிதமான தகவல்களை இந்த செய்திகள் தெரிவித்தன. ஆனால், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள வட கொரிய ஊடகங்கள் இந்த செய்திகளை மறுக்கவும் இல்லை, அதிபர் ஆரோக்கியம் தொடர்பான தகவலை தெளிவுபடுத்தவும் இல்லை. இது குழப்பத்தை மேலும் அதிகமாக்கியது.
இதனிடையே, வட கொரிய ஊடகங்களில் கிம்மின் புகைப்படம் கூட வெளியாகாதது வதந்திகளை அதிகமாக்கியது. அதே நேரத்தில், வட கொரியாவில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என தென் கொரியா தெரிவித்தது. அமெரிக்க அரசுத் தரப்பிலும், வட கொரியா அதிபர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
வதந்திகள் பல
இன்னொரு பக்கத்தில், மூடப்பட்ட வட கொரியாவில் இருந்து கிடைக்கும் சொற்பத் தகவல்களைக் கொண்டு சர்வதேச ஊடகங்கள் ஆய்விலும் அலசலிலும் ஈடுபட்டு வருகின்றன. வட கொரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரமான வான்சன் பகுதியில், அதிபரின் தனிப்பட்ட ரெயில் நிறுத்தப்பட்டுள்ளதை செயற்கைகோள் படம் மூலம் கண்டறிந்து அதனடிப்படையில் அவர் தனது பிரத்யேக சொகுசு வீட்டில் தங்கியிருப்பதாகவும் செய்தி வெளியானது.
ஆனால், கிம் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பது மட்டும் தெளிவாகத் தெரியவில்லை. அதைவிட முக்கியமாக அவரது இந்த திடீர் தலைமறைவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.
இதற்கும் பலவித ஆருடங்கள் உலாவுகின்றன. வட கொரியாவில் இதெல்லாம் சகசம் என்கின்றனர் ஒரு தரப்பினர். இதற்கு முன்னரும் கிம் சில வாரங்கள் பொது மக்கள் பார்வையில் இருந்து விலகி இருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்னொரு தரப்பினரோ, அங்கு ஆட்சி கவிழ்ப்பு போன்ற முயற்சி நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இன்னும் சிலரோ, கிம்மிற்கு அடுத்தபடியாக அதிபர் யார் எனும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கின்றனர். அவரது இளைய சகோதரியான கிம் யோவு பதவிக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
அணு ஆயுத ஆற்றல்
எல்லாம் சரி, வட கொரிய அதிபரை சுற்றி ஏன் இத்தனை மர்மம்? இதற்கு ஏன் சர்வதேச நாடுகள் இத்தனை பதற்றமடைய வேண்டும்?
கம்யூனிச நாடான வட கொரியாவில் நிகழும் மாற்றங்கள் அந்நாட்டு மக்களை மட்டும் அல்லாமல், புவி அரசியலையும் பாதிக்கும் என கருதப்படுகிறது. அது மட்டும் அல்லாமல், வட கொரியா அணு ஆயுத ஆற்றல் கொண்ட நாடாகவும் இருப்பதால், அங்கு ஏற்படும் ஆட்சி மாற்றம் முக்கியமாகிறது.
தற்போதைய அதிபரான கிம் ஜாங், வட கொரியா அணு ஆயுத ஆற்றல் பெற்றதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். வட கொரியா பல ஆண்டுகளாக அணு ஆயுத ஆய்வில் ஈடுபட்டு வந்தாலும், கிம் ஜாங் பதவிக்கு வந்த பிறகு ஆய்வுகள் தீவிரமாயின. அமெரிக்க எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி அவர் ஆறு முறை அணு ஆயுத சோதனையை நடத்தியிருக்கிறார்.
ஆனால், இந்த முரட்டுத்தனத்தை மீறி கிம் ஜாங், அமெரிக்க அதிபர் டிரம்புடன் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக பேச்சு நடத்தியிருகிறார். அண்டை நாடான தென் கொரியாவுடனும் நட்பு பாராட்டியிருக்கிறார்.
அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட இந்த முக்கிய மாற்றங்கள் தவிர, தனிப்பட்ட முறையிலும் கிம் நிறைய மாறியிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிரெட் புகைப்பவராக அறியப்படும் கிம், அண்மை ஆண்டுகளாக பொதுவெளியில் சிகிரெட்டுடன் காணப்படுவதில்லை. அவரது கூட்டங்களிலும் ஆஷ்டிரேக்கள் வைக்கப்படுவதில்லை. மேலும் அவரது மனைவியும் பொது நிகழ்ச்சிகளில் முன்னிறுத்தப்படுகிறார்.
அடுத்து என்ன?
மக்கள் மத்தியில் கிம்மின் இமேஜை நட்பாக மாற்றி அமைக்கும் முயற்சியாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தான் கிம் உடல்நிலை தொடர்பான, சர்ச்சை மர்மமாக உருவெடுத்துள்ளது.
மறைந்த அதிபர் கிம் ஜாங் இல்லின், மூன்றாவது மனைவியின் மகனான கிம் ஜாங், தனது சகோதரர்களை ஓரங்கட்டிவிட்டு அதிபரானவர். பதவிக்கு வந்த பின், ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என அஞ்சி சொந்த மாமாவுக்கு மரண தண்டையும் வழங்கினார். ஆட்சியில் தனது இரும்புக் கரத்தை தக்க வைத்துக்கொள்ள எதையும் செய்யத்துணிந்தவராக கருதப்படுகிறார்.
சர்வ வல்லமை படைத்தவராக கருதப்படும் கிம் ஜாங், சர்வாதிகாரிகளுக்கே உரிய ரகசிய உத்தி எதையேனும் கடைப்பிடிக்கிறாரா? அல்லது சர்வாதிகாரிகளுக்கு ஏற்படும் கதிக்கு இலக்காகி இருக்கிறாரா என்பதற்கு காலம் தான் பதில் அளிக்க வேண்டும். இப்போதைக்கு வட கொரியா கணத்தை மவுனம் காக்கிறது.
கிம் பற்றி மேலும் அறிய: https://www.bbc.com/news/world-asia-pacific-11388628