’நீ உன் ஆணவத்தை அன்பில் எரி; இதைச் செய்பவனுக்கு வாழ்க்கை சரி’ - நா.முத்துக்குமார் மகனின் வைரல் கவிதை!
மறைந்த திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன், பொங்கல் பண்டிகைக்காக எழுதியுள்ள கவிதைத் தொகுப்பு, வைரல் ஆகியதோடு அப்பாவின் பெயர் சொல்லும் பிள்ளை என நிரூபித்துள்ளார்.
நினைத்து நினைத்து பார்த்தாலும் நெருங்கி அருகில் வர முடியாத இடத்தில் சென்று விட்ட நவயுகக் கவிஞன் நா.முத்துக்குமார். தமிழில் வார்த்தைகளே இல்லை பாடலெழுத என்று தங்கிலீஷில் சினிமா பாட்டுகள் பல் இலிக்கையில் தமிழ் வரிகளோடு உணர்வுகளையும் கலந்த பாடலை எழுதி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் நா. முத்துக்குமார்.
தாலாலட்டு என்றாலே அம்மா தான் என்று இருந்த காலத்தில் “ஆராரிராரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு...” என்றும் தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தையின் அன்பின் முன்னே என்று திரைப்பாடல்கள் மூலம் தந்தை பாசமூட்டியவர். பெண் பிள்ளைகளைச் சுமையாக நினைப்பவர்களுக்கு மத்தியில் அப்பா – மகள் உறவை ’ஆனந்த யாழை மீட்டுகிறாள்...’ பாடல் மூலம் தன்னுடைய வைர வரிகளால் ஜொலிக்க வைத்தவர் நா.முத்துக்குமார்.
கவிஞர், தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர் என்று அறியப்பட்ட இவர், 1,500 பாடல்களுக்கு மேல் எழுதி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். 'பட்டாம்பூச்சி விற்பவன்', 'அணிலாடும் முன்றில்' உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். சிறந்த பாடல்களுக்கான தேசிய விருது, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் குவித்தவர் நா.முத்துக்குமார்.
கட்டுரைகள், ஹைக்கூ கவிதைகள், 'சில்க் சிட்டி' என்ற நாவலையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். புகழின் உச்சியில் இருந்தவர், திடீரென அந்தத் துக்க செய்தியை நமக்கு பரிசளித்துவிட்டு மறைந்தார். 41 வயதான நா. முத்துக்குமார் 2016ம் ஆண்டில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு ஆதவன் என்ற மகனும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
நா. முத்துக்குமாரின் இடம் யாராலும் நிரப்ப முடியாத இடமாகவே இன்றும் இருக்கிறது. அவருடைய இடத்தை அவரின் உதிரத்தில் உருவெடுத்த அவரின் மகன் நிறைவேற்றுவார் என்ற ஆறுதலைத் தந்திருக்கிறது ஆதவன் எழுதியுள்ள பொங்கல் பண்டிக்கான கவிதை.
7ம் வகுப்பு படிக்கும் ஆதவன், போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தமிழர்த் திருநாளிற்காக தனது எண்ணத்தில் வண்ணம் தீட்டியுள்ள கவிதை வரிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆதவன், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன் வயதுக்கே உரிய பாணியில் அந்த கவிதை எழுதியுள்ளார். போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அனைத்திற்கும் ஒவ்வொன்றாக கவிதை எழுதியுள்ளார்.
ஆதவனின் கவிதை வரிகள் :
போகி
நீ உன் ஆணவத்தை அன்பில் எரி!
இதைச் செய்பவனுக்கு வாழ்க்கை சரி!
கோயிலில் இருக்கும் தேரு!
பானையைச் செய்யத் தேவை சேறு!
வீட்டில் இருக்கும் வீண் பொருட்களை வெளியே போடு!
இல்லையென்றால் வீடு ஆகிடும் காடு!
தமிழரின் பெருமை மண்வாசனை!
இந்தக் கவிதை என் யோசனை...!
தைப்பொங்கல்
உழவர்களை அண்ணாந்து பாரு!
உலகத்தில் அன்பைச் சேரு!
அவர்களால்தான் நமக்குக் கிடைக்கிறது சோறு!
அவர்கள் இல்லையென்றால் சோற்றுக்குப் பெரும் பாடு!
உழவர்கள் நமது சொந்தம்!
இதைச் சொன்னது தமிழர் பந்தம்!
பொங்கல் இன்றும் என்றும் சொல்லும்!
இவர்கள் இல்லையென்றால் கிடைக்காது நெல்லும்...!
மாட்டுப் பொங்கல்
வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு!
நீ உன் வேட்டியைத் தூக்கிக் கட்டு!
கரும்பை இரண்டாக வெட்டு!
நீ உன் துணிச்சலுக்குக் கை தட்டு!
சிப்பிக்குள் இருக்கும் முத்து!
மாடு தமிழர்களின் சொத்து!
மாடு எங்கள் சாமி!
நீ உன் அன்பை இங்கு காமி...!
காணும் பொங்கல்
உறவினர்கள் வந்தார்களா என்று பாரு!
உலகத்தில் நல்ல நண்பர்களைச் சேரு!
நீ அழகாகக் கோலம் போடு!
உன் நல்ல உள்ளத்தோடு
நீ உனக்குள் கடவுளைத் தேடு!
இல்லையென்றால் நீ படுவாய் பாடு!
பெண்ணைக் கண்ணாகப் பாரு!
இல்லையென்றால் கிடைக்காது சோறு...!
சிறுவன் ஆதவனின் இந்தக் கவிதை வரிகளை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். நா.முத்துக்குமார் 2011ம் ஆண்டிலேயே தனது மகனுக்காக ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில்,
உனக்கு பிடித்ததை செய், தமிழை நேசி என்று தனக்கே உரிய பாணியில் மகனுக்கு உருக்கமான பல விஷயங்களைச் சொல்லி இருந்தார். அன்று அவர் என்ன நினைத்து அந்தக் கடிதத்தை எழுதினாரோ இன்று அவருடைய மகன் அப்பா வழியில் தப்பாமல் வந்தவனாக அப்பாவின் பெயர் சொல்லும் பிள்ளை என்ற நற்பெயரை பெற்றிருக்கிறார்.
இந்த கவிதை தொகுப்பின் மூலம் தமிழ் உலகிற்கு ஜூனியர் நா.முத்துக்குமார் வருவதற்கான விடிவெள்ளி தோன்றி இருக்கிறது.