நரேந்திர மோடி பாராட்டிய 84 வயது கர்நாடக முதியவர் யார்?
காமே கவுடா கர்நாடகாவின் மண்டியா கிராமத்தில் தனி ஆளாக சாதித்தது என்ன? இவரை ஏன் பிரதமர் பாராட்டினார் என தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இந்தச் சூழலில் கர்நாடகாவில் உள்ள 84 வயதான முதியவர் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் விதத்தில் 16 குளங்களை தனிப்பட்ட முயற்சியால் வெட்டியுள்ளார்.
காமே கவுடா கர்நாடகாவின் மண்டியாவில் உள்ள தாசனதொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இங்கு கடந்த நாற்பதாண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்ததில்லை.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ வானொலி உரையில் காமே கவுடாவைப் பாராட்டியுள்ளார்.
“காமே கவுடா ஒரு சாதாரண விவசாயி. இருப்பினும் அசாதாரண மனிதர். அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தும் செயலை சாதித்துக் காட்டியுள்ளார்,” என்று மோடி பாராட்டியுள்ளார்.
காமே கவுடா விருதுகளையோ அங்கீகாரத்தையோ எதிர்பார்க்கும் மனிதர் அல்ல. பிரதமர் வானொலி உரையில் தன்னைப் பற்றி குறிப்பிட்டது மகிழ்ச்சியளிப்பதாக `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் காமே கவுடா தெரிவித்துள்ளார்.
“தாசனதொட்டியைச் சேர்ந்த ஒருவரது செயலை டெல்லியில் இருக்கும் ஒருவர் அங்கீகரித்துப் பாராட்டுகிறார். மோடிக்கும் என்னைப் போலவே குளங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார் காமே கவுடா.
2018-ம் ஆண்டு இவருக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் தனது கிராமத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்குப் பேருந்தில் பயணிக்க இலவச பாஸ் வேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர் குமாரசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
சமீபத்தில் கர்நாடகா சாலை போக்குவரத்துக் கழகம், இவர் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்கு பாஸ் வழங்கியுள்ளது.
நீர் நெருக்கடியிலிருந்து கிராமத்தை பாதுகாத்துள்ளார்
நாற்பதாண்டுகளுக்கு முன்பு தாசனதொட்டியில் கடும் நீர் பற்றாக்குறை இருந்தது. ஆண்டு முழுவதும் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும். மழைநீர் பெரும்பாலும் ஆவியாகிவிடுவதால் நீர் நெருக்கடி இருந்தது.
இதற்கு முன்பு ‘தி பெட்டர் இந்தியா’-விடம் இவரது மருமகள்,
“அவர் ஆடுகள் மேய்க்கும்போது விலங்குகளும் பறவைகளும் தண்ணீர் குடிக்க குளம், குட்டை போன்றவை இல்லை என்பதை கவனித்தார். இதனால் விலங்குகள் அவதிப்படுவதைக் கண்டார். அதற்காகவே இவர் குளம் வெட்டத் தொடங்கினார்,” என்று கூறியுள்ளார்.
காமே கவுடா தனது ஆடுகளை விற்றார். சொந்த வீடு கட்டுவதற்கான பணியை தள்ளிப் போட்டார். இந்தத் தொகையையும் சேமிப்பையும் கொண்டு குளம் வெட்டினார். இன்றளவும் தினமும் இந்தக் குளங்களைப் பார்வையிடுகிறார்.
காமே கவுடாவின் முயற்சிகளைக் கற்று வியந்த கன்னட திரைப்பட இயக்குநர் தயால் பத்பநாபன் ‘The Good Shepard’ என்கிற பெயரில் ஆவணப்படம் எடுக்கிறார். இந்தப் படம் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.
“பல்வேறு தளங்களில் ஆவணப்படுத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். தேசிய மற்றும் சர்வதேச ஆவணப்பட விழாக்களுக்கு அனுப்பவும் உள்ளேன். இவரது சேவையை உலகளவில் கொண்டு சேர்க்க விரும்புகிறேன்,” என்று தயால் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்துள்ளார்.
காமே கவுடா குளம் வெட்டும் பணிகள் மட்டுமல்லாது பசுமைப் போர்வையை அதிகரிக்கச் செய்யும் வகையில் அவ்வப்போது மரங்களையும் நட்டு வருகிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA